தீயணைப்பு நிலையம் கட்டடம் எப்போது? இட வசதியின்றி அவதிப்படும் வீரர்கள்
திருப்போரூர், செப். 16– கோவளத்தில் புதிதாக தீயணைப்பு நிலையம் கட்ட நிதி ஒதுக்கியும், பணிகள்

கோவளத்தில் புதிதாக தீயணைப்பு நிலையம் கட்ட நிதி ஒதுக்கியும், பணிகள் தொடங்கப்படாததால் தீயணைப்பு வீரர்கள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
திருப்போரூர் அடுத்த கிழக்கு கடற்கரை சாலையில், கோவளம் ஊராட்சி அமைந்துள்ளது. இங்கு நீலக்கடற்கரை, மாதா கோவில், கைலாசநாதர் கோவில், தர்கா, விடுதிகள் உள்ளிட்டவை உள்ளன.
கோவளம் அருகே முட்டுக்காடு படகு குழாம், திருவிடந்தை நித்ய கல்யாண பெருமாள் கோவில் ஆகியவை உள்ளன.
இதன் காரணமாக, அனைத்து தரப்பு மக்களும், சுற்றுலா பயணியரும் தினமும் கோவளம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளுக்கு வந்து செல்கின்றனர்.
அவசர தேவையின் போது, தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகளுக்கென சிறுசேரி, திருப்போரூர், மாமல்லபுரத்திலிருந்து வாகனம் மற்றும் தீயணைப்பு வீரர்கள் வர வேண்டிய சூழல் இருந்தது. பொதுமக்களின் கோரிக்கையை அடுத்து, கோவளத்தில் தீயணைப்பு நிலையம் அமைக்க 2024ம் ஆண்டு 1 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. ஆனால், அதற்கான பணிகள் இன்னும் தொடங்கப்படவில்லை.
இருப்பினும், 2025ம் ஆண்டு ஜனவரி மாதம், கோவளம் நுாலகம் வளாகத்தில் தற்காலிக கட்டடத்தில், தீயணைப்பு நிலையம் செ யல்பட்டு வருகிறது. இங்கு நிலைய அலுவலர் உட்பட 10க்கும் மேற்பட்டோர் பணிபுரிகின்றனர்.
ஆனால், அலுவலகம், தீயணைப்பு வாகன நிறுத்தம் என போதிய இடவசதியின்றி தீயணைப்பு வீரர்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.
எனவே, கோவளம் தீயணைப்பு நிலையத்திற்கு புதிய கட்டடம் கட்ட வேண்டும் என, தீயணைப்பு வீரர்கள் வே ண்டுகோள் விடுத்துள்ளனர்.
இதுகுறித்து, வருவாய்த்துறை ஊழியர்கள் கூறியதாவது:
கோவளம் ஊராட்சிக்கு உட்பட்ட குன்றுக்காடு பகுதியில் தீயணைப்பு நிலையம் அமைவதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அதற்கான அளவீடு உறுதி செய்யப்பட்ட பின், கட்டடம் கட்டப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.