என்.எல்.சி.,யின் புதிய சேர்மனாக பிரசன்னகுமார் ஆச்சார்யா பொறுப்பேற்பு
நெய்வேலி செப்.18–: என்.எல்.சி., இந்தியா குழுமத்தின் புதிய சேர்மனாக அந்நிறுவனத்தில் நிதித்துறை இயக்குனராக பணியாற்றி வந்த பிரசன்னகுமார் ஆச்சார்யா நேற்று பொறுப்பேற்றார்.
ஒடிசாவின் கேந்திராபாராவை பூர்வீகமாக கொண்ட இவர், மின்சாரம், சுரங்கம் மற்றும் உள்கட்டமைப்புத் துறைகளில் உள்ள முன்னணி இந்திய நிறுவனங்களில் கடந்த 30 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.
ஒடிசா உத்கல் பல்கலையில் வணிகவியலில் இளங்கலைப் பட்டம் மற்றும் ஒடிசா கட்டாக்கில் உள்ள எம்.எஸ். சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்றவர். ஒடிசா ரேவன்ஷா பல்கலையில் வணிகவியல் முதுகலைப் பட்டம் மற்றும் முதுநிலை வணிக நிர்வாகவியல் பட்டமும் பெற்றுள்ளார்.
இவர் இந்திய செலவு மற்றும் மேலாண்மைக் கணக்காளர்கள் நிறுவனத்தின் இணை உறுப்பினராகவும், இந்திய நிறுவனச் செயலாளர்கள் நிறுவனத்தின் அசோசியேட் உறுப்பினராகவும் உள்ளார்.
ஒடிசாவின் உத்கல் பல்கலையில் முனைவர் பட்டம் பெற்றுள்ள இவர், மின் உற்பத்தி, மின் பரிமாற்றம், மின் விநியோகம், சுரங்கப்பணி மட்டுமின்றி, மெட்ரோ ரயில் உள்கட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளின் நிபுணத்துவம் கொண்டனர். ரூ. 63 ஆயிரம் கோடி மதிப்பீட்டிலான சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் முக்கிய உள்கட்டமைப்புத் திட்டங்களில் இவர் முக்கிய பங்களிப்பை வழங்கியுவர் என்பது குறிப்பிடத்தக்கது.