Religion
புது முயற்சிகளுக்கு சகுனம் சொல்லும் பனைமரங்கள்... விராலூர் வடமலையான் கோயில் அதிசயங்கள்!
வடமலையானே வாக்கு கொடுத்த இடம் என்பதால், இந்த இரண்டு பனை மரங்களுக்கு அருகில் நின்று பக்தர்கள் தங்கள் முக்கிய முயற்சிகளுக்கு சகுனம் பார்க்கிறார்கள்.|புது முயற்சிகளுக்கு சகுனம் சொல்லும் பனைமரங்கள்|Panai Marangal that herald omens for new ventures... The wonders of the Vadamalayan Temple in Viralur!

இந்த வடமலையானை வணங்கினால் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாளையே வணங்குவதற்குச் சமம். வடமலையானே வாக்கு கொடுத்த இடம் என்பதால், இந்த இரண்டு பனை மரங்களுக்கு அருகில் நின்று பக்தர்கள் தங்கள் முக்கிய முயற்சிகளுக்கு சகுனம் பார்க்கிறார்கள்.
பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு காஞ்சிபுரத்தில் வசித்த சில அந்தணர்கள் ராமேஸ்வரம் சென்று புனித நீராடுவது என்று முடிவு செய்து புறப்பட்டனர். மொத்தம் 26 பேர் இருந்தனர். ஆனால் சிறிது தூரம் சென்றதும்தான் தங்களோடு புதியதாக ஒருவர் சேர்ந்து வருவதை உணர்ந்தனர்.
வந்தவர் திருமண் இட்டிருந்தார். அதனால் அவர் வைணவர் என்பது புரிந்தது. பெருமாளின் பக்தரான அவரை யார் என்று கேட்கவில்லை. தங்களின் குழுவில் ஒருவர் என்றே பாவித்தனர். நடைப்பயணம் தொடர்ந்தது. பயணத்தின்போது ஒருநாள் இரவு விராலூர் என்கிற தலத்துக்கு வந்து ஓய்வெடுத்தனர். அதிகாலை கண்விழித்துப் பார்த்தபோது, திருமண் இட்டிருந்த அன்பரைக் காணவில்லை. அதிர்ந்துபோயினர் அந்தணர்கள்.
அவரைத் தேடித் திரிந்தனர். தங்களோடு இவ்வளவு தூரம் வந்தவருக்கு ஏதேனும் ஆபத்து ஏற்பட்டிருக்குமோ என்று அஞ்சினர். ஒருகட்டத்தில் தேடித் தேடி சோர்ந்துபோய் இரட்டைப் பனை மரங்கள் இருந்த பகுதிக்கு வந்து நின்றனர். பனைமரத்தின் சலசலப்பு ஓசை அவர்களுக்கு நல்ல சகுனமாகத் தெரிந்தது.
‘மரமே நல்ல சகுனம் சொல்கிறாயே... எங்களோடு வந்த ஓர் ஆளைக் காணாமல் தேடிக்கொண்டு இருக்கிறோம். உனக்கு ஏதேனும் தகவல் தெரியுமா?’ என்று சோகமாகக் கேட்டனர். அப்போது ஓர் அசீரீரி ஒலித்தது.
“நான்தான் உங்களோடு வந்து காணாமல் போனது. கலக்கத்தை விடுங்கள்’’ என்று ஒரு குரல் ஒலித்தது. அதைக்கேட்டு மகிழ்ச்சியும், திகைப்பும் ஒருசேர பெற்ற அந்த அந்தணர்கள், “அப்படி என்றால் நீங்கள் யார்?”’ என்று கேட்டனர்.
அதற்கு அசரீரி, “தினமும் காலையில் எழுந்ததும் யாரைப் பார்த்து நீங்கள் வணங்குவீர்கள்?” என்று கேட்டது. அதற்கு அவர்கள், “நாங்கள் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோபுரத்தைப் பார்த்துதான் வணங்குவோம்” என்றனர்.
