Crime, law and justice
சட்டவிரோதமாக குடிநீர் திருட்டு 34 மோட்டார்கள் பறிமுதல்
சென்னை, செப். 9– சென்னையில் ஆறு மண்டலங்களில், சட்டவிரோதமாக குடிநீர் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட, 34
சென்னையில் ஆறு மண்டலங்களில், சட்டவிரோதமாக குடிநீர் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட, 34 கட்டடங்களில் இருந்த மோட்டார்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
சென்னையில் தினமும், 125 கோடி லிட்டர் குடிநீர் வினியோகித்தும், பல பகுதிகள், வீடுகளுக்கு சீரான குடிநீர் செல்வதில்லை என்ற புகார் எழுந்துள்ளது. சில வீடுகள் மற்றும் வணிக கட்டடங்களில், குழாயில் சட்டவிரோதமாக மோட்டார் பொருத்தி குடிநீர் திருடுவது தொடர்ந்து நடக்கிறது.
தரமணி பகுதியில் மட்டும், 60க்கும் மேற்பட்ட மோட்டார்கள் பறிமுதல் செய்யப்பட்டன. சென்னையில் பரவலாக புகார் பதிவானதால், குடிநீர் வாரியம், சிறப்பு கண்காணிப்பு குழுக்கள் அமைத்தது. இந்த குழு, வீடுகளுக்கு குடிநீர் செல்லாத பகுதிகள் மற்றும் சட்டவிரோதமாக மோட்டார் பொருத்தப்பட்ட புகார் பகுதிகளில் கள ஆய்வில் ஈடுபடுகின்றனர்.
அதன்படி நேற்று தண்டையார்பேட்டை, அம்பத்துார், அண்ணா நகர், தேனாம்பேட்டை, அடையாறு மற்றும் பெருங்குடி மண்டலங்களில் உள்ள வணிக கட்டடங்கள் மற்றும் புகார் உள்ள வீடுகளில் திடீர் ஆய்வு நடத்தினர்.
இதில், பிரதான குழாயில் இருந்து வீடு, வணிக கட்டடங்களுக்கு செல்லும் குழாயில், சட்டவிரோதமாக மோட்டார் பொருத்தி குடிநீர் திருடுவது தெரிந்தது. இதையடுத்து, 34 கட்டடங்களில் இருந்த மோட்டார்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும், குடிநீர் இணைப்பை துண்டித்து, கட்டட உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது.
இது குறித்து, குடிநீர் வாரிய அதிகாரிகள் கூறும்போது, ‘ சிறப்பு கண்காணிப்பு குழுக்கள் தினமும் ஒவ்வொரு பகுதியாக ஆய்வு மேற்கொண்டு, மோட்டார்களை பறிமுதல் செய்யும் நடவடிக்கையில் ஈடுபடும். மோட்டார் பொருத்தி குடிநீர் திருடினால், 044–28451300 என்ற எண்ணில் தகவல் தெரிவிக்க வேண்டும்’ என்றனர்.
