Politics
கடல்சார் பாதுகாப்பில் புதிய சகாப்தம்: பிரதமர் மோடியின் நடவடிக்கையால் சீனா பெரும் அதிர்ச்சி

சீனாவின் ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து, தெற்காசியப் பிராந்தியத்தில் அமைதியையும் பாதுகாப்பையும் உறுதி செய்யும் அமைப்பாக மகாசாகர் மிஷன் உருவெடுத்துள்ளது.
இந்தியப் பெருங்கடலில் அமைந்திருக்கும் இலங்கையில், சீனாவின் ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்தி இந்தியாவின் அமைதியையும் பாதுகாப்பையும் உறுதி செய்வதற்காகச் செயல்படுத்தப்படும் 'மகாசாகர்' (MAHASAGAR) மிஷன் மற்றும் அதன் 5 முக்கிய உத்திகள் குறித்து பார்க்கலாம். மோடியின் இந்த அதிரடி நடவடிக்கை சீனாவை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளதாக பாதுகாப்பு வல்லுனர்கள் தெரிவிக்கிறார்கள்.
இந்தியப் பெருங்கடலில் முத்து போன்ற வடிவத்தில் அமைந்துள்ள இலங்கை, சர்வதேச கடல்சார் வர்த்தகத்தில் மிக முக்கியப் புள்ளியாக விளங்குவதோடு, இந்தியாவின் பாதுகாப்பிலும் முக்கியப் பங்கு வகிக்கிறது.
நீண்ட காலமாகவே இலங்கைக்கான பொருளாதார உதவிகள் என்ற பெயரில், கடன் வலையை விரித்து சீன ஆராய்ச்சி மற்றும் உளவுக்கப்பல்களை அங்கு அனுப்பி இந்தியாவைச் சீனா உளவு பார்த்து வந்தது. சீனாவால் ஏற்பட்ட கடுமையான பொருளாதார வீழ்ச்சியில் இருந்து மீள இலங்கைக்கு இந்தியா நிபந்தனையற்ற உதவிகளை வழங்கியது.
தற்போது பிரதமர் நரேந்திர மோடியின் 'மகாசாகர்' (MAHASAGAR - Mutual and Holistic Advancement for Security and Growth for All in the Region) தொலைநோக்கு திட்டத்தின் கீழ், இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கொழும்பு சென்று இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு உறவை மேலும் வலுப்படுத்தியுள்ளார். பின்வரும் 5 நடவடிக்கைகள் மூலம் இரு நாடுகளின் பாதுகாப்பு மேலும் வலுப்படுத்தப்பட்டு உள்ளது.
நிகழ்நேரக் கண்காணிப்பு (Real-Time Tracking):
சீனக் கப்பல்கள் ஆய்வு என்ற பெயரில் உளவு பார்ப்பதைத் தடுக்க, இந்தியா - இலங்கை இணைந்து புதிய அதிநவீன கண்காணிப்பு அமைப்பை உருவாக்குகிறது. இதன் மூலம் இரு நாடுகளின் கடற்படைகளும் கடலில் செல்லும் ஒவ்வொரு கப்பலையும் 24 மணி நேரமும் கண்காணிக்கும். இதனால் உளவுக்கப்பல்கள், போதைப்பொருள் கடத்தல் மற்றும் கடல்சார் பயங்கரவாதம் முற்றிலுமாகத் தடுக்கப்படும்.
இந்தியாவும் இலங்கையும் பரஸ்பரப் பாதுகாப்பு பார்ட்னர்களாக இணைந்து செயல்படும். இலங்கை ராணுவத்திற்கு இந்தியப் படைகள் நவீனப் பயிற்சிகளையும் தொழில்நுட்ப உதவிகளையும் வழங்கி, எழும் அச்சுறுத்தல்களைத் தொடக்கத்திலேயே அழிக்கும் வகையில் பாதுகாப்பை இரும்புக்கோட்டையாக மாற்றும்.
பொருளாதார நெருக்கடி மற்றும் கொரோனா காலத்தில் சீனா கைவிட்ட நிலையில், இந்தியா உடனடியாக பில்லியன் கணக்கில் நிதியுதவி செய்தது. ஹம்பாந்தோட்டை துறைமுகத்தைச் சீனா 99 ஆண்டுகள் குத்தகைக்கு எடுத்துக்கொண்ட நிலையில், இந்தியாவின் நிபந்தனையற்ற உதவி இலங்கையின் நம்பிக்கையை வென்றுள்ளது.
சர்வதேசக் கடல்வழி வர்த்தகம் பாதுகாப்பாக நடைபெறுவதை இரு நாடுகளும் உறுதி செய்யும். இலங்கைத் தயாரிப்புகளுக்கான மிகப்பெரிய ஏற்றுமதிச் சந்தையாக இந்தியாவை மாற்ற இலங்கை அரசு விருப்பம் தெரிவித்துள்ளது. இது இரு நாட்டுப் பொருளாதாரத்தையும் வலுப்படுத்தும்.
தமிழக மற்றும் இலங்கை மீனவர்களின் கைதுப் பிரச்சினையைக் சட்டக் கட்டுப்பாடுகளாகப் பார்க்காமல், மனிதநேய அடிப்படையில் அணுக இந்தியா முன்வந்துள்ளது. மேலும் கடல்சார் வளங்களை மேம்படுத்த 'புளூ எகனாமி' (Blue Economy) திட்டத்தில் இரு நாடுகளும் இணைந்து மீன்வளம், கடல்சார் உயிரித் தொழில்நுட்பம் மற்றும் சுற்றுலாத் துறைகளில் முதலீடு செய்யவுள்ளன.
இந்தியாவின் 'அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை' (Neighbourhood First) கொள்கையின் அடிப்படையில் அமைந்துள்ள இந்த 'மகாசாகர்' மிஷன், இந்தியப் பெருங்கடலில் சீனாவின் ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து, தெற்காசியப் பிராந்தியத்தில் அமைதியையும் பாதுகாப்பையும் உறுதி செய்யும் அமைப்பாக உருவெடுத்துள்ளது.
