Economy, business and finance
தென்தமிழகத்தின் தொழில் வளர்ச்சிக்கு உதவுமா விழிஞ்ஞம் துறைமுகம்?
ஒரு துறைமுகம் வளர்ந்தால் அதைச் சுற்றி கிடங்குகள், லாஜிஸ்டிக்ஸ் பூங்காக்கள், உற்பத்தி ஆலைகள் உருவாவது உலகளாவிய நடைமுறை.

சென்னையை மையமாகக் கொண்டே தமிழகத்தின் பெரும்பான்மை தொழில் செயல்பாடுகள் இருக்கும் சூழலில், தென் தமிழகத்தில் ஒரு புதிய தொழில் அத்தியாயம் தொடங்குவதற் கான வாய்ப்பை உருவாக்கி உள்ளது கேரளாவின் விழிஞ்ஞம் சர்வதேச துறைமுகம்!
திருவனந்தபுரம் அருகே அமைந்துள்ள விழிஞ்ஞம் துறைமுகத்தை பிரதமர் மோடி கடந்த 2025 மே மாதம் திறந்து வைத்தார். கடந்த ஆகஸ்ட் 18-ம் தேதி முதல் முழுமையான ஏற்றுமதி–இறக்குமதி செயல்பாடுகள் தொடங்கி உள்ளன. செப்டம்பர் 1-ம் தேதி ‘MSC Beryl’ என்ற கப்பல் கண்டெய்னர்களை ஏற்றிக்கொண்டு ஸ்பெயினின் Valencia நோக்கிப் புறப்பட்டது. இது இந்தத் துறைமுகத்தின் சர்வதேசப் பயணத்துக் கான முக்கியத் தொடக்கம்.
“இந்தியாவிலேயே ஐரோப்பா, அமெரிக்க நாடுகளுக்கு நேரடி கப்பல் போக்குவரத்து சேவை வழங்கும் ஒரே ஆழ்கடல் சர்வதேச டிரான்ஸ்ஷிப் மென்ட் துறைமுகம் விழிஞ்ஞம்” என்கிறார், விழிஞ்ஞம் சர்வதேச துறைமுகத்தின் சி.இ.ஓ பிரதீப் ஜெயராமன்.
மேலும் அவர் கூறுகையில், “இது சாதாரண துறைமுகம் அல்ல. அதிநவீன தானியங்கி இயந்திரங்களால் கண்டெய்னர்கள் கையாளப்படுவதால் உடல் உழைப்பு சார்ந்த கடினமான வேலைகள் குறைவு. அதற்குப் பதிலாக மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல் இன்ஜினீயரிங், பராமரிப்பு, ITI, பாலிடெக்னிக் மற்றும் கிரேன் ஆபரேட்டர்கள் போன்ற திறன் சார்ந்த வேலைகளுக்கு அதிக வாய்ப்புகளை இந்தத் துறைமுகம் கொண்டுள்ளது.
தற்போது முதல் கட்ட செயல்பாட்டில் சுமார் 900 பேரும், இரண்டாம் கட்ட கட்டுமானத் தில் 1,200 பேரும் பணியாற்றுகின்றனர். இரண்டாம் கட்டப் பணிகள் 2028–29 காலகட்டத்தில் முடியும்.
முதல் கட்டத்தின் வடிவமைப்புத் திறன் ஆண்டுக்கு 10 லட்சம் TEUs (Twenty-foot Equivalent Unit). ஆனால், கடந்த ஆண்டே 13 லட்சம் கண்டெய் னர்கள் கையாளப்பட்டுள்ளன. நடப்பாண்டு இலக்கு 14 லட்சமாக உள்ளது. இரண்டாம் கட்டம் நிறை வடைந்ததும் மொத்த திறன் 57 லட்சம் TEUs ஆக உயரும். ரயில் இணைப்புக்கான டெண்டர் விடப்பட்டுள்ள நிலையில், செப்டம்பரில் திட்டம் இறுதி செய்யப் பட்டு பணிகள் தொடங்க உள்ளன” என்றவரிடம், ’இது கொழும்புக்கு போட்டியாக இருக்குமா?’ என்று கேட்டோம்.
கொழும்புக்கு போட்டியா?
