Politics
“நியாயம் கேட்டு போராட சட்ட நகலை எரிக்கலாமா?” - காவலருக்கு எதிராகச் சமூக ஆர்வலர்கள் கொந்தளிப்பு

தனக்கு உரிய நியாயம் கிடைக்கவில்லையெனில், அடுத்தகட்டமாக தேசியக்கொடியையும் எரிக்கப்போவதாக மிரட்டல் விடுக்கிறார்
அரசு மருத்துவர்களின் தவறான சிகிச்சையால் என் மகள் மாற்றுத்திறனாளி ஆகிவிட்டாள். இதற்குக் காரணமான மருத்துவர்கள்மீது கைது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ எனக் கோரி காவலர் கோதண்டபாணி, கொடி எரிப்பு, சட்ட நகல் எரிப்பு எனத் தொடர் போராட்டங்களை நடத்திவருவது சர்ச்சையைக் கிளப்பிவருகிறது.
திருவள்ளூர் மாவட்டம், ஆவடி சி.ஆர்.பி.எஃப் பகுதியில் மனைவி, இரண்டு மகன்கள், ஒரு மகள் எனக் குடும்பத்துடன் வசித்துவரும் கோதண்டபாணி, ‘டி 7 ஆவடி டேங்க் ஃபாக்டரி காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வருகிறார்.
அண்மையில் ஆளுநர் மாளிகை முன்பு அவர், சட்ட நகல் எரிப்புப் போராட்டம் நடத்தியிருப்பது பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த சூழலில், கோதண்டபாணியை நேரில் சந்தித்துப் பேசினோம்.
“என் மகள் பிரதிக்ஷாவுக்கு இப்போது 13 வயது. சிறுநீரகப் பிரச்னை (நெப்ரோட்டிக் சிண்ட்ரோம்) தொடர்பாக எழும்பூர் அரசு குழந்தைகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தாள்.
இந்த நிலையில், 2021-ம் ஆண்டு திடீரென பிரதிக்ஷாவின் வலது காலில் அரிப்பு ஏற்பட ஆரம்பித்தது. பரிசோதனை செய்த மருத்துவர்கள், ‘ரத்த உறைவு பிரச்னை இருக்கிறது’ எனக் கூறி ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
அங்கே, ரத்த உறைவுக்கு முன்பு கொடுக்கக்கூடிய மருந்தைக் கொடுக்காமல், ரத்த உறைவு பிரச்னைக்கான அடுத்தகட்ட மருந்தைத் தவறாகச் செலுத்தி விட்டனர். இதனால் குழந்தையின் மூளைக்குச் செல்லும் ரத்தக்குழாயில் அடைப்பு ஏற்பட்டு குழந்தைக்கு வலிப்பு வந்துவிட்டது.
உடனே, ‘குழந்தைக்கு மூளைக் காய்ச்சல் வந்துவிட்டது’ எனக் கூறி அதற்கான மருந்து கொடுத்தனர். ஆனால், பரிசோதனை முடிவுகள் வந்தபோதுதான் தெரிந்தது, குழந்தைக்கு மூளைக் காய்ச்சலே இல்லை என்பது. ஆனால், மருத்துவர்கள் அளித்த தவறான சிகிச்சையால் குழந்தை கோமா நிலைக்குச் சென்றதோடு, இடது கை காலும் செயலிழந்துபோயின.
ஒருகட்டத்தில், பாதிப்புக்குள்ளான வலது காலில் மணிக்கட்டுக்குக் கீழே பாதத்தை ஆபரேஷன் மூலம் வெட்டி எடுத்து அகற்றிவிட்டனர். ஓடியாடி விளையாடிக்கொண்டிருந்த என் மகள் கால் இழந்து முடங்கிப்போனதற்குக் காரணமான அரசு மருத்துவர்கள்மீது நடவடிக்கை எடுக்குமாறு, எழும்பூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தேன். ஆனால், என் புகாரைப் பதிவு செய்யவில்லை.
இது குறித்து விசாரித்த தேசிய குழந்தைகள் நல ஆணையமும்கூட, ‘குழந்தைக்குப் பிறவி ஊனம்’ என டைரக்டர் ஆஃப் மெடிக்கல் எஜுகேஷனல் மூலமாக சர்டிஃபிகேட் கொடுத்து மாநில அரசின் அதிகார வர்க்கத்துக்குத் துணைபோய்விட்டது.
