Politics
கொடைக்கானலில் வனவிலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் சுற்றுலாப் பயணிகள்; வனத்துறை எச்சரிக்கை

கொடைக்கானலில் வனவிலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் சுற்றுலாப் பயணிகள் மீது வனத்துறை நடவடிக்கை.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் 60 சதவிகிதம் வனப்பகுதியாக உள்ளது. இங்கு ஏராளமான வன விலங்குகளும், அரிய வகை பறவையினங்களும் வசித்து வருகின்றன. மேலும் இங்கு நிலவும் குளுமையான காலநிலையை அனுபவிக்க சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்து உள்ளது.
குறிப்பாக கொடைக்கானல் வரக்கூடிய சுற்றுலாப்பயணிகள் பிரதான மலை சாலைகளை மட்டும் பயன்படுத்தி கொடைக்கானலுக்கு வந்து செல்கின்றனர். இந்நிலையில் கொடைக்கானல் வரக்கூடிய சுற்றுலாப்பயணிகள் உணவு பண்டங்கள், பழங்களை சாலைகளில் வீசி செல்கின்றனர். மேலும் சாலையோரத்தில் அமர்ந்து மது பிரியர்களும் மது அருந்தி விட்டு அங்கேயே மது பாட்டில்களையும், தின்பண்டங்களையும் விட்டு செல்கின்றனர்.
இதனையடுத்து வனப்பகுதியை விட்டு வெளியேறும் குரங்குகள் சாலை ஓரங்களில் சுற்றுலாப்பயணிகள் விட்டு சென்ற தின்பண்டங்களை உண்பதுடன் மீண்டும் உணவு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் சாலையின் ஓரத்திலும், நடுவிலும் முகாமிடுவதால் வாகனங்களில் மோதி விபத்துகள் ஏற்பட்டு ஒரு சில நேரங்களில் உயிரிழந்தும் வருகின்றன.
மேலும் சாலையோரத்தில் உள்ள பீர் பாட்டில்களில் உள்ள பீரையும் குரங்குகள் அருந்தும் அதிர்ச்சியான புகைப்படங்கள் தற்போது வெளியாகி உள்ளது. இதனை வனத்துறை கவனம் செலுத்தி மலைச்சாலையில் குரங்குகளுக்கு உணவு அளிக்கக்கூடாது என எச்சரிக்கை பதாகைகளை வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வனவிலங்கு ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இது குறித்து வனத்துறை அதிகாரிகள் மலைச்சாலைகளில் குரங்குகளுக்கு உணவு வழங்கினால் வன உயிரின தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுப்பதுடன் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
