“கரடிகளிடமிருந்து எங்களைக் காப்பாற்றுங்கள்” - வனத்துறைக்கு பள்ளி மாணவன் கோரிக்கை!

குடியிருப்பு பகுதிகளில் கரடி சிறுத்தை உள்ளிட்ட வன விலங்குகள் இரண்டு மூன்று என்று இரவு நேரங்களில் கூட்டமாக நடமாடி வருவதால் பகல் என்றில்லாமல் இரவு நேரங்களில் கூட வீட்டை விட்டு வெளியே வரவே அஞ்சி ஒடுங்கியுள்ளனர். இது தொடர்ந்து நடப்பதால் உயிருக்கு உத்தரவாதமில்லை என்ற அச்சத்தில் பொழுதைக் கழித்த வண்ணமிருக்கின்றனர் அந்தப் பகுதி மக்கள்.
நெல்லை மாவட்டத்தில் தென் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் யானைகள், கரடி, சிறுத்தை, கடமான், சிங்கவால் குரங்கு, உடும்பு, காட்டுப்பன்றி, செந்நாய் கூட்டம், மிளா உள்ளிட்ட வனவிலங்குகள் வசித்து வருகின்றன. தற்போது கொடிய கோடை என்பதால் தண்ணீர், இரை போன்ற உணவு வகைகளைத் தேடி அவ்வப்போது இந்த வன விலங்குகள் தரையிறங்கி வருகின்றன. அவைகள் அடிவாரத்தை ஒட்டியுள்ள வி.கே.புரம் வட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான கணேஷ் கார்டன், முதலியார்பட்டி, டாணா வி.கே.புரம், பாபநாசம் பகுதியின் ஒதுக்குப்புரம் உள்ளிட்ட பகுதிகளில் அவ்வப்போது கரடிகள் சிறுத்தைகள் உள்ளிட்ட வன விலங்குகள் குடியிருப்பு பகுதிகளில் நடமாடி வருவது வழக்கமாகி வருகிறது. உயிருக்கு உலை வைக்கிற வனவிலங்குகள் நடமாட்டம் பற்றி இந்தப் பகுதி மக்கள் தொடர்ந்து புகார் தெரிவித்து வந்திருக்கின்றனர். ஆனால் வனத்துறை உரிய வகையில் நடவடிக்கை எடுக்கவில்லையாம்.
இதனிடையே தற்போது 3 கரடிகள் ஒரே நேரத்தில் இரவு வேளையில் மேற்படி குடியிருப்பு பகுதிகளில் சுற்றி வருவதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். குறிப்பாக இரவு நேரங்களில் வேலை முடிந்து விடு திரும்பும் விவசாயக் கூலிகள் அத்தியாவசியத் தேவையின் பொருட்டு பொருட்கள் வாங்க வெளியே செல்லும் பொது மக்களும் ஒருவித அச்சத்துடனேயே சென்று வரவேண்டிய சூழல். இந்தக் கரடி கூட்டங்கள் குடியிருப்பு பகுதிக்குள் அதிகமாக நடமாடுவதால் குழந்தைகள், முதியோர்கள் உள்ளிட்டோர்களை வெளியே அனுப்புவதற்கு தயக்கம் காட்டி வருகின்றனர். ஏனெனில் இது ஒருமுறை இருமுறையல்ல தொடர்ந்து நடக்கிற சம்பவம் என்பதால் மக்களும் வேறு வழியின்றி இரவு பொழுதுசாயும் முன்பே ஊரடங்கி விடுகின்றனர்.
தவிர கரடிகள் உணவு மற்றும் தண்ணீரைத் தேடி குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்துவிடும் என்கிற அச்சமும் நிலவி வருகிறது. அதோடு இரவில் இரை தேடிவரும் இந்த கரடிகள் வழியோரத்தில் உள்ள சிறுசிறு கோவில்களின் உள்ளே நுழைந்து அங்கு எரிகிற தீபத்தின் எண்ணெய் முழுவதையும் குடித்துவிட்டு செல்வது வாடிக்கையான ஒன்றாகும். வி.கே.புரம் பகுதியில் தொடர்ந்து கரடிகளின் நடமாட்டம் காணப்பட்டு வருகிறது. தற்போது 20க்கும் மேற்பட்ட கரடிகள் இந்தப் பகுதியில் உலா வருகிறது. கடந்த காலங்களில் கரடி தனியாக ஊருக்குள் நடமாடியது. தற்போது இரண்டு அல்லது மூன்று கரடிகளாக உலா வருகிறது. சில கரடிகள் குட்டிகளுடன் சாலையில் வருவதை பொதுமக்கள் பார்த்தால் அவர்களை கரடிகள் விரட்டி விரட்டி தாக்குகிறது.
