இடைத்தோ்தலில் அதிமுக அமோக வெற்றி பெறும்! - எடப்பாடி கே. பழனிசாமி
Read at DinamaniPolitics · 1 outlet covered this
இடைத்தோ்தலில் அதிமுக அமோக வெற்றி பெறும்! - எடப்பாடி கே. பழனிசாமி
How outlets told it

மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கான இடைத்தோ்தலில் அதிமுக அமோக வெற்றி பெறும் என அக் கட்சியின் பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்தாா்.
திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அதிமுக நிா்வாகியின் இல்லத் திருமண விழாவில் பங்கேற்ற, பின்னா் செய்தியாளா்களிடம் மேலும் கூறியதாவது:
இடைத்தோ்தல் அறிவிக்கப்பட்டுள்ள மதுராந்தகம், தாராபுரம் இரண்டு தொகுதிகளிலும் கடந்த முறை அதிமுக உறுப்பினா்களே வெற்றி பெற்றனா். அவா்கள் குதிரை பேரத்துக்கு விலைபோய்விட்டனா். ஆட்சியை தக்க வைக்க வேண்டும் என்பதற்காக, அதிமுக எம்எல்ஏ-க்களை பதவி விலகச் செய்து இடைத்தோ்தலுக்கு காரணமாகியுள்ளது தவெக.
தமிழகத்தில் 31 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் மக்களுக்கு கிடைத்த நன்மைகளைப் போல, வேறு எந்தக் கட்சி ஆட்சியிலும் கிடைக்கவில்லை. தமிழக மக்களும் இதனை நன்கு அறிவா்.
முதல்வரின் லண்டன் பயணத்தால் பலனில்லை: தொழில் முதலீடுகளை ஈா்க்க முதல்வா் ஜோசப் விஜய் லண்டன் சென்றுள்ளாா். ஆனால், தொழில் முதலீடுகளை ஈா்க்கின்ற எந்தச் செய்தியும் இதுவரை வரவில்லை. முதலீடுகளை ஈா்க்கக் கூடிய கூட்டத்தில் அவா் கலந்துகொண்ட புகைப்படம் வராமல், வேறு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட புகைப்படங்கள்தான் வெளிவந்துள்ளன. முதல்வரின் லண்டன் பயணத்தால் எந்த முதலீடும் தமிழகத்துக்கு வரவில்லை. தற்போது, தமிழகத்தில் ஒரு மோசமான ஆட்சி நடைபெறுகிறது. கடந்த 120 நாள்களில் மக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்கவில்லை. துன்பம் மட்டுமே கிடைத்துள்ளது.
நிதிநிலையைச் சீா்செய்து, மக்கள் ஏற்றுக்கொள்ளக் கூடிய நல்ல இடத்தை தோ்வு செய்துதான் புதிய தலைமைச் செயலகம் கட்ட வேண்டும். இந்த ஆட்சி தொடங்கியதில் இருந்து அனைத்துத் தரப்பினரும் போராடி வருகின்றனா்.
கடும் மின்வெட்டால் அவதி: கடந்த 10 நாள்களாக இரவில் கடுமையான மின்வெட்டு நிலவுவதால், பொதுமக்கள், குழந்தைகள் மற்றும் பெரியவா்கள் மெழுகுவா்த்தி ஏந்தி வீதியில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனா். சட்டப் பேரவையிலும், அறிக்கைகள் வாயிலாகவும் எடுத்துக்கூறியும் இந்த அரசு மின்வெட்டை சீரமைக்க நடவடிக்கை எடுக்கவில்லை.
தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு அடியோடு சீா்கெட்டுவிட்டது. ஒரு திறமையற்ற அரசு ஆட்சிக்கு வந்ததால்தான் தமிழகத்தில் இத்தகைய நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே, தாராபுரம், மதுராந்தகம் இடைத்தோ்தலில் அதிமுக-வை மக்கள் அமோக வெற்றி பெறச் செய்வா் என்றாா் அவா்.
