Crime, law and justice
ஐகோர்ட்டில் தமிழை வழக்காடும் மொழியாக்க சட்டசபையில் தீர்மானம்: ஒருமனதாக நிறைவேறியதாக சபாநாயகர் அறிவிப்பு

'சென்னை உயர் நீதிமன்றத்தில், தமிழை வழக்காடும் மொழியாக அனுமதிக்க வேண்டும்' என, முதல்வர் விஜய் கொண்டு வந்த தீர்மானம், சட்டசபையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
சட்டசபையில் நேற்று, தனி தீர்மானத்தை முன்மொழிந்து, முதல்வர் விஜய் பேசியதாவது:
தமிழை, நாம் வெறும் மொழியாக மட்டும் கருதுவதில்லை. அது உணர்வோடும் உயிரோடும் ஒன்றிணைந்த அடையாளம். அதனால், சென்னை உயர் நீதிமன்றத்திலும் தமிழை முதன்மை மொழியாக அங்கீகரிக்க வேண்டியது காலத்தின் கட்டாயம். உயர் நீதிமன்றத்தில் ஆங்கிலத்திற்கு சமமான வாய்ப்பை தமிழுக்கு வழங்க வேண்டும். இதுதொடர்பாக, 2006ல் தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி, மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டு நிராகரிக்கப்பட்டது.
ஒரு சாதாரண குடிமகன் தனது வாழ்க்கை, நிலம், குடும்பம், சொத்து, வேலை தொடர்புடைய வழக்கு நீதிமன்றத்தில் நடக்கும் போது, தாய்மொழியில் புரிந்துகொள்ள முடிந்தால், நீதி பெறுவது வலுப்பெறும். நீதி பரிபாலனத்தில் மக்களும் தங்களது தாய்மொழியில் பங்கெடுப்பதால், நீதி தேவதையின் கரம் வலுப்பெறும். எனவே நீதியின் மொழி மக்களுக்கு புரியும் மொழியாக இருப்பது, ஜனநாயகத்தின் அடிப்படை நோக்கம். தமிழை முதன்மை மொழியாக அங்கீகரிக்க வேண்டும்.
தமிழில், மனுக்கள், ஆவணங்கள், வாதங்களை சமர்ப்பிப்பதற்கு உரிய நடைமுறையை உருவாக்க வேண்டும். தீர்ப்புகள், உத்தரவுகளை அதிகாரப்பூர்வமாக தமிழில் வழங்க வேண்டும். இந்திய அரசியலமைப்பு சட்டப்படி, மாநில கவர்னரால் அனுப்பப்படும் முன்மொழிவுகள் மீது, தேவையான சட்ட நடவடிக்கைகளை, மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும்.
இது எந்த மொழிக்கும் எதிரான கோரிக்கையல்ல; இது, பன்மொழி தன்மையை மதிக்கும் கோரிக்கை. இது ஆங்கிலத்தை அகற்றும் கோரிக்கையல்ல; இது தமிழுக்கு உரிய அரசியலமைப்பு சட்ட வாய்ப்பை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை. தமிழக சட்டசபையில் நிறைவேற்றி அனுப்பப்படும் இந்த தீர்மானத்தை, மத்திய அரசும், ஜனாதிபதியும் விரைந்து செயல்படுத்த வேண்டும். இவ்வாறு முதல்வர் பேசினார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)