Arts, culture, entertainment and media
"எம்.எஸ்.சுப்புலட்சுமி பாத்திரத்தில் நடிக்க இயல்பாகவே பதற்றமிருக்கும்" - ராஷ்மிகாவுக்கு கமல் தைரியம்
நடிகை ரஷ்மிகா மந்தனா எம்.எஸ்.சுப்புலட்சுமி வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் நடிக்கிறார்.| Actress Rashmika Mandanna is starring in the biopic of M.S. Subbulakshmi.
நடிகை ராஷ்மிகா மந்தனா எம்.எஸ்.சுப்புலட்சுமி வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படத்தில் நடிக்கிறார்.
பாரத ரத்னா, பிரபல கர்நாடக சங்கீத பாடகி எம். எஸ். சுப்புலட்சுமியின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படமாக உருவாகிறது.
இந்தப் படத்தில் ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். அனிருத் இசையமைக்கிறார். ஜெர்சி, கிங்டம், மேஜிக் படங்களை இயக்கிய கெளதம் தின்னூரி இயக்க அல்லு அரவிந்த் தயாரிக்கிறார்.
எம். எஸ். சுப்புலட்சுமியின் 110வது பிறந்தநாளை முன்னிட்டு நேற்று இந்தப் படத்தின் அறிமுக விழா சென்னையில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் பேசிய நடிகர் கமல்ஹாசன், ``நான் முதலில் சினிமாவுக்கு குழந்தை நட்சத்திரமாக வந்தபோது, என் வாழ்க்கை இப்படித் தொடருமா என்றெல்லாம் எனக்குத் தெரியாது. வேடிக்கைக்காகத்தான் எங்க அப்பா என்னை சினிமாவில் அனுப்பி வைத்தார்.
பிறகு படிக்கப் போக வேண்டும் என்றார். நல்ல வேளையாக எனக்குப் படிப்பு வரவில்லை. அதனால் எனக்கு கொஞ்சம் இடைவெளி கிடைத்தது. அப்போதுதான் எனக்கு இசை புரிய ஆரம்பித்தது. புரிந்ததைச் செய்யத் தொடங்கியதும் தேடித் தேடி நடனம் கற்றுக்கொண்டேன். பிறகு நடன உதவியாளராக, உதவி இயக்குநராகி கிளாப் போடுபவனாக மாறினேன்.
இன்று மீண்டும் இப்படத்தின் தொடக்க விழாவில் கிளாப் அடித்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. எம்.எஸ். சுப்புலட்சுமி அம்மாவைப் பற்றிப் பேசுவதற்கு முன்னால், இப்படத்தின் தயாரிப்பாளர்கள் அல்லு அரவிந்த் மற்றும் பண்ணி வாசு ஆகியோருக்கு என் நன்றிகள். தமிழ் சினிமாவின் முக்கியமான காட்பாதரான எல்.எஸ்.ஆர். டங்கன் அவர்கள் 88 வயதில் ஆவணப்படம் எடுக்க வந்தபோது, அவர்கூட வேலை செய்ய ஆசைப்பட்டு கையெழுத்து வாங்கினேன்.
அவரோடு பணியாற்ற முடியவில்லையே என்ற ஆதங்கத்தை இந்தத் திரைப்பட நிகழ்வு போக்கியுள்ளது. எம்.எஸ். அம்மா அவர்களின் இசை ஒட்டுமொத்த இந்தியாவையும், குறிப்பாக தென்னிந்தியாவையும் இணைக்கும் ஒரு சக்தியாக இருந்தது. தமிழ், தெலுங்கு, கன்னடம், சமஸ்கிருதம், ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் அவருடைய உச்சரிப்பு உன்னதமானது.
'ரங்கபுர விஹாரா' பாடலைக் கேட்கும்போது மனதில் ஒரு தனி சந்தோஷம் வரும். அந்த மாபெரும் கலைஞரின் இசை அமைப்பிற்கு என்ன வயதோ, அதைத் தன் குரலால் மும்மடங்கு ஆக்கியவர் எம்.எஸ். அம்மா. நான் 'ஹே ராம்' படம் எடுத்தபோது 'வைஷ்ணவ ஜனதோ' பாடலை எம்.எஸ். அம்மாதான் பாட வேண்டும் என்று ஆசைப்பட்டேன். ஆனால் அவர்களுக்கு உடம்பு முடியாமல் போனதால், டி.கே. பட்டம்மாள் அம்மா பாடினார். எம்.எஸ். சுப்புலட்சுமி, டி.கே. பட்டம்மாள், எம்.எல். வசந்தகுமாரி ஆகிய மூன்று மாபெரும் இசைத் திலகங்களும் என் தலையைத் தொட்டு ஆசீர்வதித்திருக்கிறார்கள்.
அதனால்தான் இந்த விழாவிற்கு அழைத்ததும் நேரத்தைப் பற்றிக் கூட யோசிக்காமல் ஓடி வந்தேன். இப்படத்தின் மூலம் அனிருத்தின் இசைப் பயணம் முற்றிலும் ஒரு புதிய பாதையை அடையும். இயக்குநர் கௌதம் அவர்களுக்கு இது மிகப்பெரிய பொறுப்பு. எம்.எஸ். அம்மா வெறும் பூஜைக்குரியவர் மட்டுமல்ல, நம் பிரியத்திற்குரியவர் என்பதை நீங்கள் திரையில் காட்ட வேண்டும்.
வீணை வாசிப்பது, நடனமாடுவது, நடிப்பது எனப் பன்முகத் திறமை கொண்ட இந்திய அளவிலான முதல் 'பான்-இந்தியன் லேடி சூப்பர்ஸ்டார்' அவர்தான்.
இப்படிப்பட்ட ஒரு புகழ்பெற்ற ஆளுமையின் கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகருக்கு இயல்பாகவே பதற்றம் இருக்கும். நல்ல படக்குழு உங்களுடன் இருப்பதால் அதைச் சிறப்பாகச் செய்வீர்கள். நாம் அனைவரும் ஒரே திராவிடக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். சென்னை, ஹைதராபாத், பெங்களூரு என எல்லைகளைக் கடந்து இசை அனைவரையும் ஒன்றிணைக்கும். கலைக்கு எல்லைகள் கிடையாது. இந்தத் திரைப்படத்தை உருவாக்குவதற்காக படக்குழுவினருக்கு என் நன்றிகள். இந்தியா முழுவதும் பெருமைப்படும் வகையில் இந்தத் திரைப்படம் அமையும். கொண்டாட்ட சந்திப்பில் மீண்டும் சந்திப்போம், நன்றி!" என்றார்.
