Religion
திருப்பதி பெருமாளை நம் வீட்டுக்கே வரவழைக்கும் புரட்டாசி வழிபாடுகள்!
மனம் நிறைந்த பக்தியோடு ஏழுமலையானுக்கு மாவிளக்கு ஏற்றினாலே போதும்; தடைகளும் கிரக தோஷங்களும் விலகி, நாம் எண்ணிய காரியங்கள் எண்ணியபடி நிறை வேறும். அந்த வருடம் முழுவதும் பணவரவுக்கும் பொன் - பொருள் சேர்க்கைக்கும் பஞ்சமே இருக்காது!
பெருமாள் மாதம் என்று குறிப்பிடும் அளவுக்கு புண்ணியம் பெற்றுவிட்டது புரட்டாசி. இம்மாதத்தில் வரும் சனிக்கிழமை வழிபாடுகள் மட்டுமின்றி, வேறுசில விரத நாள்களும் உண்டு. அவற்றில் குறிப்பிடத்தக்கது திருப்பதி கருடசேவை தரிசனம்!
நமக்காக கருடாழ்வார் கேட்டுப் பெற்ற வரம்!
திருப்பதி திருமலைக் கோயிலில் புரட்டாசி பிரம்மோற்ஸவம் மிகப் பிரசித்திப் பெற்றது. வாழ்வில் ஒருமுறையேனும் அந்த வைபவத்தைத் தரிசிப்பதை பெரும் கொடுப்பினையாகச் சொல்வார்கள் நம் பெரியவர்கள். அந்த வைபவத்தில் மற்ற சேவைகளைத் தரிசிக்காவிட்டாலும், கருடசேவையை மட்டுமாவது அவசியம் தரிசிக்கவேண்டும். ஏன் தெரியுமா?
`செய்த பாவத்தின் காரணமாக நரகத்தில் உழலும் ஆத்மாக்கள், மோட்சப் பிராப்தி இருந்தும் ஊழ்வினை காரணமாக மோட்சத்தை எட்ட இயலாத ஆத்மாக்கள், கருட ஸேவையைத் தரிசிக்க திரள்வார்கள்’ என்கின்றன புராணங்கள். அந்த ஒருநாள் மட்டும், அவர்கள் தங்களின் துயரத் தளைகளில் இருந்து விடுபடுவதற்கான அனுமதியை பெருமாளிடம் கருட பகவானே கேட்டுப் பெற்றாராம்.
அதேபோல், அன்று பெருமாளைத் தரிசிக்க வரும் பூலோக மாந்தர்களுக்கும் திருவருள் புரியும்படி வரம் கேட்டு வாங்கினா ராம் கருடன். அப்படி, கருடசேவையைத் தரிசிக்க வரும் பித்ருக்கள், தங்களின் சந்ததியினர் வந்திருக்கிறார்களா என்று தேடுவர்.
ஆகவே, அன்று கருடசேவையை தரிசிப்பதுடன் முன்னோர் களையும் தியானித்து வணங்கலாம்; அவர்களின் விமோசனத்துக்கா கவும் ஸ்வாமியிடம் வேண்டிக்கொள்ள வேண்டும் என்பது ஐதீகம்.இன்றைக்கும், கருடஸேவையைத் தரிசித்த கையோடு சிறிது நேரம் வானத்தை உற்று நோக்கி தியானிக்கும் வழக்கம், பக்தர்கள் சிலரிடம் உண்டு. இதனால் ஸ்வாமியின் திருவருளோடு, தங்கள் முன்னோர்களின் ஆசியும் கிடைக்கும் என்பது அவர்களது நம்பிக்கை. பித்ரு தோஷம் உள்ளவர்கள் கருட சேவையைத் தரிசித்து வந்தால், அந்த தோஷம் நீங்கும்; சந்ததி செழிக்கும். தடைப்பட்ட சுபகாரியங்கள் இனிதே நிறைவேறும்.
புரட்டாசி மாத வளர் பிறை அஷ்டமி முதல் பதினாறு நாட்கள் லட்சுமிதேவியைப் பிரார்த்தித்துச் செய்யப்படும் விரதம் இது. ஓவ்வொரு நாளும் பக்தியோடு விரதம் இருந்து, கனகதாரா ஸ்தோத்திரம் முதலான திருமகள் துதிப்பாடல்களைப் படித்து திருமகளை வழிபட்டு வந்தால், நம் வறுமைகள் நீங்கும்; வாழ்க்கை வளம் பெறும்.
இந்த தினங்களில் வீட்டில் விளக்கேற்றி வைத்து, சுடர் விடும் அந்தத் திருவிளக்கையே லட்சுமிதேவியாக பாவித்து வழிபடலாம். இனிப்புப் பதார்த்தங்கள் சமர்ப்பித்து வழிபடுவதுடன், அவற்றைக் குழந்தைகளுக்கு விநியோகம் செய்வது மிகவும் விசேஷம். இதனால் கடுமையான கடன்சுமைகள் நீங்கும்; லட்சுமியின் அருளால் வீட்டில் பணவரவுக்குப் பஞ்சமே இருக்காது. தொழில், சுப காரியங்கள் போன்றவற்றுக்கான பொருளாதாரச் சுமை விலகும் என்பது நம்பிக்கை.
