Politics
புகையிலை எதிர்ப்பு அருங்காட்சியகம் திறப்பு

புதுச்சேரி: கதிர்காமம் இந்திராகாந்தி அரசு மருத்துவமனை மற்றும் கல்லுாரியில் புகையிலை எதிர்ப்பு அருங்காட்சியகம் (ஸ்பார்க்) திறக்கப்பட்டது.
புதுச்சேரி மாநில புகையிலை கட்டுப்பாட்டு மையம், கலெக்டர் அலுவலகம், சமூக நலத்துறை இயக்குனரகம் மற்றும் இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் சமூக மருத்துவத் துறை ஆகியன சார்பில், புகையிலை எதிர்ப்பு அருங்காட்சியகம் (ஸ்பார்க்) அமைத்து, திறப்பு விழா நடந்தது.
தேசிய புகையிலை கட்டுப்பாட்டு திட்டத்தின் மாநில நோடல் அதிகாரி வெங்கடேஷ் வரவேற்றார். அருங்காட்சியகத்தை கலெக்டர் குலோத்துங்கன் குத்து விளக்கு ஏற்றி திறந்து வைத்தார்.
விழாவில் போதைப்பொருள் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு பணிகளில் ஈடுபட்டுள்ள பங்குதாரர்களுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட 'பாதுகாப்பான மனங்கள், ஆரோக்கியமான சமூகங்கள்' என்ற கையேட்டை சமூக நலத்துறை இயக்குனர் ராகிணி வெளியிட்டார். சுகாதாரத்துறை இயக்குனர் செவ்வேள் புகையிலை எதிர்ப்பு அருங்காட்சியகமான 'தி டொபாக்கோ' மாதிரியை திறந்து வைத்தார்.
பின் உள்ளூர் பள்ளி மற்றும் கல்லுாரிகளுக்கு, புகையிலை இல்லா கல்வி நிறுவனங்கள் சான்றிதழ்களை வழங்கினார்.
மருத்துவமனை இயக்குனர் உதயசங்கர், போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு ரீல்ஸ் வீடியோக்களை உருவாக்கிய இளம் படைப்பாளர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி, பேசினார்.
புதுச்சேரி அரசு மார்பு நோய் மருத்துவமனையின் தேசிய புகையிலை கட்டுப்பாட்டு திட்ட மாநில ஆலோசகர் சூர்யா குமார் நன்றி கூறினார்.
