Politics
நிதி நெருக்கடியா, நீதி நெருக்கடியா..? - 32-லிருந்து 14 ஆகக் குறையும் நுகர்வோர் குறைதீர் ஆணையங்கள்!

1,000-க்கும் குறைவான வழக்குகள் நிலுவையில் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச நிர்வாகங்கள், சுமுகமான `மாற்று முன்மொழிவு’களைப் பின்பற்றிக் கொள்ளலாம் என்று தீர்ப்பு வழங்கினர்.
`தமிழகத்தில் நிதிப் பற்றாக்குறை காரணமாக நுகர்வோர் குறைதீர் ஆணையங்களின் எண்ணிக்கை 32-ல் இருந்து 14 ஆகக் குறைப்பு; 18 ஆணையங்கள் மூடப்படும் அல்லது அருகிலுள்ள ஆணையங்களோடு இணைக்கப்படும்’ எனத் தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் முன்மொழிந்துள்ளது.
`இது உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் வழிகாட்டுதல்படி செயல்படுத்தப் பட்டுள்ளது. குற்றங்கள் குறையக் குறைய நுகர்வோர் ஆணையங்கள் குறைவதுதான் சரி’ என்று அரசு ஒரு பக்கமும், `இப்படிக் குறைப்பதால் மக்கள் வழக்கு நடத்த பல மைல் தூரம் செல்ல வேண்டும்’ என்று வழக்கறிஞர்கள் மறுபக்கமும் விவாதம் செய்து வருகின்றனர்.
`நீதி காக்க நிதி இல்லை!’ - மாநிலங்கள் வருத்தம்
இந்த விவாதம், கடந்த பிப்ரவரி மாத உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் இருந்து தொடங்கு கிறது. ‘உத்தரப்பிரதேச மாநில நுகர்வோர் குறைதீர் ஆணைய உறுப்பினர்களின் ஊதியம் மற்றும் படிகள்’ பற்றிய உச்ச நீதிமன்ற ரிட் மனுவில், தலைமை நீதிபதி சூர்யாகாந்த் மற்றும் நீதிபதி ஜாய்மால்யா பாக்சி ஆகியோர் அடங்கிய அமர்வு வழக்கை விசாரித்தது. அருணாசலப் பிரதேசம், சிக்கிம், திரிபுரா, மிசோரம், மணிப்பூர், லட்சத்தீவு, அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் மற்றும் கோவா உள்ளிட்ட பல சிறிய மாநிலங்களும் யூனியன் பிரதேசங்களும், நுகர்வோருக்கான முழுநேர ஆணையங்களை நிறுவுவதும் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு மாவட்ட ஆணையத் தைக் கொண்டிருப்பதும் நிதிரீதியாக சாத்தியமற்றது என்று தெரிவிக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து நீதிபதிகள், 1,000-க்கும் குறைவான வழக்குகள் நிலுவையில் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச நிர்வாகங்கள், சுமுகமான `மாற்று முன்மொழிவு’களைப் பின்பற்றிக் கொள்ளலாம் என்று தீர்ப்பு வழங்கினர்.
அந்த வழக்கின் தொடர்ச்சியாக கடந்த ஜூலையில் உச்ச நீதிமன்றம், 1,000-க்கும் குறைவான நிலுவையில் உள்ள நுகர்வோர் வழக்குகளைக் கொண்ட மாநிலங்கள், சம் பந்தப்பட்ட உயர் நீதிமன்றத்தின் ஒப்புதலைப் பெற்ற பிறகு, மாவட்ட ஆணையங்களின் எண்ணிக்கையைச் சீரமைத்துக் கொள்ளலாம் என்று தெரிவித்தது.
தமிழ்நாடு அரசு எடுத்த முடிவு!
உச்ச நீதிமன்றத்தின் உத்தரவைப் பின்பற்றும் நோக்கில் தமிழ்நாடு அரசு, உச்ச நீதிமன்றத்தில் ஒரு மறுசீரமைப்பு முன்மொழிவை சமர்ப்பித்தது. அந்த மறுசீரமைப்புத் திட்டத்தின் கீழ், மாவட்ட நுகர்வோர் குறைதீர்ப்பு ஆணையங்களின் எண்ணிக்கையை 32-லிருந்து 14-ஆகக் குறைப்பதாக தெரிவிக்கப்பட்டது. அதன்மூலம் 18 மாவட்ட ஆணையங்கள் கலைக்கப்படும் அல்லது அண்டை மாவட்டங்களில் உள்ள ஆணையங்களுடன் இணைக்கப்படும் என்று தெரிவித்தது.
அதன் மூலம் திருப்பூர் மற்றும் நீலகிரி வழக்குகள் ஈரோட்டிலும், வேலூர் வழக்குகள் கிருஷ்ணகிரியிலும், சேலம் வழக்குகள் நாமக்கல்லிலும், சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் வழக்குகள் வில்லிபுத்தூரிலும், புதுக்கோட்டை வழக்குகள் தஞ்சாவூரிலும் கையாளப்படும். இதேபோல், கரூர் வழக்குகள் திருச்சி மற்றும் கன்னியா குமரியிலும், தூத்துக்குடி வழக்குகள் திருநெல்வேலியிலும், விழுப்புரம், கடலூர் வழக்குகள் திருவண்ணாமலையிலும், திண்டுக்கல், தேனி வழக்குகள் மதுரையிலும், திருவாரூரில் பெரம்பலூர், அரியலூர், நாகப்பட்டினம் வழக்குகளும் விசாரிக்கப் படும்.
