காவலர் குடியிருப்பில் குடிநீர் தட்டுப்பாடு ஓராண்டாகியும் தீர்க்கப்படாததால் அவதி
திருப்போரூர், செப். 9– திருப்போரூரில் உள்ள காவலர் குடியிருப்பில், ஒராண்டாகியும் குடிநீர் பிரச்னை
திருப்போரூரில் உள்ள காவலர் குடியிருப்பில், ஒராண்டாகியும் குடிநீர் பிரச்னை தீர்க்கப்படாததால், போலீஸ்காரர்களின் குடும்பத்தினர் அவதிப்பட்டு வருகின்றனர்.
செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் பேரூராட்சி ஓ.எம்.ஆர்., சாலையை ஒட்டி, காவலர் குடியிருப்பு உள்ளது. இங்குள்ள மூன்று அடுக்குமாடி குடியிருப்புகளில் 70க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர்.
இந்த குடியிருப்பில் ஓராண்டாக குடிநீர் தட்டுப்பாடு நிலவுவதால், அங்கு வசித்து வரும் போலீஸ்காரர்களின் குடும்பத்தினர் சிரமப்பட்டு வருகின்றனர்.
இந்த வளாகத்தில் உள்ள குடிநீர் கிணற்றில் இருந்து, மேற்கண்ட குடியிருப்புகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. மழைகாலத்தில் கிணறு நிரம்பினால் ஓரளவிற்கு குடிநீர் பிரச்னை ஏற்படுவதில்லை. கோடை காலத்தில் கிணற்றில் தண்ணீர் வறண்டு, குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுகிறது. தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படுவது தொடர்பாக அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. கிணற்றின் அருகே ஆழ்துளை கிணறு அமைக்க கோரி மனு அளித்தும் பலனில்லை.
தற்போது, குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க, எங்களது சொந்த செலவில்,டேங்கர் லாரிகள் வாயிலாக குடிநீர் கொண்டு வந்து பயன்படுத்தி வருகிறோம்.
அதேபோல், இந்த வளாகத்தில் கழிவுநீர் கால்வாய் அடைப்பு ஏற்பட்டு, வெளியேறும் வசதி இல்லாததால், கழிவுநீர் தேங்கி கொசு உற்பத்தி அதிகரிக்கிறது. இதனால், டெங்கு போன்ற தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. குப்பை கழிவுகள் தேங்குவதால் துர்நாற்றம் வீசுகிறது.
கட்டடங்கள் வண்ணம் பூசாமல் பொலிவிழந்துள்ளன. வளாகம் முழுவதும் பராமரிப்பின்றி முட்செடிகள் வளர்ந்துள்ளது. இவ்வாறு பல்வேறு பிரச்சனைகள் குடியிருப்பு வளாகத்தில் உள்ளன.
எனவே, காவலர் குடியிருப்பில் குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்த துறை சார்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.