அதே போல் கூட்டமாக வரும் கரடிகளும் மக்களை அச்சுறுத்துகிறது எனவே கரடிகள் குடியிருப்பு பகுதிக்குள் வருவதை தடுக்க வனத்துறையினர் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதோடு கண்காணிப்பு பணியிலும் பொதுமக்களின் பாதுகாப்பினைக் கருத்தில் கொண்டு ஈடுபடுவதோடு கரடிகளின் நடமாட்டத்தைத் தடுக்க வேண்டும் அவைகளைக் கூண்டு வைத்துப் பிடிக்க வேண்டும் என்று வனத்துறைக்கு கோரிக்கை வைத்ததாக அகஸ்தியர் பட்டி வி.கே.புரம் டாணா பகுதிவாசிகள் தெரிவிக்கின்றனர்.
மலையடிவாரப் பகுதியான திருப்பதியாபுரம் பகுதியில் அதிகாலை இரவு நேரங்களில் கரடிகள் சர்வ சாதாரணமாக நடமாடி வருகிறது. இரைதேடி ஊருக்குள் வரும் கரடிகள். சாலையில் செல்லும் பொதுமக்களை விரட்டுவதோடு சில சமயங்களில் தாக்கியும் வருகிறது. கடந்து 15ம் தேதி இரவு இரைதேடி ஊருக்குள் நடமாடிய சுமார் 7 வயது கரடி ஒன்று பைக்கில் சென்ற முத்துக்குமார் என்பவரை முட்டித் தள்ளியிருக்கிறது. விழுந்த வேகத்தில் வலது காலில் காயம் காயம்பட்டுப்போன அவரது அலறல் குரல் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்ததால் அந்த ஒற்றைக் கரடி அங்கியிருந்து தப்பியிருக்கிறது. இதைத் தொடர்ந்து அடுத்தடுத்த நாட்களிலும் இரவு நேரங்களில் கரடிகள் நடமாடியதைக் கண்ட பொதுமக்கள் இப்பகுதியின் ஏராளமான கரடிகள் சுற்றித் திரிவதால் அவற்றைக் கூண்டு வைத்து பிடித்து வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை வேண்டும் என்று கோரிக்கை விடுத்த வண்ணம் இருக்கின்றனர்.
மேலும் இந்தக் கரடிகளின் நடமாட்டத்தால் பள்ளி செல்லும் மாணவ மாணவிகள் கூட உயிரைக் கையில் பிடித்துக்கொண்டுதான் சென்று வரவேண்டிய நிலை. இதனிடையே வி.கே.புரம் டாணா அனவன் குடியிருப்பைச் சேர்த்த சந்திரன் என்பவரின் மகனும் வி.கே.புரம் தனியார் மேல்நிலைப் பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வரும் மாணவனான நரேந்திர குமார் வனத்துறையினருக்கு வீடியோ மூலம் கண்ணீர் கோரிக்கை விடுத்துள்ளார்.
அதில் அந்த மாணவன், எங்கள் பகுதி மலையடிவாரத்தில் இருப்பதால் நாள்தோறும் கரடி, சிறுத்தை போன்ற வன விலங்குகளின் தொந்தரவு அதிக அளவு உள்ளது. இதனால் நாங்கள் சுதந்திரமாக வெளியே நடமாட முடியாமல் அச்சத்திலும் பீதியிலுமாய் இருக்கிறோம். படிப்பில் கவனம் செலுத்த முடியவில்லை. எங்கள் கிராமத்தவர்கள் மற்றும் என்போன்ற மாணவ மாணவிகள் உயிருக்கு உத்தரவாதம் இல்லாத நிலையில் பள்ளி சென்று வருகிறோம் எங்களை காப்பாற்றுங்கள். வனத்துறை அதிகாரிகளே கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என்று கண்ணீருடன் அந்த வீடியோவில் வனத்துறையினருக்கு அந்த மாணவன் வேண்டுகோள் விடுத்துள்ளது ட்ரோல் ஆகிக்கொண்டிருக்கிறது.
இதுகுறித்து வனச்சரகர்களிடம் கேட்டபோது, கரடிகள் பற்றிய புகார் வருகிற போது நாங்களும் அவ்வப்போது கூண்டுவைத்து பிடித்து அவைகளை அடர்வனப் பகுதிகளில் விட்டுவிடுவோம். ஆனாலும் கோடை என்பதால் தொடர்ந்து வன விலங்குகள் இரை தேடி தரையிறங்குவது எங்களுக்கு சவாலாக இருக்கிறது. ஆனாலும் தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறோம் என்கிறார்கள். பல வருடங்களாக மலைப்பகுதி ஏரியாக்களுக்கு அச்சுறுத்தலாக இருந்து வருகிற கரடி மற்றும் சிறுத்தைகள் கூட்டங்களை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என்று அவ்வப்போது பகுதி மக்கள் வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்தும் கவனிக்கப்படாத நிலையில் தற்போது பள்ளிச் சிறுவன் ஒருவன் வீடியோவில் கண்ணீர் கோரிக்கை விடுத்தது நெல்லை அம்பை வி.கே.புரம் பகுதியில் பெரிய பரபரப்பையும் ஏற்படுத்தியதோடு பரபர பேசு பொருளாகவும் மாறியிருக்கிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)