குறிப்பாக, சொந்தக் கட்டடங்கள் இல்லாத ஆணையங்களைப் பராமரிப்பதில் ஏற்படும் நிதிச் சுமையைக் குறைப்பதற்காக, இதுகுறித்த அறிக்கை உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகத் சொல்லப் படுகிறது. ஆனால், அதேவேளையில் இது, நிவாரணம் மற்றும் நீதியை நாடிச் செல்லும் நுகர்வோருக்கு வெகுதூர பயணத்தையும், செலவுகளையும், சிரமத்தையும் அதிகரிக்கும் என்று கூறி வழக்கறிஞர்கள் மற்றும் நுகர்வோர் ஆர்வலர்கள் இதை எதிர்க்கின்றனர்.
சி.வி.சண்முகம் Vs வெங்கட்ரமணன்!
தமிழக அரசின் இந்த முன்மொழிவை எதிர்த்து சட்ட மன்றத்தில் கடந்த செப்டம்பர் 1-ம் தேதி மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் அ.தி.மு.க உறுப்பினர் சி.வி. சண்முகம், “கடலூர், விழுப்புரம் மாவட்டத்தில் செயல்பட்டு வந்த நுகர்வோர் ஆணையத்தை, திருவண்ணாமலைக்கு மாற்றப் போவதாக தகவல்கள் வருகின்றன. நுகர்வோர் ஆணையங்களை தமிழக அரசு மாற்றக் கூடாது” என்றார்.
அதற்கு பதில் அளித்த உணவுத்துறை அமைச்சர் வெங்கட ரமணன், “நுகர்வோர் தொடர்பான வழக்குகள் குறைவதை எண்ணி நாம் மகிழ்ச்சி அடைய வேண்டும். மக்கள் விழிப்புணர்வுடன் இருக்கிறார்கள்” என்றார்.
`நுகர்வு உரிமை தாக்கப்படுகிறது!’
இது குறித்து வழக்கறிஞர் ஊட்டி விஜயனிடம் கேட்டோம். “நுகர்வோர் குறைதீர் ஆணையங்கள் என்பவை அடிப்படையில் பல்வேறு சர்வதேச ஒப்பந்தங்கள், உலக நாடுகளெல்லாம் சேர்ந்து யோசித்த ஒரு கான்செப்ட். மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையங்கள், மாவட்டம்தோறும் இருக்க வேண்டும்.
இன்று, நுகர்வோர் மீதான மறைமுகமான மற்றும் நேரடியான தாக்குதல்கள் அதிகளவில் உள்ளன. மிகப்பெரிய நிறுவனங்கள் என்பார்கள். ஆனால், அவர்கள் விற்கும் உணவுப் பொருளில் புழு நெளியும். குழந்தைகளுக்கான பவுடரில் கேன்சர் அபாயம் இருக்கும்.
ஆணையங்களை மூடக்கூடாது!
இப்படிப்பட்ட இக்கட்டான வேளையில், நுகர்வோர் ஆணையங்களின் எண்ணிக்கை யைக் குறைப்பது என்பது அபத்தமான, முட்டாள்தனமான, நீதிக்கு எதிரான போக்கு. சின்னக்குறி என்று ஓர் ஊர் இருக்கிறது. நீலகிரி மாவட்டத்தில், கேரளா பார்டரில் அமைந்திருக்கிறது. கூக்கல்துறை என்று ஓர் ஊர் இருக்கிறது. அது நீலகிரியின் இன்னொரு பார்டர். இந்த இரண்டு பகுதியிலிருந்து ஊட்டி மையப்பகுதிக்கு வருவதே சிரமம். இவ்வூரைச் சேர்ந்த நுகர்வோர்கள் வழக்குத் தொடர இனி ஈரோடு கன்ஸ்யூமர் கோர்ட்டுக்குத்தான் போக வேண்டும்.
நிதிப் பற்றாக்குறை என்று சொல்வது பொய். நிதியைக் காரணம் காட்டி நீதி மறுக்கப்படக் கூடாது. ஒரு பகுதியில் 100, 75 கேஸ்கள் பெண்டிங்கில் உள்ளன என்கிற நிலையில், `அங்கே இருக்கிற நீதிபதி, பணியாளர்களுக்கு ஏன் ஊதியம் கொடுக்க வேண்டும்?’ என்று எண்ணக் கூடாது. மாறாக, அந்த ப்பகுதியில் நுகர்வோர் விழிப்புணர்வு குறைவாக உள்ளது என்பதை உணர வேண்டும்.
கார்ப்பரேட்டுக்கு துணைப்போவதா?
நுகர்வோர்கள் கேள்வி எழுப்ப வேண்டும். பொருள்கள், சர்வீஸ்கள், சிகிச்சைகள் என தாங்கள் கட்டும் பணத்துக்கான மதிப்பு கிடைக்காத எல்லா இடங்களிலும் கேள்வி கேட்க வேண்டும். அரசு, அதை அவர்களுக்கு வலியுறுத்த வேண்டும், கற்றுத் தர வேண்டும். ஆனால், `வழக்குகள் குறைவாக உள்ளன, எனவே நுகர்வோர் ஆணையங்களைக் குறைக்கிறோம்’ என்பது நிறுவனங்களுக்கும், கார்ப்பரேட்டுகளுக்கும் துணைபோகும் செயல். எனவே, இந்தப் பிரச்னையை தமிழ்நாடு அரசு ஒரு கொள்கை முடிவாகப் பார்க்க வேண்டும்’’ என்றார் வலியுறுத்தி.
நுகர்வோர்கள் உரிமைகள் காக்கப்படுமா, அல்லது நுகர்வோர்கள் அலைக்கழிக்க ப்படுவார்களா?
