Crime, law and justice
அறநிலையத்துறை இணையதளத்தில் 4,292 கோவில்களின் தணிக்கை அறிக்கை: ஐகோர்ட்டில் அரசு தகவல்

சென்னை: தமிழகம் முழுதும், 4,292 கோவில்களின் வரவு செலவு கணக்குகளின் தணிக்கை அறிக்கைகள், இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில், ஹிந்து அறநிலையத் துறை தெரிவித்துள்ளது.
அனைத்து கோவில்களின் ஆண்டு வருவாய், செலவினங்கள் தொடர்பான கணக்குகளின் தணிக்கை அறிக்கைகளை, அறநிலையத் துறை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய உத்தரவிட கோரி, சென்னை, மயிலாப்பூரைச் சேர்ந்த, 'இண்டிக் கலெக்டிவ் டிரஸ்ட்' தலைவர் டி.ஆர்.ரமேஷ், 2023ல் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு, நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், இ.மனோகரன் அடங்கிய அமர்வில், நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, அறநிலையத் துறை தரப்பில் சிறப்பு பிளீடர் ஆர்.பரணிதரன் ஆஜராகி, ''இதுவரை, 4,292 கோவில்களின் வரவு, செலவு கணக்குகளின் தணிக்கை அறிக்கைகள், இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளன.
''இதில், 10,000 ரூபாய்க்கு குறைவான வருமானம் உள்ள கோவில்களின் கணக்குகள் தணிக்கை செய்யப்பட மாட்டாது. தற்போது, 4,292 கோவில்களின் தணிக்கை அறிக்கைகளை, பொது மக்கள் பார்வையிடலாம். அடுத்த வாரம் முழு விபரங்களுடன் அறிக்கை தாக்கல் செய்யப்படும்,'' என்றார்.
இதை ஏற்ற நீதிபதிகள், வழக்கு விசாரணையை அடுத்த வாரத்துக்கு தள்ளிவைத்தனர்.