Crime and courts · 1 outlet covered this

கண்ணீருடன் வந்த மாணவி.. பேருந்தை தாக்கிய பெற்றோர்.. ஸ்டேஷனுக்குள் புகுந்து அடி உதை அவரு நடைய பார்த்தீங்களா?

How outlets told it

Polimer News1004d ago

கண்ணீருடன் வந்த மாணவி.. பேருந்தை தாக்கிய பெற்றோர்.. ஸ்டேஷனுக்குள் புகுந்து அடி உதை அவரு நடைய பார்த்தீங்களா?

Read at Polimer News
கண்ணீருடன் வந்த மாணவி.. பேருந்தை தாக்கிய பெற்றோர்.. ஸ்டேஷனுக்குள் புகுந்து அடி உதை அவரு நடைய பார்த்தீங்களா?
Photo: Polimer News

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகே அரசு பேருந்தில் பள்ளி மாணவியிடம் நடத்துநர் அநாகரிகமாக நடந்து கொண்டதாகக் கூறப்படும் புகாரைத் தொடர்ந்து, ஆத்திரமடைந்த மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அரசு பேருந்து நடத்துநரை வழிமறித்து தாக்கியதுடன், காவல் நிலையத்திற்குள்ளேயும் புகுந்து தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஊத்தங்கரை அருகே அரசு பேருந்தில் பள்ளி மாணவி ஒருவர் பயணம் செய்துள்ளார். அப்போது, பேருந்து நடத்துநர் மாணவியிடம் தவறாக நடந்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இதனால், அதிர்ச்சியடைந்த மாணவி, வீட்டிற்கு சென்று நடந்த சம்பவத்தை பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து, ஆத்திரமடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள், சம்பந்தப்பட்ட அரசு பேருந்து, ஊத்தங்கரை பகுதிக்கு வந்தபோது, அதனை வழிமறித்துள்ளனர். பின்னர், நடத்துநரை பேருந்தில் இருந்து கீழே இறக்கி சரமாரியாக தாக்கியதாகவும் அதனால் அவருக்கு காயம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், மாணவியின் உறவினர்கள் மற்றும் பொதுமக்களிடமிருந்து நடத்துநரை மீட்டு விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். ஆனால், ஆத்திரம் அடங்காத மாணவியின் உறவினர்கள் மற்றும் சிலர் காவல் நிலையத்திற்கும் திரண்டு வந்தனர். அங்கு போலீசாரின் பாதுகாப்பையும் மீறி நடத்துநரை மீண்டும் தாக்கியதாக கூறப்படுகிறது. இதனை போலீசார் தடுக்க முயன்றபோது தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பார்த்தீங்களா? செய்யுறதையும் செஞ்சுட்டு அவருடைய நடைய பார்த்தீங்களா? ஸ்டேஷனுக்குள்ள பாதுகாப்பு கொடுத்ததும் எவ்வளவு கெத்தா நடந்து வர்றார் பார்த்தீங்களா? என உறவினர்கள் ஆவேசம் அடைந்தனர். அரசு பேருந்து நடத்துநர் காவல் நிலைய வளாகத்திற்குள்ளேயே தாக்கப்பட்ட சம்பவம் ஊத்தங்கரை பகுதியில் பரபரப்பையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மாணவியிடம் நடத்துநர் உண்மையில் அத்துமீறி நடந்துகொண்டாரா என்பது உள்ளிட்ட அனைத்து கோணங்களிலும் விசாரணை நடைபெற்று வருகிறது.