திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்
திருப்போரூர்: திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில், முகூர்த்த நாள் என்பதால் நேற்று, 50க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடைபெற்றதால், பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
சென்னை புறநகரான திருப்போரூரில், மும்மூர்த்தி அம்சம் கொண்ட கந்தசுவாமி கோவில் உள்ளது. அறுபடை வீட்டிற்கு நிகரான இக்கோவிலில், எந்திர முருகன் வழிபாடும் நடைபெறுகிறது.
மதநல்லினிக்க அச்சாரமாக விளங்கும் இக்கோவிலில், திருமண வேண்டுதல் இருப்பதாலும், போக்குவரத்து வசதி இருப்பதாலும், திருப்போரூர் பகுதியில் திருமணம் செய்வோரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
அந்த வகையில், முகூர்த்த நாளான நேற்று, இக்கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. பக்தர்கள், சரவண பொய்கை குளத்தில் நீராடி, கந்தசுவாமியை வழிபட்டனர். மொட்டை அடித்தல், காது குத்துதல் போன்ற நேர்த்திக்கடன்களை நிறைவேற்றினர்.
அதேபோல, கோவில் வளாகத்தில், 50க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடந்தன. திருமணத்திற்கு, மணமக்கள், உறவினர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் வந்திருந்தனர். மற்ற பகுதிகளில் திருமணம் முடித்தவர்களும், கந்தசுவாமி கோவிலுக்கு வந்திருந்தனர். இதனால், கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.