சிவகாசி, ஸ்ரீவி., பட்டாசு ஆலை வெடி விபத்துகளில் மூவர் பலி மரக்கிளையில் சிக்கிய தொழிலாளி உடல்

சிவகாசி: விருதுநகர் மாவட்டம் சிவகாசி மீனம்பட்டி, ஸ்ரீவில்லிபுத்துார் கூனம்பட்டி பட்டாசு ஆலைகளில் நேற்று நடந்த வெடி விபத்துகளில் மூவர் பலியாகினர். 5 பேர் காயமடைந்தார். இதில் பலியான ஈஸ்வரனின் உடல் சிதறி மரக்கிளையில் சிக்கியது. தீயணைப்புத்துறையினர் உடலை மீட்டனர்.
சிவகாசி காளியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் ஆறுமுகசாமி. இவருக்கு மீனம்பட்டியில் வடிவேல் பயர் ஒர்க்ஸ் என்ற பெயரில் பட்டாசு ஆலை உள்ளது. நாக்பூர் உரிமம் பெற்ற இந்த ஆலையில் 70 க்கும் மேற்பட்ட அறைகளில் 150க்கும் ஏற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வந்தனர். நேற்று காலை பிளாட்பார்மில் காய வைக்கப்பட்டிருந்த மணி மருந்து வேதியியல் மாற்றம் காரணமாக வெடித்ததில் விபத்து ஏற்பட்டது. அதனருகே மரத்தடியில் பட்டாசு உற்பத்தியில் ஈடுபட்டிருந்த ஸ்ரீவில்லிபுத்துார் அருகே குன்னுாரைச் சேர்ந்த ஈஸ்வரன் 56, பலியானார். சிவகாசி தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர். கிழக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.
மணி மருந்து வெடித்த நிலையில் 100 அடி உயரத்திற்கு கரும்புகை எழுந்தது. அருகில் இருந்த 2 மரங்களில் தீ பரவியதில் முற்றிலும் சேதம் அடைந்தது. விபத்தினால் ஏற்பட்ட அதிர்ச்சியில் பெண் தொழிலாளி ஒருவர் மயக்கமடைந்தார்.
விதிமீறலால் பலியான உயிர் பொதுவாக அறைகளில் தான் பட்டாசு உற்பத்தி செய்ய வேண்டும். இங்கு விதி மீறி மரத்தடியில் தொழிலாளி ஒருவர் பட்டாசு உற்பத்தி பணியில் ஈடுபட்டிருந்தபோது மணிமருந்து வெடித்ததில் பலியானார். விபத்தில் இறந்த ஈஸ்வரனின் உடல் துாக்கி எறியப்பட்டு மரக்கிளையில் சிக்கியது. உடல் சிதறிய நிலையில் 25 மீட்டர் துாரத்திற்கு ஆங்காங்கே கிடந்தது. மரக்கிளையில் சிக்கிய உடலின் ஒரு பகுதியை தீயணைப்புத் துறையினர் மீட்டனர்.
மற்றொரு விபத்து ஸ்ரீவில்லிபுத்துார் அருகே கூனம்பட்டியில் சிவகாசியை சேர்ந்தவர் சந்தனமாரி பாண்டியன் டி.ஆர்.ஓ.,லைசென்ஸ் பெற்று ஹரிஷ்மா பட்டாசு ஆலையை நடத்தி வருகிறார். இங்கு 10க்கும் மேற்பட்ட அறைகளில் 40 பேர் வரை பணியாற்றி வருகின்றனர்.
நேற்று காலை 9:30 மணிக்கு மருந்து கலவை தயார் செய்யும் போது எதிர்பாராமல் ஏற்பட்ட வெடிவிபத்தில் இரண்டு அறைகள் தரைமட்டமானது. இதில் சிவகாசி அய்யம்பட்டி சிலோன் காலனியைச் சேர்ந்த சக்திவேல் 55, சம்பவ இடத்தில் உடல் சிதறி பலியானார். திருத்தங்கல் கங்கா குளத்தைச் சேர்ந்த காளிராஜன் 49, பலத்த காயம் அடைந்து சிவகாசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
தீயணைப்புதுறையினர் தீயை அணைத்தனர்.சம்பவ இடத்திலிருந்து தப்பியோடிய தொழிலாளர்கள் மீது வெடிகள் பட்டதிலும், கீழே தவறி விழுந்ததிலும் கருப்பாயி 47, பவானி 49, மகாலட்சுமி 36, இருளாயி 70, காயமடைந்தனர்.
இறந்த சக்திவேலின் உடல் ஸ்ரீவில்லிபுத்துார் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. கிருஷ்ணன்கோவில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
தாமதத்தால் தப்பிய உயிர்கள் பலியான சக்திவேலும், காயமடைந்த காளிராஜும் முதலில் வந்து பணியை துவக்கிய நிலையில், மற்ற தொழிலாளர்கள் சற்று தாமதமாக பட்டாசு ஆலைக்கு வந்ததால் உயிர் தப்பினர்.
சிகிச்சை பலனின்றி பலி சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிவகாசி கங்கா குளத்தைச் சேர்ந்த காளிராஜன் நேற்று மாலை இறந்தார்.
இதனையடுத்து இரு விபத்துகளிலும் பலியானோர் எண்ணிக்கை மூன்றாக உயர்ந்தது.