Lifestyle and human interest
பார்வையற்ற ஜோடி காதல் திருமணம்: வாழ்த்த குவிந்த மாற்று திறனாளிகள்

கோவை:''பூவும் காத்தும் சேரும் போது வாசம் வருகிறது...'' என, தாலிக்கட்டி முடிந்ததும், தன் காதல் கணவர் விஜயின் கை பிடித்தபடி இந்துமதி பாடிய போது, சிங்காநல்லுார், செல்லாண்டியம்மன் கோவில் வளாகமே ஒரு நிமிடம் நிசப்தமானது.
அம்மனை தரிசிக்க வந்தவர்கள், பார்வையற்ற அத்தம்பதிகளை மனதார வாழ்த்தினர். நாமும் வாழ்த்திவிட்டு விசாரித்தோம். முதலில் விஜய் பேசினார்:
''இருவரும் பட்டதாரிகள். 4 ஆண்டுக்கு முன் சந்தித்தோம்; நண்பர்கள் ஆனோம். நிறைய பேசினோம். பிறந்ததில் இருந்தே எங்களுக்கு பார்வை கிடையாது. தொட்டு, உணர்ந்து தான் ஒவ்வொன்றையும் தெரிந்து கொள்வோம். கற்பனைக்கோ, கனவுகளுக்கோ இங்கே இடமில்லை. இந்துவின் கை பிடிக்கும் போதெல்லாம், புதிய உலகத்திற்குள் இருப்பதாக தோன்றும். ஒரு நாள் பேசாத போதும், தனிமையில் இருப்பதாக உணர்ந்தோம். காதலை சொல்லி கொண்டதில்லை என்றாலும் மனம் முழுக்க இந்து தான் இருக்கிறாள்..'' என்றார் விஜய்.
இந்துமதியும் சளைக்கவில்லை. ''இந்த வாழ்க்கை விஜய் எனக்கு கொடுத்த பரிசு. என் குரல் நன்றாக இருந்ததால், பி.ஏ. மியூசிக் படித்தேன். அரசு துறையில் வேலை செய்வது தான் என் லட்சியம். அதனால், போட்டி தேர்வுக்கு தயாராகிறேன். மாற்றுத்திறனாளிகள் என்றாலும் கல்வியிலும், வாழ்க்கையிலும் ஜெயிக்க முடியும். எங்களை பார்த்து அல்லது கேள்விப்பட்டு மற்றவர்களும் முன்னேற வேண்டும்'' என்று ஆசையை வெளிப்படுத்தினார்.
பார்வையற்றோர் திருமணம் செய்வது புதிதல்ல. ஆனால், மணமக்களை வாழ்த்த திரண்டு வந்திருந்த மாற்றுத்திறனாளி இளைஞர்களின் முகத்தில் தெரிந்த மகிழ்ச்சியும் நம்பிக்கையும் இதுவரை நாம் காணாதது.