Economy, business and finance
இந்திய ஆடைகளுக்கு பிரீமியம் சந்தையில் புதிய வாய்ப்பு: பிரான்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் ஏ.இ.பி.சி. வரவேற்பு

திருப்பூர்:இந்திய ஜவுளி மற்றும் ஆயத்த ஆடைத் துறையை சர்வதேச பிரீமியம் சந்தைகளுடன் இணைக்கும் வகையில், பாரத் டெக்ஸ் டிரேட் பெடரேஷன் மற்றும் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த சர்வதேச பேஷன், ஜவுளி மற்றும் கொள்முதல் தளம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
பாரீசில் நடந்த பிரீமியம் விஷன் கண்காட்சியில், ஏ.இ.பி.சி. தலைவர் சக்திவேல் மற்றும் பிரீமியர் விஷன் நிறுவன பேஷன் பிரிவு தலைமைச் செயல் அதிகாரி புளோரன்ஸ் ரூசன் ஆகியோர் இடையே, மத்திய ஜவுளி அமைச்சக செயலாளர் நீலம் ஷமி ராவ், கைத்தறித் துறை மேம்பாட்டு கமிஷனர் பீனா முன்னிலையில் ஒப்பந்தம் ஏற்பட்டது.
இதன் வாயிலாக, இந்திய ஜவுளி உற்பத்தியாளர்கள், ஆயத்த ஆடை ஏற்றுமதியாளர்கள், வடிவமைப்பாளர்கள் மற்றும் கைவினைஞர்கள் சர்வதேச வர்த்தகர்கள், முன்னணி பேஷன் நிறுவனங்கள் மற்றும் பிரீமியம் கொள்முதல் நிறுவனங்களுடன் நேரடியாக இணையும் வாய்ப்பு உருவாகும். அளவு அடிப்படையிலான ஏற்றுமதியைத் தாண்டி, உயர்மதிப்பு, வடிவமைப்பு சார்ந்த மற்றும் பிரீமியம் பேஷன் பொருட்கள் ஏற்றுமதி அதிகரிக்கும். உலகளாவிய பேஷன்கள், சந்தைத் தேவைகள் மற்றும் நிலைத்தன்மை சார்ந்த தயாரிப்புகள் குறித்த அந்நிறுவனத்தின் சர்வதேச அனுபவம், இந்திய நிறுவனங்களுக்கு பயன் தரும்.
இது தவிர இந்திய - ஐரோப்பிய ஒன்றிய தடையற்ற வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை நிறைவுற்றுள்ள நிலையில், இந்த ஒப்பந்தம் மேலும் முக்கியத்துவம் பெறுகிறது. ஐரோப்பிய ஒன்றியத்தின் கடந்தாண்டு ஜவுளி மற்றும் ஆயத்த ஆடை இறக்குமதி 292.8 பில்லியன் டாலர். இந்தியாவின் ஏற்றுமதி ஐரோப்பியாவுக்கு 10.4 பில்லியன் டாலர்.
இந்த ஒப்பந்தம் இந்திய ஜவுளித் துறையை உலகச் சந்தைகளுடன் மேலும் நெருக்கமாக்கும். நமது பாரம்பரிய ஜவுளித் திறனை எடுத்துக்காட்டும். நிலைத்தன்மை மற்றும் பொறுப்பான உற்பத்தியை முன்னெடுத்து, போட்டித்திறன் மிக்க ஜவுளி உற்பத்தி மையமாக இந்தியாவின் நிலையை வலுப்படுத்தும். இதன் முக்கிய அம்சங்கள் - இரு வர்த்தகக் கண்காட்சிகளிலும் கண்காட்சியாளர்கள், பிரதிநிதிகள் மற்றும் நிபுணர்களின் பரஸ்பர பங்கேற்பு மற்றும் கூட்டு ஏற்றுமதி மேம்பாட்டு நிகழ்ச்சிகள்; சர்வதேச சந்தைத் தகவல் பரிமாற்றம்.
பாரம்பரிய ஜவுளி மற்றும் கைவினைத் திறன்களை சர்வதேச பேஷன் மற்றும் ஆடம்பர சந்தைகளில் காட்சிப்படுத்துதல் ஆகியன உள்ளன. இதுதவிர, ஒருசிறப்பு நிகழ்வு, 2027 ஜன. மாதம் நடைபெறும். அதில், நமது கை தையல், கைத்தறி மற்றும் பாரம்பரிய ஜவுளி நுட்பங்கள், பிரெஞ்சு ஜவுளிப் பாரம்பரியத்துடன் இணைந்து காட்சிப்படுத்தப்படும். இந்த ஒப்பந்தத்தால் இந்திய ஜவுளி மற்றும் ஆயத்த ஆடைத் துறையை நிலைத்தன்மை, புதுமை மற்றும் உயர்மதிப்பு கொண்ட சர்வதேச கொள்முதல் மையமாக மாற்றுவதற்கான வாய்ப்பு உருவாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஒப்பந்தத்தால் இந்திய ஜவுளி மற்றும் ஆயத்த ஆடைத் துறையை நிலைத்தன்மை, புதுமை மற்றும் உயர்மதிப்பு கொண்ட சர்வதேச கொள்முதல் மையமாக மாற்றுவதற்கான வாய்ப்பு உருவாகும்