Lifestyle and human interest
காவிரி நீர் விநியோகிப்பதாக நிதி முறைகேடு மல்லணம்பட்டி மக்கள் குற்றச்சாட்டு
வத்தலக்குண்டு, செப்.9 மல்லணம்பட்டி ஊராட்சியில் ‘போர்வெல்’ மூலம் தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டு வரும்
மல்லணம்பட்டி ஊராட்சியில் ‘போர்வெல்’ மூலம் தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டு வரும் நிலையில் காவிரி தண்ணீர் வழங்கப்படுவதாக ஊராட்சி நிதியை முறைகேடாக பயன்படுத்துவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
வத்தலக்குண்டு ஒன்றியம் மல்லணம்பட்டி ஊராட்சியில் மல்லணம்பட்டி, அழகாபுரி, பூசாரிபட்டி, காலனி, கிருஷ்ணாபுரம், லட்சுமிபுரம் கிராமங்களில் 8000க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். பூ விவசாயமே இவர்களது முக்கிய வாழ்வாதாரமாக உள்ளது. கடும் வெயிலிலும் தண்ணீரை விலைக்கு வாங்கி பயன்படுத்தி பூ சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இவ்வூராட்சியில் காவிரி குடிநீர் விநியோகம் செய்வதாக ஒவ்வொரு மாதமும் ஊராட்சி நிதி ஒன்றியத்திற்கு வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் அனைத்து கிராமங்களிலும் ‘போர்வெல்’ மூலமாகவே குடிநீர் வழங்கப்படுவதாக பொதுமக்கள் கூறுகின்றனர். காவிரி தண்ணீருக்காக வழங்கப்படும் நிதி யாருக்கு செல்கிறது என்ற கேள்வியை எழுப்புகின்றனர்.
கடந்த காலங்களில் ஊராட்சி தலைவர்களாக இருந்தவர்களும் இந்த பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கவில்லை. காவிரி தண்ணீர் பிரச்னைக்காக ஆறு மாதங்களுக்கு முன்பு நடந்த கிராம சபை கூட்டத்தை கிராம மக்கள் புறக்கணித்தனர்.
ஆனால் ஊராட்சி நிர்வாகம் துாய்மை பணியாளர்கள், 100 நாள் வேலை திட்ட பணியாளர்களிடம் கையொப்பம் பெற்று கிராம சபை கூட்டம் நடந்ததாக கணக்கு காட்டி வந்தது. தற்போது தலைவர் இல்லாமல் சிறப்பு அதிகாரியால் ஊராட்சி நிர்வாகம் நடந்து வருகிறது. தற்போதும் குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காணப்படவில்லை.
பூசாரிபட்டி தெற்கு பகுதியில் சாக்கடை வசதி இருந்தும் துார்வாமல் கழிவுநீர் தெருக்களில் ஓடுகிறது. மாதத்திற்கு இருமுறை நல்ல தண்ணீர் கிடைக்கிறது. குடிநீரை விலைக்கு வாங்கி பயன்படுத்தி வருகிறோம். வடபகுதி காலனியில் சாக்கடை வசதியே இல்லாமல் கழிவுநீர் ரோட்டில் ஓடி சுகாதாரக் கேட்டை ஏற்படுத்துகிறது. பலமுறை மனு கொடுத்தும் பிரச்னைக்கு தீர்வு கிடைக்கவில்லை.
மல்லணம்பட்டி பிரதான தெருவில் இருந்து பிரியும் தெருக்களுக்கு இடையே சிறு பாலங்கள் அமைக்க வேண்டியுள்ளது. ஆனால் எங்கும் பாலம் அமைக்காததால் பிற கிளை தெருக்களுக்கு செல்வதில் சிரமம் ஏற்படுகிறது.
புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டு இரு மாதங்கள் ஆகிவிட்டது. இன்னும் பயன்பாட்டிற்கு கொண்டு வரவில்லை. ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டும் அடிப்படை பணிகள் செய்யவில்லை.
அழகாபுரியில் சிதிலமடைந்து ஆபத்தான நிலையில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு பதிலாக புதிய தொட்டி அமைக்க வேண்டும் என பலமுறை மனு கொடுத்தும் நடக்கவில்லை.
லட்சுமிபுரம், கிருஷ்ணாபுரம் கிராமங்கள் மல்லனம்பட்டி ஊராட்சியில் இருந்து ஒதுக்கி வைக்கப்பட்டவையாக உள்ளன. எந்த ஒரு அடிப்படை வசதிகளும் செய்து தரவில்லை.