காரைக்குடி அருகே வரத்து கால்வாய்,மடைகள் மாயம்:பொய்த்த விவசாயத்தால் விவசாயிகள் கவலை

காரைக்குடி:காரைக்குடி அருகே அமராவதிப்புதுாரில் கண்மாய்கள்,வரத்து கால்வாய்கள்,மடைகளை முறையாக பராமரிக்காததால் 30 ஆண்டுகளாக விவசாயமின்றி, விளைநிலத்தில் கருவேல மரங்கள் வளர்ந்து கிடப்பதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
சாக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட அமராவதி புதுாரில் விவசாயிகள் அதிக அளவில் உள்ளனர். இங்குள்ள அமராவதி கண்மாய், புதுார் கண்மாயை நம்பி 500 ஏக்கருக்கும் அதிகமாக விவசாயம் நடந்து வந்தது. இந்நிலையில் கண்மாய்கள், வரத்து கால்வாய்கள் துார்வாரப்படாததாலும் மடைகள் பராமரிப்பின்றி கிடப்பதாலும் விவசாயம் பொய்த்துப் போனது. கடந்த 30 ஆண்டுகளாக விவசாயம் செய்ய முடியாமல், விளைநிலங்களில் கருவேல மரங்கள் வளர்ந்துள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். கண்மாய், மடைகளை மீட்டு விவசாயத்திற்கு புத்துயிர் அளிக்க வேண்டும் என்று அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அமராவதிப்புதுாரில் விவசாயமே பிரதான தொழிலாகும். அதன் அடிப்படையில் தான் கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பே ரூ. 1 கோடி மதிப்பீட்டில் அமராவதிபுதுாரில் இருந்து ஆறாவயல் வரை வரத்து கால்வாய், மற்றும் மடைகள் அமைக்கும் பணி நடந்தது. காரைக்குடி நாட்டார் கண்மாயிலிருந்து தண்ணீர் அமராவதி கண்மாய்க்கு வந்தடையும். அங்கிருந்து புதுார் கண்மாய் நிரம்பி தானாவயல் கண்மாய் சென்று தேனாற்றில் கலக்கும். கண்மாயை நம்பி விவசாயம் நடந்தது. இந்நிலையில், கண்மாய்கள், மடைகள் வரத்து கால்வாய்கள் முறையாக பராமரிக்காததால் தண்ணீர் வரத்து இல்லாமல் போனது. இதனால் விவசாயம் பொய்த்து போனதோடு விளைநிலங்கள் முழுவதும் கருவேல மரங்கள் நிரம்பிக் கிடக்கிறது. 30 ஆண்டுகளாக விவசாயம் நடைபெறவில்லை. விவசாயிகள் கருவேல மரங்களை விற்றும், கால்நடைகளை வளர்த்தும் வாழ்க்கை நடத்தி வருகின்றனர்.
சாக்கோட்டை ஒன்றியம் சார்பில் குழுக்கள் அமைத்து கண்மாய்கள், வரத்து கால்வாய்களை மீட்டெடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் மடைகள் தோறும் போர்வெல் அமைத்து விவசாயத்தை காக்க வேண்டும்.