Politics
அழகிய நதி சுற்றுலா! பொள்ளாச்சியில் அறிமுகப்படுத்த திட்டம் :கல்லுாரிகளில் தனி குழு அமைக்க முடிவு

பொள்ளாச்சி: பொள்ளாச்சி பகுதியில் உள்ள நதிகளை அழகுப்படுத்தி, 'அழகிய நதி சுற்றுலா' என்ற தலைப்பில் மேம்படுத்தவும், கல்லுாரியில் இளைஞர் சுற்றுலா குழு அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது என, மத்திய அரசின் சுற்றுலா மற்றும் பயண மேலாண்மை கழக சிறப்பு நிலைக்குழு தலைவர் சேவக் விஜய் தெரிவித்தார்.
பொள்ளாச்சி சுற்றுப்பகுதியில், ரோட்டோரம் நிழல் அளிக்கும் மரங்கள், பாய்ந்தோடும் ஆழியாறு ஆறு, பச்சை பசேலென நெல் வயல்கள் என சுற்றுலாப்பயணிகளை கவரும் வகையில் ஏராளமான 'ஸ்பாட்'கள் உள்ளன.
இதுதவிர, வால்பாறையில், சின்னக்கல்லார், சோலையாறு டேம், அப்பர் நீராறு, லோயர் நீராறு என நீர்தேக்கங்கள்; பசுமையான தேயிலை தோட்டங்கள் நிறைந்துள்ளன.
ஆனைமலை மாசாணியம்மன் கோவில், பொள்ளாச்சி மாரியம்மன் கோவில், சுப்ரமணிய சுவாமி கோவில், வால்பாறை பாலாஜி கோவில் என பல்வேறு ஆன்மிக தலங்களை ஒருங்கே கொண்டுள்ளது.
மேலும், பல வரலாற்று சுவடுகளும் பொள்ளாச்சி பகுதியில் தென்படுகின்றன. இயற்கையும், ஆன்மிகமும் கலந்த பகுதியாக உள்ள பொள்ளாச்சி, சினிமா படப்பிடிப்புக்கான சொர்க்க பூமியாக உள்ளது.
ஆனைமலை மாசாணியம்மன் கோவில் அருகே, ஆற்றை துாய்மைப்படுத்தி சுற்றுலாவை மேம்படுத்தலாம். ஆன்மிகத்தோடு சுற்றுலா மேம்படுத்த வேண்டுமென்ற கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.
பொள்ளாச்சி தொழில் வர்த்தக சபை வாயிலாக, இக்கோரிக்கைகள் அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று வலியுறுத்தப்பட்டது. இது குறித்து, 'தினமலர்' நாளிதழிலும் அவ்வப்போது செய்திகள் வெளியிடப்பட்டு அழுத்தம் கொடுக்கப்பட்டது.
இந்நிலையில், மத்திய அரசு, மாநில அரசுடன் இணைந்து, பொள்ளாச்சியில், 'அழகிய நதி சுற்றுலா' திட்டத்தை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறித்து, மத்திய அரசின் சுற்றுலா மற்றும் பயண மேலாண்மை கழகம் வாயிலாக ஆய்வு செய்து, திட்டத்தை விரைவில் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
பொள்ளாச்சியில் 'மை பாரத்' அமைப்பு மற்றும் தொழில் வர்த்தக சபை என பல்வேறு அமைப்புகளின் ஆதரவுடன், ஆய்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
மத்திய அரசின் சுற்றுலா மற்றும் பயண மேலாண்மை கழக சிறப்பு நிலைக்குழு தலைவர் சேவக் விஜய் கூறியதாவது:
பிரதமரின் தொலைநோக்கு திட்டமான, 'விக்சித் பாரத்' திட்டத்தின் கீழ், கல்லுாரி மாணவ, மாணவியரிடையே சுற்றுலா குறித்தான விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். சுற்றுலா மேம்பாட்டினால் ஏற்படும் நன்மைகள், பொருளாதார மேம்பாடு, வேலைவாய்ப்பு, சர்வதேச சுற்றுலாவினால் ஏற்படும் நன்மைகள் குறித்து பல தகவல்களை தெரிந்து கொள்வதற்காக மக்களுக்கு பல திட்டங்கள் நேரிடையாக சென்றடையும்.
இதற்காக, கல்லுாரிகளில் இளைஞர் சுற்றுலா குழு (டூரிசம் யுவா குரூப்) அமைப்பதற்கு மத்திய அரசு திட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.
முதன் முறையாக, தமிழகத்தில் பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில் உள்ள கல்லுாரிகளில் திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. 'அழகிய நதி சுற்றுலா' திட்டத்துக்கான ஆய்வினை, மத்திய அரசின் சுற்றுலா பயண மேலாண்மை கழகம், மாநில அரசுடன் இணைந்து செயல்படுத்தப்பட உள்ளது.
இத்திட்டத்தில், இளம் மாணவியரிடையே உணவு பழக்கத்தின் முக்கியத்துவம் உணர்த்தும் வகையில் பயிற்சி, பெண்களுக்கு பாரம்பரிய வாழ்வியல் முறைகள் கற்றுத்தர பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. மாணவியரின் எதிர்காலத்துக்காக, 'டூரிசம் செக்டரில்' வேலைவாய்ப்புகள் அதிகமாக உள்ளது.
திட்டத்துக்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து, மத்திய அரசு, மாநில அரசுடன் இணைந்து ஆய்வு மேற்கொள்ளப்படும். கல்லுாரி மாணவர்களுக்கான கருத்தரங்கம் விரைவில் நடத்தப்படும்.
இவ்வாறு, அவர் கூறினார்.