மோட்டார் சைக்கிள் மீது சொகுசு பஸ் மோதி 2 வாலிபர்கள் உயிரிழப்பு
கீழ்பென்னாத்தூர்,கீழ்பென்னாத்தூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது சொகுசு பஸ் மோதியதில் 2 வாலிபர்கள் சம்பவ இடத்திலேயே பலியாகினர். திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்

கீழ்பென்னாத்தூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது சொகுசு பஸ் மோதியதில் 2 வாலிபர்கள் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அடுத்த வழுதலங்குணம் ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதியில் வசிப்பவர் வேடியப்பன். இவரது மகன் செல்வம் (வயது 25). பெங்களூருவில் கூலி வேலை செய்து வந்தார். அதே கிராமத்தில் உள்ள புதுத்தெருவை சேர்ந்த ராஜா ராமன் மகன் பரத் (23). இவர் சென்னையில் இருசக்கர வாகன மெக்கானிக்காக வேலை பார்த்து வந்தார்.
நண்பர்களான செல்வம் மற்றும் பரத் ஆகிய இருவரும் சொந்த ஊரான வழுதலங்குணம் கிராமத்தில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி விழா மற்றும் திருமண விழாக்களில் கலந்து கொள்வதற்காக ஊருக்கு வந்திருந்தனர்.
நேற்று முன்தினம் இரவு 8 மணியளவில் இருவரும் சாமி கும்பிட்டு விட்டு சொந்த வேலையாக மோட்டார் சைக்கிளில் வெளியூர் சென்றனர். பின்னர் நள்ளிரவு 12.30 மணி அளவில் இருவரும் மீண்டும் வழுதலங்குணம் கிராமத்திற்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர். கீழ்பென்னாத்தூர் புறவழிச்சாலையில் உள்ள ராஜாதோப்பு கூட்ரோடு அருகே வந்தபோது புதுச்சேரியில் இருந்து திருவண்ணாமலை நோக்கி சென்ற தனியார் சொகுசு பஸ் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் செல்வம் மற்றும் பரத் ஆகிய இருவரும் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் கீழ்பென்னாத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் இறந்த 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விநாயகர் சதுர்த்தி விழாவில் கலந்து கொள்வதற்காக சொந்த ஊருக்கு வந்திருந்த நண்பர்கள் இருவரும் விபத்தில் பலியான சம்பவம் வழுதலங்குணம் கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.