உப்பாறு அணைக்கு தண்ணீர் திறக்காதீங்க! பி.ஏ.பி., விவசாயிகள் இன்று போராட்டம்
பொள்ளாச்சி: உப்பாறு அணைக்கு நீர் திறக்க பரிந்துரை செய்வதை கண்டித்து, பி.ஏ.பி., விவசாயிகள் இன்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.
திருப்பூர் மாவட்டம், திருமூர்த்தி அணையில் இருந்து, நான்கு மண்டலமாக பிரிக்கப்பட்டு பாசனத்துக்கு நீர் வினியோகம் செய்யப்படுகிறது. நடப்பாண்டு இரண்டாம் மற்றும் மூன்றாம் மண்டல பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட உள்ளது. இச்சூழலில் உப்பாறுக்கு தண்ணீர் திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் இன்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.
திருமூர்த்தி நீர்தேக்க திட்டக்குழு தலைவர் பரமசிவம் அறிக்கை:
பி.ஏ.பி., பாசனத்தில், இரண்டாம் மற்றும் மூன்றாம் மண்டல பாசன கால்வாய்களை துார்வாரி விரைவில் தண்ணீர் திறக்க வேண்டும் என்ற கோரிக்கை இதுவரை நிறைவேற்றப்படவில்லை. இந்நிலையில், பி.ஏ.பி., திட்டத்துக்கு எவ்வித சம்பந்தமும் இல்லாத, உப்பாறு அணைக்கு தண்ணீர் திறப்பதற்கு நீர்வளத்துறை அதிகாரிகள் அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது விவசாயிகளின் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்ட கலெக்டரை சந்தித்து பிரச்னையை எடுத்துக்கூறியும், கலெக்டர் எவ்விதமான உத்தரவாதமும் வழங்கவில்லை. எனவே, கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று காலை, 10:00 மணிக்கு பொள்ளாச்சி – உடுமலை ரோட்டில் அமைந்துள்ள, பி.ஏ.பி., அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு பாசன சங்கத்தில் இருந்தும் விவசாயிகள் பங்கேற்க உள்ளனர்.
இவ்வாறு, தெரிவித்துள்ளார்.