Weather
வடகிழக்கு பருவமழை பாதிப்புகளை தவிர்க்க...33 குழுக்கள் !: நீர்நிலைகள், கால்வாய்கள் சீரமைக்க உத்தரவு

செங்கல்பட்டு: வடகிழக்கு பருவமழையையொட்டி, செங்கல்பட்டு மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள, 33 கண்காணிப்பு குழுக்களை நியமித்து, கலெக்டர் வீரப்பன் உத்தரவிட்டுள்ளார். இந்த குழுவினர், மாவட்டம் முழுதும் நடக்கும் பணிகளை ஆய்வு செய்து, மழைநீர் தேங்கும் பகுதிகளில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் ஈடுபட உள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் 2015 மற்றும் 2023ம் ஆண்டுகளில், பெய்த கனமழையால் செங்கல்பட்டு, செய்யூர், திருக்கழுக்குன்றம், திருப்போரூர், வண்டலுார், தாம்பரம், பல்லாவரம் ஆகிய ஏழு தாலுகாக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன.
வரவிருக்கும் வடகிழக்கு பருவமழை காலத்தில், வழக்கத்தைவிட, அதிக மழை பெய்யும் சூழல் உள்ளது.
இதனால், வெள்ள பாதிப்புகளை தடுக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பல்வேறு திட்ட பணிகள் மாவட்டம் முழுதும் நடந்து வருகின்றன.
இந்த பணிகளை செயல்படுத்த, 33 கண்காணிப்பு குழு கொண்ட அலுவலர்கள் நியமித்து, கலெக்டர் வீரப்பன், கடந்த 28ம் தேதி உத்தரவிட்டார்.
இந்த குழுவினர், மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்ட மிகவும் பாதிக்கப்பட்ட பகுதிகள் 71, பாதிக்கப்படக்கூடிய 319 பகுதிகளையும் உடனடியாக ஆய்வு செய்ய வேண்டும்.
புயல் பாதுகாப்பு மையங்கள் 19, தற்காலிக பாதுகாப்பு மையங்கள் 287 உள்ளன. இந்த மையங்களில், கட்டமைப்பு உறுதித்தன்மை, பாகாப்பு, குடிநீர், கழிப்பறை, மின்சாரம் ஆகியவை சரிபார்க்க வேண்டும்.
கனமழை வெள்ளம் எற்படும்போது, மாவட்ட நிர்வாகத்தின் அறிவுரைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள பாலங்கள், மழைநீர் கால்வாய்களை துார்வார வேண்டும்.
நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 528 ஏரிகளும், ஊரக வளர்ச்சித்துறை கட்டுப்பாட்டில் உள்ள, 584 ஏரிகள், 2,512 குளங்கள் ஆகியவற்றை, நீர்வளத்துறை, ஊரக வளர்ச்சித்துறை ஆகியோர் இணைந்து, மண்டல குழுவினர் ஆய்வு செய்து, சீரமைப்பு பணிகளை செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.