“இல்லை. இந்தியா ஆண்டுக்கு 2.2–2.3 கோடி கண்டெய்னர்களை கையாள் கிறது. ஆனால், Shanghai துறைமுகம் 5.2 கோடி கண்டெய்னர்களையும், Singapore துறைமுகம் 4.4 கோடி கண்டெய்னர்களையும் கையாள்கின்றன. எனவே, இந்தியாவுக்கு இன்னும் பல உலகத்தர துறைமுகங்கள் தேவை.
தற்போது இந்திய சரக்குகள் வெளிநாட்டு டிரான்ஸ் ஷிப்மென்ட் துறைமுகங்கள் வழியாகச் செல்வதால், ஒரு கண்டெய்னருக்கு 80–100 டாலர் கூடுதலாகச் செலவாகிறது. இதனால் ஆண்டுக்கு சுமார் 250 மில்லியன் டாலர், அதாவது ரூ.2,000 கோடிக்கும் மேல் அந்நியச் செலாவணி இழப்பு ஏற்படுகிறது. விழிஞ்ஞம் மூலம் ஒரு கண்டெய்னருக்கு ரூ.5,000–10,000 வரை சேமிக்க முடியும்.
விழிஞ்ஞத்தின் மிகப்பெரிய பலம் அதன் புவியியல் அமைப்பு. சர்வதேச கிழக்கு–மேற்கு கப்பல் வழித்தடத்திலிருந்து வெறும் 10 நாட்டிகல் மைல் தொலைவில் உள்ளது. 400 மீட்டர் நீளமுள்ள ULCV கப்பல்கள் ஆண்டின் 365 நாள்களும், 24 மணி நேரமும் வந்து செல்லும் இயற்கை ஆழம் இங்கு உள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளில் 1,100-க்கும் மேற்பட்ட கப்பல்கள் இந்தத் தளத்தில் கையாளப்பட்டுள்ளன” என்று அவர் கூற, இதனால் தென் தமிழகத்துக்கு என்ன லாபம் கிடைக்கும் என்று கேட்டோம்.
தென் தமிழகத்துக்கு என்ன லாபம்?
“இதுதான் தமிழகத்துக்கான மிகப்பெரிய வாய்ப்பு.திருப்பூரிலிருந்து ஐரோப்பாவுக்கு ஆடைகள் செல்லும் போது, தூத்துக்குடியில் சிறிய கப்பலில் ஏற்றி கொழும்பு அல்லது சிங்கப்பூர் போன்ற இடங்களில் பெரிய கப்பலுக்கு மாற்ற வேண்டிய நிலை உள்ளது.
இதனால் சரக்கு சென்றடைய 50–60 நாள்கள் ஆகிறது. விழிஞ்ஞம் மூலம் ஸ்பெயின் அல்லது ஜெர்மனியை நேரடியாக 20–25 நாள்களில் அடைய முடியும். ஒரு கண்டெய்னருக்கு சுமார் ரூ.10,000 வரை கையாளுதல் செலவும் குறையலாம்.
குறிப்பாக, கடல் உணவுகள் போன்ற அழுகும் பொருள் களுக்கு இது மிகப்பெரிய நன்மையாக இருக்கும். தற்போது கடல் உணவு, உணவுப் பொருள்கள், முந்திரி, கயிறு பொருள்கள் ஏற்றுமதியாகின்றன. முந்திரி, ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள், தொழிற்சாலை இயந்திரங்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன. பெங்களூரிலிருந்து மும்பை துறைமுகம் 1,200 கி.மீ; விழிஞ்ஞம் வெறும் 600 கி.மீ தூரம்தான். எனவே, கர்நாடகத்திலிருந்தும் சரக்குகள் விழிஞ்ஞத்தை நோக்கி வரத் தொடங்கியுள்ளன.
தென் தமிழகத்தின் அடுத்தகட்ட வளர்ச்சி!
ஒரு துறைமுகம் வளர்ந்தால் அதைச் சுற்றி கிடங்குகள், லாஜிஸ்டிக்ஸ் பூங்காக்கள், உற்பத்தி ஆலைகள் உருவாவது உலகளாவிய நடைமுறை. சென்னை துறைமுகத்தைச் சுற்றி ஒரகடம், ஸ்ரீபெரும்புதூர் ஆட்டோமொபைல் மையங்களாக மாறியதே இதற்குச் சான்று.
அதேபோல் நாங்குநேரி போன்ற SIPCOT பகுதி களில் தொழிற்சாலைகள் அமைத்து, மூலப்பொருள்களை விழிஞ்ஞம் வழியாக இறக்குமதி செய்து, உற்பத்திப் பொருள்களை உடனடியாக உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய முடியும்” என்றார் அவர்.
