பி.ஐ.பி., கூடுதல் தலைமை இயக்குநர் பொறுப்பேற்பு

சென்னை: தமிழ்நாடு, புதுச்சேரி, அந்தமான் நிக்கோபார் மண்டலத்திற்கான, பத்திரிகை தகவல் அலுவலக கூடுதல் தலைமை இயக்குநராக காமராஜ் பொறுப்பேற்றார்.
இவர், கடந்த 2008ம் ஆண்டு, இந்திய தகவல் பணி பிரிவு அதிகாரியாக தேர்வு செய்யப்பட்டார். கடந்த 2011ம் ஆண்டு, டில்லி ஆகாசவாணியின் செய்தி பிரிவில் உதவி இயக்குநராக நியமனம் செய்யப்பட்டார்.
கடந்த 2013ல், டில்லி துார்தர்ஷன் செய்தி தொலைக்காட்சியின் துணை இயக்குநராக பொறுப்பேற்றார். இதைத் தொடர்ந்து, டில்லி ஆகாசவாணி செய்தி பிரிவின் இணை இயக்குநர், மத்திய தகவல் தொடர்பக சென்னை மண்டல இணை இயக்குநராக இருந்தார்.
பின், சென்னை ஆகாசவாணியின் மண்டல செய்திப்பிரிவு இயக்குநராக பணியாற்றி அவர், 2025 ஜூலையில் மத்திய மக்கள் தொடர்பு துறை இயக்குநராக நியமிக்கப்பட்டார்.