Lifestyle and human interest
நள்ளிரவில் பாய்ந்த 'ஆபரேஷன் தண்டர் ஸ்டிரைக்'-ரூ. 6 கோடி போ@தைப்பொருள் கடத்தல் முறியடிப்பு

போதைப்பொருள் புழக்கத்தை முற்றிலுமாக ஒழிப்பதற்காகவும், கடல் வழியாக அண்டை நாடான இலங்கைக்கு நடக்கும் கடத்தலை முறியடிப்பதற்காகவும் 'ஆபரேஷன் தண்டர்ஸ்ட்ரைக்' என்ற பெயரில் காரைக்கால் காவல்துறை அதிரடித் திட்டத்தைத் தீவிரமாக முன்னெடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாகக் கடந்த 2 நாட்களாக நடத்தப்பட்ட அதிரடி வேட்டையில், சர்வதேசச் சந்தையில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள கொடிய ரகச் செயற்கை போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதுடன், பெரும் கடத்தல் கும்பலும் வளைத்துப் பிடிக்கப்பட்டுள்ளது.
காரைக்கால் மற்றும் அதன் கடலோரப் பகுதிகளில் போதைப்பொருள் கடத்தல் நெட்வொர்க் தீவிரமாகச் செயல்பட்டு வருவதாகக் கிடைத்த ரகசியத் தகவலின்பேரில், மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர் உத்தரவின் கீழ் தனிப்படை போலீஸ் குழுக்கள் அமைக்கப்பட்டன. தொழில்நுட்பக் கண்காணிப்பு மற்றும் தீவிரத் தரவு பகுப்பாய்வு மூலம் சந்தேகத்திற்குரிய நபர்களின் நடமாட்டத்தை போலீசார் துல்லியமாகக் கண்காணித்து வந்தனர்.
நள்ளிரவில் காரைக்கால்மேடு மற்றும் தரங்கம்பாடி ஆகிய பகுதிகளில் நடத்தப்பட்ட அதிரடி சோதனையின் போது, அதிகாரிகளுக்கே அள்ள அள்ள அதிர்ச்சி தரும் வகையில் சர்வதேசச் சந்தையில் சுமார் 6 கோடியே 8 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 7.605 கிலோ கிராம் எடையுள்ள மெத்தம்பேட்டமைன் என்ற கொடிய ரகச் செயற்கை போதைப்பொருள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுப் பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட 3 மொபைல் போன்கள் மற்றும் 3 மோட்டார் சைக்கிள்களும் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த மெகா கடத்தல் விவகாரத்தில் தரங்கம்பாடியைச் சேர்ந்த ராஜேஷ் மற்றும் காரைக்கால்மேடு பகுதியைச் சேர்ந்த பாக்கியராஜ் ஆகிய இருவரிடமிருந்தும் வணிக ரீதியிலான போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இவர்களோடு தொடர்புடைய இலங்கையைச் சேர்ந்த சர்வதேசக் கடத்தல் புள்ளியான அலெக்ஸ் ராபர்ட் ஜெரெமி என்பவரையும் போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.
இதுமட்டுமன்றி, 12.14 கிலோ கிராம் கஞ்சா கடத்தல் தொடர்பாகத் தனித்தனியாகப் பதிவு செய்யப்பட்ட 2 வழக்குகளில் ஒரு சிறுவன் உட்பட மேலும் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 'ஆபரேஷன் தண்டர்ஸ்ட்ரைக்' அதிரடி வேட்டை தொடங்கிய செப்டம்பர் 5-ஆம் தேதி முதல் தற்போது வரை இலங்கை நாட்டவர் உட்பட மொத்தம் 11 பேர் கும்பலாகக் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)