ஸ்ரீரங்கம் கோவில் நிலத்தை பதிவு செய்ய ஐகோர்ட் தடை அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு நோட்டீஸ்
மதுரை: 'திருச்சி, ஸ்ரீரங்கம் கோவிலுக்கு அறப்பணி செய்ய ஏற்படுத்திய அறக்கட்டளைக்கு சொந்தமான நிலம் தொடர்பாக, எவ்வித ஆவணத்தையும் பதிவு செய்யக்கூடாது' என, உயர் நீதிமன்ற மதுரை கிளை தடை விதித்தது.
மதுரை மாவட்டம், நெடுங்குளம் சுப்பிரமணியன் தாக்கல் செய்த பொதுநல மனு:
திருச்சி, ஸ்ரீரங்கம் திம்மராயசமுத்திரத்தில், 21 ஏக்கர், 6 சென்ட் நிலம் ஒரு அறக்கட்டளைக்கு சொந்தமானது.
இது ஸ்ரீரங்கநாத சுவாமி கோவில், நாச்சியார் கோவில், அழகிய சிங்கர் கோவில், குணசீலம் பெருமாள் கோவில், கொடியாளம் கோபாலகிருஷ்ண சுவாமி கோவில் ஆகியவற்றுடன் தொடர்புடைய பிரம்மோத்சவம், மண்டகப்படி, அர்ச்சனை, உத்சவ ஊர்வலங்கள் மற்றும் பிற பொது மத அறப்பணிகளை மேற்கொள்ள உருவாக்கப்பட்டது.
எஞ்சிய வருமானத்தை அறப்பணிகளுக்காகவே பயன்படுத்த வேண்டும். அறங்காவலர்கள் அல்லது அவர்களின் வாரிசுகளுக்கு சொத்தின் மீதான தனிப்பட்ட உரிமையோ, பங்கிடக்கூடிய அல்லது மாற்றிக்கொடுக்கக்கூடிய உரிமையோ இல்லை. இது, அறநிலையத்துறை சட்டப்படி அறக்கட்டளை சொத்தாகும்.
சிலர் அறக்கட்டளைக்கு சொந்தமான நிலத்தை, தங்கள் குடும்ப சொத்துக்களை போல் கையாண்டனர். ஒரு பாகப்பிரிவினை பத்திரத்தை, ஸ்ரீரங்கம் சார் - பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்தனர்.மனையிடங்களாக பிரித்து, திருச்சி மாநகராட்சி, நகர் ஊரமைப்பு துறையிடம் ஒப்புதல் பெற்றனர்.
ஒரு தனியார் நிறுவனத்திற்கு சாதகமாக பத்திரம் பதிந்து கொடுத்தனர். இதற்கு அறநிலையத்துறை சட்டப்படி உரிய அனுமதி பெறவில்லை.
அந்நிறுவனம் குடியிருப்பு மனைகளை உருவாக்கி, அவற்றை மூன்றாம் தரப்பினருக்கு விற்க தொடங்கியது. நிறுவனம் உள்ளிட்ட சிலர், 600 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்தை அபகரிக்க முயற்சிக்கின்றனர்.
அறநிலையத்துறை கமிஷனரின் முன்அனுமதி பெறாமல், மத அறக்கட்டளை தொடர்பான ஆவணங்களை பதிவு செய்ய சார் - பதிவாளருக்கு அதிகாரம் இல்லை.
சம்பந்தப்பட்ட நபர்கள், அவர்கள் ஆட்கள், அந்நிலத்தை உரிமை மாற்றம் செய்ய, வில்லங்கம் ஏற்படுத்த, முன்பதிவு செய்ய அல்லது மூன்றாம் தரப்பினருக்கு உரிமைகளை உருவாக்குவதை தடுக்க தடை விதிக்க வேண்டும்.பதிவு செய்யப்பட்ட பத்திரங்கள் செல்லாது என, உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன், ஆர்.சக்திவேல் அமர்வு பிறப்பித்த உத்தரவு:
இவ்விவகாரத்தில் மொத்தமாகவோ அல்லது சிறு பகுதி நிலம் தொடர்பாகவோ எவ்வித பதிவையும், சம்பந்தப்பட்ட சார் - பதிவாளர் மறு உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை மேற்கொள்ளக்கூடாது.
அறநிலையத்துறை கமிஷனர், இணை கமிஷனர், ஸ்ரீரங்கம் ரங்கநாத சுவாமி கோவில் செயல் அலுவலருக்கு நோட்டீஸ் அனுப்பி, விசாரணை நவ., 5க்கு ஒத்தி வைக்கப்படுகிறது.
இவ்வாறு உத்தரவிட்டனர்.