என் மகளின் எதிர்காலத்தையே சிதைத்துவிட்ட மாநில அரசு நிர்வாகத்தைக் கண்டித்து, தி.மு.க கொடியை எரித்துப் போராட்டம் நடத்தினேன். டெல்லிக்குச் சென்று தேசிய குழந்தைகள் நல ஆணைய அலுவலகத்தின் முன்பு, பா.ஜ.க கொடியை எரித்தேன். அண்மையில் ஆளுநர் மாளிகை முன்பு சட்ட நகல் எரிப்பு போராட்டம் நடத்தினேன்.
என் குழந்தையின் மருத்துவச் செலவுக்காக, நகை, பணம், குடும்பச் சொத்து என 50 லட்சம் ரூபாய் வரையிலும் செலவு செய்துவிட்டேன். இப்போதும் மாதம்தோறும் மருந்துகளுக்கான செலவுகளைத் தாக்குப்பிடிக்க முடியாமல் குடும்பத்தோடு அவதிப்பட்டுவருகிறேன். என் நிலை யாருக்கும் வரக் கூடாது. எனக்கு நியாயம் வேண்டும் என்பதற்காகப் பல வழிகளிலும் போராடுகிறேன். இதில் நியாயமெல்லாம் பார்க்க முடியாது” என்றார் கலங்கிய கண்களுடன்.
இதற்கிடையே, இந்த விவகாரம் குறித்துப் பேசுகிற சமூக ஆர்வலர்கள், “காவலர் கோதண்டபாணியின் மகளுக்கு நேர்ந்த துயரம் மன்னிக்க முடியாதது. இந்த பாதிப்புக்குக் காரணமான அரசு மருத்துவர்களின் அலட்சியம் குறித்து, துறைரீதியிலான விசாரணை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதேசமயம், காவல்துறை விதிகளை மீறி, பொதுவெளியில் காவலர் உடையுடனே வந்து கட்சிக் கொடிகளை எரிப்பது, சட்ட நகலை எரிப்பது போன்ற சட்டவிரோதச் செயல்களில் கோதண்டபாணி ஈடுபட்டுவருவது ஏற்றுக்கொள்ள முடியாதது.
தனக்கு உரிய நியாயம் கிடைக்கவில்லையெனில், அடுத்தகட்டமாக தேசியக்கொடியையும் எரிக்கப்போவதாக மிரட்டல் விடுக்கிறார். காவல்துறை தரப்பிலோ, கோதண்டபாணி மீது வெறுமனே ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதாகச் சொல்லி ஒதுங்குகின்றனர். படிப்பறிவில்லாத சாதாரண மக்கள் சட்ட நகலை எரித்தாலோ, தேசியக்கொடியை அவமானப்படுத்தினாலோ, அவர்கள்மீது கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளும் போலீஸ் உயரதிகாரிகள், இவர்மீது மட்டும் நடவடிக்கை எடுக்காமல் இருப்பது ஏன்... போலீஸ்காரர்களுக்கு ஒரு சட்டம், பொதுமக்களுக்கு வேறொரு சட்டமா?’’ என்று கேள்வி எழுப்புகின்றனர்.
இதையடுத்து காவலர் கோதண்டபாணி விவகாரத்தில் துறைரீதியாக எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்ற கேள்வியுடன் ஆவடி போலீஸ் கமிஷனர் செந்தில்குமாரிடம் கேட்டோம். ‘‘காவலர் கோதண்டபாணி விவகாரத்தில் ஏற்கெனவே மருத்துவக்குழு வழக்கைப் பரிசீலித்துவிட்டது. மற்றபடி எல்லா விஷயங்களுக்கும் விரைவில் பதில் அளிக்கப்படும்’’ என்றார்.
கோதண்டபாணியின் ஆதங்கத்துக்கு நியாயம் சொல்ல அரசுத் தரப்பு தயாரில்லை என்பது ஒரு பக்கம் குற்றம் என்றால், அதற்காகப் போராட்டம் நடத்துகிறேன் என்ற பெயரில் சட்ட நகலை எரிப்பதும் குற்றம்தான்!
