நாட்டு மாடுகளுக்கு 6 ஆயிரம் எக்டேர் மேய்ச்சல் நிலங்கள் விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் வனத்துறை தகவல்

தேனி: மாவட்டத்தில் 6000 எக்டேர் மேய்ச்சல் நிலம் உள்ளது. அங்கு நாட்டு மாடுகளை மேய்க்கலாம், வனத்திற்குள் அனுமதிக்க முடியாது என விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் வனத்துறையினர் தெரிவித்தனர்.
தேனியில் உள்ள ஸ்ரீவி., மேகமலை புலிகள் காப்பக அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடந்தது. மேகமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் விவேக் குமார் யாதவ் தலைமை வகித்தார். மாவட்ட வன அலுவலர் கிரண் முன்னிலை வகித்தார். விவசாயிகள் பேசியதாவது:
சரத்குமார்: ஆண்டிபட்டி மற்றும் சுற்றுப்பகுதிகளில் நாட்டு மாடுகளை வனப்பகுதிக்குள் மேய்ச்சலுக்கு அழைத்து சென்றால் வனத்துறையினர் தடுக்கின்றனர். அவர்கள் மீது பொய் வழக்கு பதிவு செய்கின்றனர்.
கென்னடி: ஜமீன் காலத்தில் இருந்து அனுமதி பெற்று நாட்டு மாடுகளை மேய்த்து வருகிறோம். தற்போது நாட்டு மாடுகளை மேய்க்க விடாமல் வனத்துறை தடுக்கிறது. வனப்பகுதியில் வசிப்பவர்கள், மாடு மேய்ப்பவர்களுக்கு வன உரிமை சட்டத்தின் கீழ் பட்டா வழங்க வேண்டும்.
வ னத்தில் அ னுமதி இல்லை மாவட்ட வன அலுவலர்: வனப்பகுதிக்குள் நாட்டு மாடுகளை மேய்ப்பதால் வன விலங்குகளின் உணவு சங்கிலி பாதிக்கப்படுகிறது. இதனால் கிராமங்கள், விளைநிலங்களை வனவிலங்குகள் சேதப்படுத்துகின்றன. மாவட்டத்தில் மொத்தம் 6,000 எக்டேர் மேய்ச்சல் நிலம் உள்ளது. அதில் நாட்டு மாடுகளை மேய்க்கலாம். ஆனால் வனப்பகுதிக்குள் நாட்டு மாடுகளுக்கு அனுமதி கிடையாது.
சிவராமன், ரேஞ்சர், தேனி: வனத்துறை மக்களுக்கு எதிராக செயல்படாது. வனத்துறையும், மக்களும் சட்டத்தை பின்பற்ற வேண்டும். வனப்பகுதிக்கு நில உரிமை வேண்டும் என்றால் அதற்கான ஆதாரங்களை சமர்பிக்க வேண்டும்.
பிற துறை அதிகாரிகள் ஆப்சென்ட் ஸ்ரீவி., மேகமலை புலிகள் காப்பக அலுவலகத்தில் மாதந்தோறும் நடக்கும் விவசாயிகள் குறைதீர் கூட்டத்திற்கு அனைத்து அரசு துறை அலுவலர்களுக்கும் பங்கேற்க அறிவுறுத்தப்படுகிறது. எனினும் இதுவரை எந்த கூட்டத்திலும் மின்துறை, வேளாண் தவிர மற்ற பிற துறை அலுவலர்கள் பங்கேற்கவில்லை. அடுத்த கூட்டத்திலாவது அனைத்து துறை அதிகாரிகளும் பங்கேற்க கலெக்டர் உத்தரவிட வேண்டும் என வனத்துறையினர், விவசாயிகள் வலியுறுத்தினர்.