அங்கே அப்படி... இப்படி இப்படி! நகராட்சி கமிஷனர், இன்ஜினியர் மீது புகார் கவுன்சிலர்கள் முற்றுகையால் பரபரப்பு
திருமுருகன்பூண்டி:திருமுருகன்பூண்டி நகராட்சியில் மக்களுக்கான வளர்ச்சி பணிகள் எதுவும் முறையாக நடைபெறவில்லை எனக் கூறி, நகராட்சி தலைவர் குமார் தலைமையில் கவுன்சிலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து, நகராட்சி தலைவர் மற்றும் கவுன்சிலர்கள் கூறியதாவது:
நகராட்சிக்கு நிரந்தர கமிஷனராக பாலமுருகன் பொறுப்பேற்ற பின், மன்றக் கூட்டம் இதுவரை நடத்தப்படவில்லை. வரும் 24-ம் தேதி பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளுக்கான டெண்டர் நடைபெற உள்ளதால், அதற்கு முன்னதாகவே, மன்றக் கூட்டத்தை நடத்தி தீர்மானங்களை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தினோம். இதனால், 29-ம் தேதி கூட்டம் நடத்தப்படும் என உறுதியளிக்கப்பட்டது.
பல வார்டுகளில் சாக்கடை உள்ளிட்ட பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளன. ஒதுக்கப்பட்ட நிதியில் தொடங்கப்படும் பணிகள், ஒவ்வொரு பணியும் முடிவடையும் நிலையில் விதிமுறைப்படி நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும். ஆனால், கமிஷனர் மற்றும் இன்ஜினியர் சம்பந்தப்பட்ட இடங்களை ஆய்வு செய்வதோ, மன்றக் கூட்டம் நடத்தி ஒப்புதல் பெறுவதோ இல்லை.
இதனால் பல வார்டுகளில் சாலை அமைத்தல், சாக்கடை மற்றும் வடிகால் கட்டுதல், குடிநீர் குழாய் பராமரிப்பு உள்ளிட்ட பணிகள் பாதியில் நிற்கின்றன. பல மாதங்களாக பணிகள் நடைபெறாததால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். டெண்டர் விடுவதற்காக தீர்மானம் நிறைவேற்ற வேண்டிய பல பணிகளையும் கமிஷனர் மற்றும் இன்ஜினியர் ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போடப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த விவகாரத்தில், கமிஷனர் மற்றும் இன்ஜினியர் மீது புகார் தெரிவிக்க, 21ம் தேதி மண்டல இயக்குனரை சந்திப்பது, 29-ம் தேதி கூட்டம் நடத்தாவிட்டால், அன்றே காத்திருப்பு போராட்டம் நடத்துவதும் எனவும் கவுன்சிலர்கள் முடிவெடுத்து உள்ளனர்.