அதற்கு அசரீரி, “நீங்கள் யாரை வணங்குறீர்களோ, அது நான்தான். உங்களின் பக்தியை சோதிக்கவே உங்களோடு வந்தேன். எனக்கு இந்த இடம் பிடித்த காரணத்தினால், இங்கேயே கோயில் கொள்ள நினைக்கிறேன்” என்றது.
அதைக்கேட்டு, ஆனந்தத்தில் துள்ளிக் குதித்த அந்தணர்கள், தாங்கள் பெற்ற பாக்கியத்தை எண்ணி மகிழ்ந்தனர். ராமேஸ்வரம் போவதையே மறந்தனர். புதுக்கோட்டை மகாராஜாவை போய்ச் சந்தித்து நடந்தவற்றை விவரித்தார்கள். அதைக்கேட்ட அவரும் ஆச்சர்யம் விலகாமல், “அங்கேயே பெருமாளுக்குக் கோயில் அமையுங்கள். விராலூர் பகுதியை பட்டயம் எழுதி கொடுக்கிறேன்” என்றார்.
விராலூருக்குத் திரும்பிய அவர்கள், பனைமரங்கள் இருந்த பகுதியிலேயே பெருமாளுக்குக் கோயில் அமைத்தனர். இந்தத் தலத்துப் பெருமாள் வடக்குப் பகுதியில் இருந்து வந்த பெருமாள் என்பதால், `வடமலையான்’ என்று திருநாமம் சூட்டினர்.
இப்படிப் பெருமாள் வடமலையானாகக் கோயில்கொண்ட திருத்தலம் புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகில் உள்ள விராலூரில் அமைந்துள்ளது.
வானமே கூரையாக அமைந்திருக்கும் இந்தத் திருத்தலத்தில் சுயம்புவாக வீற்றிருக்கிறார் வடமலையான். அவருக்கு இருபுறமும் பரிவார சுவாமிகள் வீற்றிருக்கிறார்கள். அதற்கு முன்பாக, கட்டை கட்டி குழிபோன்ற அமைப்பு உள்ளது. அதுதான் பாதாள கருப்பாம். அதற்கு முன்பு இரண்டு உயரமான இரும்பு தண்ட வாளங்களை நிறுவி அதற்கு இடையில் வடமலையானுக்குப் பிரியமான பெரிய வடிவிலான மணியைத் தொங்கவிட்டுள்ளார்கள்.
அதேபோல், பக்கவாட்டில் பாப்பாத்தி அம்மாள் வீற்றிருக்கிறார். அருகிலேயே தனி இடத்தில பாம்பாலம்மன் அமர்ந்து ஆட்சி புரிகிறார். தவிர, வரிசையாக தனி பீடங்களில் பதுவாக மூன்று கன்னிமார், ஐந்து கன்னிமார், ஏழு கன்னிமார், ஒன்பது கன்னிமார், மதுரை வீரன்சாமி ஆகிய தெய்வங்கள் அமைந்திருக்கிறார்கள்.
மேலும், கோயில் வளாகம் முழுக்க மூன்று அடிகள் முதல் ஐந்து அடிகள் வரையிலான எண்ணற்ற பெரிய பெரிய கல் விளக்குத் தூண்களும், அதையொட்டி வேல்களும் நடப்பட்டுள்ளன. அந்த வளாகத்திலேயே அருகருகே நிற்கும் இரண்டு பனை மரங்களை பக்தர்கள் இப்போதும் வணங்கி வருகிறார்கள்.
இந்த கோயில் தல வரலாறு குறித்து, விராலூரைச் சேர்ந்த அருள்மிகு சீனிவாச பெருமாள் கோயில் அர்ச்சகர் மணிகண்டன் பகிர்ந்துகொண்டார்.
``இருபதுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் வழிபடும் தெய்வம் இவர். பலருக்கும் இவர் குலதெய்வம். ஒவ்வொரு வருடமும் சிவராத்திரியன்று இந்தக் கோயிலில் திருவிழா களைகட்டும். காது குத்துவது, முடி எடுப்பது என்று பக்தர்கள் இங்கு வேண்டுதல்களை நிறைவேற்றுவார்கள். அன்று அன்னதானம் நடைபெறும். பக்தர்கள் உரல், உலக்கையை எடுத்து வந்து கோயில் வளாகத்தில் வைத்து பச்சரியை இடித்து மாவில் மாவிளக்கு தயாரித்து வடமலையானுக்குப் படையல் போடுவார்கள்.
