Politics
கலைஞர் பேனா நினைவு சின்னம்.. தமிழக அரசுக்கு எச்சரிக்கை.. அக்டோபர் 29 வரை கெடு

கலைஞர் பேனா நினைவு சின்னம் வழக்கில், அக்டோபர் 29க்குள் அறிக்கை தாக்கல் செய்யாவிட்டால் அபராதம் விதிக்கப்படும் என தமிழக அரசுக்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் எச்சரிக்கை.
கலைஞர் பேனா நினைவு சின்னம் அமைப்பதற்கு எதிரான வழக்கில், அக்டோபர் 29-ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்யாவிட்டால், அபராதம் விதிக்கப்படும் என தமிழக அரசுக்கு தென் மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
முந்தைய திமுக ஆட்சியில், வங்கக் கடலில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நினைவாக, 134 அடி உயரத்தில் பேனா நினைவு சின்னம் அமைக்க திட்டமிடப்பட்டது. இதற்கு மத்திய அரசு வழங்கிய சுற்றுச்சூழல் அனுமதியை எதிர்த்து நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த வெண்ணிலா தாயுமானவன், சென்னையைச் சேர்ந்த மீனவர் பாரதி, திருச்செந்தூரைச் சேர்ந்த வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் உள்ளிட்டோர் தென் மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த வழக்கு நீதித்துறை உறுப்பினர் புஷ்பா சத்தியநாராயாணா தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தபோது, வழக்கு தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய 2022-ஆம் ஆண்டே உத்தரவிட்டும், இதுவரை அறிக்கை தாக்கல் செய்யாமல் அவகாசம் மட்டுமே வாங்கி வருவதாக தீர்ப்பாயம் அதிருப்தி தெரிவித்தது.
புதிய அரசு பொறுப்பேற்றுள்ள நிலையில், இந்த விவகாரத்தில் அரசின் நிலைப்பாடு என்ன என்று கேள்வி எழுப்பிய தீர்ப்பாயம், அக்டோபர் 29-ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்யாவிட்டால் அபராதம் விதிக்கப்படும் என தமிழக அரசுக்கு எச்சரிக்கை விடுத்து, விசாரணையை தள்ளி வைத்தது
