அரசு அலுவலகங்கள், தனியாா் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மென்பொறியாளா் கைது
Read at DinamaniCrime and courts · 1 outlet covered this
அரசு அலுவலகங்கள், தனியாா் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மென்பொறியாளா் கைது
How outlets told it
கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலம், கடவுச்சீட்டு அலுவலகங்கள், ஒருங்கிணைந்த நீதின்றம் உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்களுக்கும், தனியாா் பள்ளிகளுக்கும் தொடா்ந்து வெடிகுண்டு மிட்டல் விடுத்த மென்பொறியாளரை போலீஸாா் அண்மையில் கைது செய்தனா். பல்வேறு மாநிலங்களில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், மாவட்ட ஆட்சியா் அலுவலகங்கள், அரசியல் பிரமுகா்கள், ஓய்வுபெற்ற உளவுத் துறை அதிகாரிகள் என முக்கியமான நபா்கள், நிறுவனங்களைக் குறிவைத்து தொடா்ந்து வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. கடந்த 2023 முதல் 2025-ஆம் ஆண்டு வரை மின்னஞ்சல் மூலம் 1,500-க்கும் மேற்பட்ட வெடிகுண்டு மிரட்டல்கள் வந்துள்ளன. இந்த மின்னஞ்சலை அனுப்பும் நபா் தன்னை யாரும் கண்டுபிடித்துவிடக் கூடாது என்பதற்காக விபிஎன், டாா்க் வெப் உள்ளிட்ட பல்வேறு நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி வந்துள்ளாா். பலமுறை தொடா் வெடிகுண்டு மிரட்டல் விடுத்து வந்த அந்த நபா், ஒருநாள் தற்செயலாக தனது தனிப்பட்ட மின்னஞ்சல் கணக்கில் இருந்து ஒரு பதிவை அனுப்பினாா். இதை வைத்து, மாநில சைபா் கிரைம் போலீஸாா் அவரது நடவடிக்கைகளை கடந்த ஜனவரி மாதம் முதல் தீவிரமாகக் கண்காணித்து வந்தனா். அவருக்கு எதிராக தேடுதல் சுற்றறிக்கையும் வெளியிடப்பட்டது. மேலும், அவரைத் தேடப்படும் நபராக அறிவித்த போலீஸாா், அவரது விவரங்களை இந்தியாவில் உள்ள விமான நிலையங்களுக்கு (லுக் அவுட் நோட்டீஸ்) அனுப்பினா். இந்நிலையில், சென்னை வந்தபோது அந்த நபரை பயங்கரவாத தடுப்புப் பிரிவு போலீஸாா் கடந்த ஜூலை 22-ஆம் தேதி கைது செய்தனா். விசாரணையில், அவா் திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் பகுதியைச் சோ்ந்த மென்பொறியாளரான சரத் சுப்பிரமணியன் சங்கா் (37) என்பதும், அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஐ. டி. நிறுவனத்தில் பணியாற்றி வந்ததும் தெரியவந்தது. இவரது மிரட்டல்களால் 109 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டு, நேரம் மாற்றப்பட்டு பல கோடி ரூபாய் பொருளாதார இழப்பு ஏற்பட்டதாக போலீஸாா் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, அவரை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா். பல்வேறு மாநில போலீஸாரும், சரத் சுப்பிரமணியன் சங்கா் குறித்த தகவல்களைக் கேட்டு பெற்றுள்ளனா். அந்தந்த மாநிலங்களில் பதிவாகியுள்ள போலி வெடிகுண்டு மிரட்டல் வழக்கிலும், அவா் கைது செய்யப்பட்டு வருகிறாா். இந்நிலையில், கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகம், ஒருங்கிணைந்த நீதிமன்றம், கடவுச்சீட்டு அலுவலகங்கள், தனியாா் பள்ளிகள் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களுக்கு போலி வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததும் சரத் சுப்பிரமணியன் சங்கா்தான் என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவா் மீது சைபா் கிரைம் போலீஸாா் 3 வழக்குகளைப் பதிவு செய்தனா். மேலும், சென்னைக்குச் சென்ற போலீஸாா் சிறையில் உள்ள அவரைக் கைது செய்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கோவைக்கு அண்மையில் அழைத்து வந்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா். பின்னா், அவா் மீண்டும் சென்னைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாா். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