அன்று மட்டும் ஆறுகால பூஜை நடைபெறும். அன்று இரவு இங்குள்ள நூற்றுக்கும் மேற்பட்ட கல் விளக்குத் தூண்களில் லிட்டர் லிட்டராக எண்ணெய் ஊற்றி பக்தர்கள் விளக்கு ஏற்றுவார்கள். விடிய விடிய இந்த கோயிலே ஜோதிமயமாக இருக்கும். அந்த நாளில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் இங்கு ஒன்று கூடுவார்கள். அன்று இரவு நாடகமும் போடுவார்கள்.வடமலையானுக்கு வஸ்திரம் சாத்தி வேண்டிக்கொள்வார்கள். தேங்காய், பழம், மாலை கொண்டு பூஜை செய்யச் சொல்வார்கள்.
அத்துடன், இங்குள்ள கல் கம்பங்களில் தீபமேற்ற ஒவ்வொரு பக்தர்களும் 5-ல் இருந்து 10 லிட்டர் வரை எண்ணெய் வழங்குவார் கள். வடமலையானுக்குச் சைவப் படையல்தான் என்றாலும் கோயிலுக்கு வெளியே வைத்து வடமலையானுக்கு முன்பு அமைந்திருக்கின்ற பாதாள கருப்பை வேண்டிக்கொண்டு கிடா வெட்டி, அங்கேயே சமைத்துப் பக்தர்களுக்கு வழங்குவார்கள்.
திருமணத் தடை, குழந்தைப் பாக்கியம் இல்லாமை, கடன் பிரச்னை, உடல்நலப் பிரச்னைகள், வீடு கட்டுவதில் இருக்கும் தடை உள்ளிட்ட பாதிப்புகள் தீர, வடமலையானிடம் பக்தர்கள் அதிகம் வேண்டுதல் வைக்கிறார்கள்.
அதேபோல், வடமலையானுக்கு முன்பு உள்ள பாதாள கருப்பு குழியில் பக்தர்கள் வேண்டிக்கொண்டு, சில்லறைக் காசுககளை வீசுவார்கள். இங்கு சாமிக்குப் படைக்கப்படும் பொங்கலை பக்தர்களுக்குப் பிரசாதமாக வழங்குவார் பூசாரி.
இந்த வடமலையானை வணங்கினால் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாளையே வணங்குவதற்குச் சமம். வடமலையானே வாக்கு கொடுத்த இடம் என்பதால், இந்த இரண்டு பனை மரங்களுக்கு அருகில் நின்று பக்தர்கள் தங்கள் முக்கிய முயற்சிகளுக்கு சகுனம் பார்க்கிறார்கள். குறிப்பாகக் குழந்தைப் பாக்கியம் இல்லாதவர்கள் இங்குள்ள தீப கம்பங்களில் தீபமேற்றி வடமலையானை மனதார வேண்டிக்கொண்டால், விரைவில் குழந்தைப் பாக்கியம் நிறைவேறும் என்பது நம்பிக்கை” என்றார் மணிகண்டன்.
தினமும் காலை 7 மணியில் இருந்து இரவு 7 மணி வரை பூசாரி கோயிலில் இருப்பார். வாய்ப்பிருக்கும் அன்பர்கள் ஒருமுறை விராலூர் சென்று வடமலையானை தரிசனம் செய்து வாருங்கள்.
எப்படிச் செல்வது?: திருச்சியில் இருந்து மதுரை செல்லும் சாலையில், விராலி மலையைத் தாண்டி சுமார் 3 கி.மீ. தூரத்தில் உள்ளது விராலூர். அங்கே இறங்கிக்கொண்டு, இடதுபுறம் 2 கி.மீ. தூரம் பயணித்தால் இந்தக் கோயிலை அடையலாம்.
