நந்தன் கால்வாய் சீரமைக்க நிதி ஒதுக்காததால் விவசாயிகள் ஏமாற்றம்

செஞ்சி: நடந்து முடிந்த சட்டசபை கூட்டத்தொடரில் ‘பெஞ்சல்’ புயலால் பாதிக்கப்பட்ட நந்தன் கால்வாய் பகுதிகளை சீரமைக்க நிதி ஒதுக்காதது விழுப்புரம் மாவட்ட விவசாயிகள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
விழுப்புரம் மாவட்டம் பனமலை ஏரிக்கு திருவண்ணாமலை மாவட்டம் கீரனுார் அணைக்கட்டில் இருந்து துறிஞ்சல் ஆற்று தண்ணீரை கொண்டுவர 37.86 கி.மீ., துாரத்திற்கு நந்தன் கால்வாய் அமைத்தனர்.
இதன் மூலம் இரண்டு மாவட்டங்களிலும் உள்ள, 36 ஏரிகளுக்கு தண்ணீர் கிடைக்கும் 6,654 ஏக்கர் நிலம் பாசனம் பெறும்.
விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டத்திற்கான முக்கிய நிலத்தடி நீர் ஆதாரமாகவும் இருந்து வருகிறது.
கடந்த, 1970ல் பூர்வாங்க பணிகள் துவங்கி, 1976 ல் பணிகள் முடிக்கப்பட்டன. அப்போது ரூ.1.28 கோடி நிதி ஒதுக்கப்பட்டது.
பின்னர், நந்தன் கால்வாயை பராமரிக்காமல் கைவிட்டதால் பல ஆண்டுகள் மண் சரிந்து, செடி, கொடிகள் வளர்ந்து புதர்மண்டி இருந்தது.
துறிஞ்சல் ஆற்றில் இருந்து பாதி துாரம் கூட தண்ணீர் வராமல் திட்டம் செயலிழந்து இருந்தது. கடந்த, 2019ம் ஆண்டு நந்தன் கால்வாய் பாதுகாப்பு இயக்கத்தினர், தன்னார்வலர், பொது மக்கள் உதவியுடன் சீரமைப்பு பணிகளை செய்து வருகின்றனர்.
இந்த ஆண்டு பணிகள் துவங்கி, ரூ.6 லட்சம் மதிப்பில் 25 கி.மீ., துாரத்திற்கு துார்வாரும் பணிகளை செய்துள்ளனர். எஞ்சி உள்ள பகுதியில் பணிகளை மேற்கொள்ள நிதி ஆதாரம் திரட்டி வருகின்றனர். கடந்த ஆண்டு பெஞ்சல் புயலின் போது வந்த பெருவெள்ளம் கால்வாயின் பல பகுதிகளை சிதைத்து விட்டது. இதை சரி செய்ய நீர் ஆதார துறையினர் அரசுக்கு ரூ.74 கோடி மதிப்பில் முன்மொழிவு அனுப்பினர்.
அப்போது அரசு நிதி ஒதுக்க வில்லை. இதன் பிறகு திட்டமதிப்பை குறைத்து ரூ.48 கோடிக்கு புதிய முன்மொழிவை அனுப்பினார்கள்.
இதற்கு பட்ஜெட் கூட்டத் தொடரில் நிதி ஒதுக்கப்படும் என விவசாயிகள் எதிர்பார்த்தனர். ஆனால் நிதி ஒதுக்கப்படாமல் பட்ஜெட் கூட்டத்தோடர் முடிவடைந்தது விழுப்புரம் மாவட்ட விவசாயிகள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.