Politics
"ஒரு எம்பி பதவிக்காக திமுக உடன் கூட்டணி வைத்தார்கள்" - பிரேமலதாவுக்கு வன்னி அரசு பதிலடி
தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதாவுக்கு அமைச்சர் வன்னியரசு பதிலடி கொடுத்திருக்கிறார். | minister vanni arasu slams premalatha statement

"அவர்கள் (தேமுதிக) பாஜகவோடு கடந்த காலங்களில் செயல்பட்டவர்கள்" - வன்னி அரசு.
தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதாவுக்கு அமைச்சர் வன்னி அரசு பதிலடி கொடுத்திருக்கிறார்.
விசிக தலைவரும், எம்பியுமான திருமாவளவன் சமீபத்தில் கலந்துகொண்ட திருமண நிகழ்ச்சியில் பேசியபோது, "நீண்டகாலம் திமுகவோடு பயணித்த கட்சிகளுக்கான தொகுதிகளைக் குறைத்து, திடுமெனக் கூட்டணியில் இணைந்த கட்சிக்கு யாரும் எதிர்பாராத அளவு தொகுதிகளைத் தந்தபோது, ஏற்கெனவே இருந்த கட்சிகளுக்கு மகிழ்ச்சி அளித்திருக்குமா?
நல்லுறவு, நல்லிணக்கத்தை கூட்டணிக் கட்சிகளுடன் பேணி பாதுகாக்கும் பொறுப்பு தலைமை தாங்கும் கட்சியிடம்தான் உள்ளது” என்று தேமுதிகவைச் சாடியிருந்தார்.
நேற்று (செப்.16) செய்தியாளர்களைச் சந்தித்த தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்திடம் திருமாவளவன் பேசியது தொடர்பாக கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த அவர், "சகோதரர் வன்னி அரசுக்கு அமைச்சர் பதவி கிடைத்தது. அதனால் நீங்கள் (விசிக) கூட்டணி மாறினீர்கள், இதுதானே உண்மை? கம்யூனிஸ்டுகளைப் போல் நீங்களும் இருந்திருக்கலாமே?
நீங்கள் விரும்பியது அமைச்சர் பதவி. நீங்கள் வென்றது இரண்டு இடங்கள். அதில் ஒருவருக்கு அமைச்சர் பதவி என்பதால் போயிருக்கிறீர்கள். இதற்காக நீங்கள் எதற்கு தேமுதிகவை இழுக்கிறீர்கள். மாற்றி மாற்றிப் பேசாதீர்கள்" என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் அமைச்சர் வன்னி அரசிடம் இதுதொடர்பாக இன்று (செப்.17) கேள்வி கேட்கப்பட்டிருக்கிறது. அதற்கு பதிலளித்த அவர், "அவர்கள்(தேமுதிக) பாஜகவோடு கடந்த காலங்களில் செயல்பட்டவர்கள்.
கடைசி நேரத்தில் அந்தக் கூட்டணியா? இந்தக் கூட்டணியா? என்று இரண்டு பக்கமும் பேரம் பேசினார்கள். பின் ஒரு எம்பி பதவிக்காக திமுக உடன் கூட்டணி வைத்தார்கள்.
திமுகவுடன் ஏற்பட்ட முரண்பாட்டையும், கசப்பையும்தான் எடுத்துக் கூறினோம். எங்கள் தலைவர் பேசியதை உள்வாங்காமல் பிரேமலதா பேசுகிறார். இது அவரின் அறியாமையைத்தான் காட்டுகிறது" என்று பேசியிருக்கிறார்.