இழந்த செல்வத்தை மீட்டுத் தரும் அனந்த விரதம்!
புரட்டாசி மாத வளர்பிறை சதுர்த்தசியன்று கடைப்பிடிக்க வேண்டிய விரதம் இது. அன்று அதிகாலையில் நீராடி, தூய்மையான ஆடை அணிந்து, பூஜைக்குரிய இடத்தைப் பசுஞ்சாணத்தால் மெழுகி மாக்கோலம் இட்டு அலங்கரிக்கவேண்டும். கறுப்பைத் தவிர்த்து ஐந்து விதமான வண்ணங்களில் கோலம் போடுவது விசேஷம்.
பின்னர் முறைப்படி தீர்த்தக் கலசம் வைத்து அனந்த பத்மநாபனை தியானித்து பூஜை செய்ய வேண்டும். ஐந்து படி கோதுமை மாவில் வெல்லம் சேர்த்து, 28 அதிரசங்கள் செய்ய வேண்டும். இவற்றில் பதினான்கை, வேதியர்களுக்குத் தந்து தாம்பூலம் மற்றும் தட்சிணை அளிக்க வேண்டும்.
மீதியை நாம் உண்ண வேண்டும். பூஜைக் குரிய பொருட்கள் அனைத்தும் பதினான்கு என்ற எண்ணிக்கை யில் இருக்க வேண்டும். பக்தியுடன் இந்த விரதத்தைச் செய்தால், தீராத வினைகளெல் லாம் தீரும். அளவிட முடியாத ஐஸ்வரியங்கள் வந்து சேரும். இழந்த செல்வங்களும், சொத்து சுகங்களும் மீண்டும் நம்மை வந்து அடையும் என்கின்றன புராணங்கள்.
செல்வகடாட்சம் அள்ளித் தரும் புரட்டாசி மாவிளக்கு!
‘நாளும் கோளும் அவனிட்ட வழக்கு’ என்பார்கள். அதற்கேற்ப, திருவேங்கடவனான பாலாஜியை எல்லா நாள்களிலும் எல்லா மாதங்களிலும் கொண்டாடலாம். எனினும், புரட்டாசியில் கொண்டாடப்படுகிற உத்ஸவ- விழாக்கள் தனிச்சிறப்பு கொண்டவை.
எனினும், எல்லோராலும் திருப்பதிக்கு நேரில் சென்று தரிசித்து வர முடியுமா? அதுவும் அவன் நினைத்தால் மட்டுமே நடக்கும். ஏழுமலையான் மனது வைத்தால் தான் திருப்பதிக்குச் செல்லும் வாய்ப்பு கிடைக்கும் என்பார்கள் பெரியோர்கள்.
ஆக, புரட்டாசி மாதம் சனிக்கிழமைகளில் மிக எளிமையான வகையில் ஏழுமலையானை வீட்டிலேயே வழிபடலாம். இதன் மூலம் திருப்பதி பெருமாளே திருமகள் சமேதராக நம் வீட்டில் எழுந்தருள்வார் என்பது நம்பிக்கை.
அன்று மனம் நிறைந்த பக்தியோடு ஏழுமலையானுக்கு மாவிளக்கு ஏற்றினாலே போதும்; தடைகளும் கிரக தோஷங்களும் விலகி, நாம் எண்ணிய காரியங்கள் எண்ணியபடி நிறை வேறும். அந்த வருடம் முழுவதும் பணவரவுக்கும் பொன் - பொருள் சேர்க்கைக்கும் பஞ்சமே இருக்காது!
புரட்டாசி சனிக் கிழமைகளில் அதிகாலை யில் எழுந்து குளித்து முடித்து, பூஜையறையைத் தூய்மையாக மெழுகிக் கோலமிட்டு, பெருமாளின் திருவுருவத்தை துடைத்துப் பொட்டிட்டு, பூக்களால் அலங்கரிக்க வேண்டும்.
பின்னர், சுத்தமான அரிசியை இடித்து மாவெடுத்து, அதனுடன் வெல்லம் கலந்து இரண்டாகப் பிடித்து வைக்க வேண்டும். இதில், திரியிட்டு நெய்விளக்கேற்றி, மலர், துளசி கொண்டு பெருமாளை அர்ச்சித்து, அவரது நாமாவளிகளை மனதாரச் சொல்லி வழிபட, அவ்விடத்தில் சாட்சாத் அந்தப் பெருமாளே எழுந்தருள்வார் என்பது ஐதிகம்.
இப்படி, காலை நேரத்தில் வீடுகளில் ‘திருவிளக்குமாவு’ கொண்டு மாலவனை வழிபட்டுவிட்டு, மாலையில் அருகிலுள்ள பெருமாள் கோயிலுக்குச் சென்று அவரைத் தரிசிப்பது மிகவும் விசேஷம்.
புரட்டாசி சனிக் கிழமை மட்டுமன்றி, எல்லா சனிக்கிழமைகளிலும் வெல்லம் கலந்த அரிசி மாவில் நெய்விளக்கிட்டு, ஶ்ரீமந் நாராயணனை வழிபட, சகல சௌபாக்கியங் களும் கிடைக்கும்.