விழிஞ்ஞம் துறைமுகத்தால் தென் தமிழகத்துக்கு ஏற்படும் நன்மை குறித்து ரெஜின் இம்போர்ட்ஸ் & எக்ஸ்போர்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் உரிமையாளர் ரெஜினிடம் பேசினோம்.
“விழிஞ்ஞம் சர்வதேச துறைமுகம் செயல்பாட்டிற்கு வருவதன் மூலம் தென் தமிழகத்திற்குப் பல்வேறு வர்த்தக நன்மைகள் கிடைக்கும். இதுவரை கொழும்பு, சிங்கப்பூர் போன்ற வெளிநாட்டுத் துறைமுகங்களுக்குச் சென்று, பின்னர் சிறிய கப்பல்கள் வழியாகத் தமிழகத்திற்கு வந்து சேர்ந்த பெரிய சரக்குக் கப்பல்கள் இனி நேரடி யாக விழிஞ்ஞம் துறைமுகத்திற்கே வந்து சேரும்.
வெளிநாட்டுத் துறைமுகங்களில் சரக்குகளை இறக்கி ஏற்றுவதற்கான காலதாமதம் தவிர்க்கப்படுவதால், வழக்கமான சரக்குப் போக்குவரத்து நேரத்தை விட 15 முதல் 20 நாட்கள் வரை விரைவாகச் சரக்குகள் வந்து சேரும். வெளிநாட்டுத் துறைமுகங்களின் வழித்தடப் போக்குவரத்து மற்றும் கையாளுதல் கட்டணங்கள் தவிர்க்கப்படுவதால், ஒரு கன்டெய்னருக்குக் குறைந்தபட்சம் 100 டாலர் வரை செலவு குறையும். துறைமுகம் முழுவீச்சில் பயன்பாட்டிற்கு வரும்போது இந்தச் சேமிப்பு 150 முதல் 200 டாலர் வரை உயர வாய்ப்புள்ளது.
நாடுகளுக்கு இடையிலான கன்டெய்னர் வாடகைக் கட்டண நிலவரம் சரக்குக் கப்பல் வந்து சேரும் தொலைவைப் பொறுத்து மாறுபடும். ஆப்பிரிக்காவின் கினி-பிசாவு பகுதியில் இருந்து ஒரு கண்டெய்னர் இந்தியா வந்துசேர சுமார் 5,500 டாலர் ஆகிறது. ஐவரி கோஸ்ட் பகுதியில் இருந்து வந்து சேர 250 முதல் 300 டாலர் வரை ஆகிறது. மொசாம்பிக்கில் இருந்து வந்துசேர சுமார் 600 டாலர் ஆகிறது. இந்தோனேசியாவிலிருந்து வர சுமார் 350 டாலர் ஆகிறது. இந்தக் கட்டணங்கள் அனைத்தும், விழிஞ்ஞம் வழித்தடம் வழியாக வரும்போது கணிசமாகக் குறையும் சாத்தியங்கள் உள்ளன.
கேரளா மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் போதிய நிலப்பரப்பு இல்லாத சூழலில், எதிர்காலத்தில் திருநெல்வேலி, தூத்துக்குடி போன்ற தென் மாவட்டங்களில் புதிய தொழிற்சாலைகள் மற்றும் தொழில் சார்ந்த உள்கட்டமைப்புகள் பெருக வாய்ப்புகள் உள்ளன. இறக்குமதி மற்றும் ஏற்றுமதி சார்ந்த நடைமுறைகள் தற்போது தொடங்கப் பட்டிருந்தாலும், கண்டெய்னர் சரக்கு நிலையங்கள் மற்றும் சேமிப்புக் கிடங்குகளுக்கான இடவசதிகள் முழுமை பெற வேண்டும். எனவே, துறைமுகம் முழுமையான செயல்பாட்டுக்கு வர இன்னும் சில காலம் தேவைப்படலாம்” என்றார்.
மொத்தத்தில் விழிஞ்ஞம் ஒரு துறைமுகம் மட்டுமல்ல; தென் தமிழகத் தின் சர்வதேச வர்த்தகத்துக்கான புதிய வாசல். அதைத் தொழில்துறை யினர் சரியாகப் பயன்படுத்திக்கொண் டால், தமிழக தொழில் வளர்ச்சியின் அடுத்தகட்ட பாய்ச்சல் விழிஞ்ஞம் வழியாக நிகழும்!
