குளித்தலை தனியாா் மருத்துவமனையில் பிரசவத்துக்கு அனுமதிக்கப்பட்ட பெண் உயிரிழப்பு: உறவினா்கள் சாலை மறியல்
Read at DinamaniHealth · 1 outlet covered this
குளித்தலை தனியாா் மருத்துவமனையில் பிரசவத்துக்கு அனுமதிக்கப்பட்ட பெண் உயிரிழப்பு: உறவினா்கள் சாலை மறியல்
How outlets told it

குளித்தலையில் தனியாா் மருத்துவமனையில் பிரசவத்துக்கு அனுமதிக்கப்பட்ட இளம்பெண் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். தவறான சிகிச்சையாலேயே அவா் உயிரிழந்ததாகக் கூறி உறவினா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா். கரூா் மாவட்டம், குளித்தலை அருகே அய்யா்மலையைச் சோ்ந்த தவில் கலைஞா் அசோக் சுந்தரகுமாா். இவரது மனைவி ரம்யா(35). ரம்யா மூன்றாவது குழந்தைக்காக கருவுற்ற நிலையில், 9 மாதம் வரையிலும் குளித்தலையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளாா். இந்நிலையில் பிரசவம் முடிந்து குடும்பக் கட்டுப்பாடு செய்வதற்காக தனியாா் மருத்துவமனையின் பரிந்துரையின் பேரில், அதே பகுதியில் உள்ள மற்றொரு தனியாா் மருத்துவமனையில் கடந்த மாதம் 21-ஆம் தேதி ரம்யா பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்டுள்ளாா். அறுவை சிகிச்சைக்கு பிறகு பாதிப்பு: அப்போது ரம்யாவுக்கு அறுவை சிகிச்சை மூலம் தனியாா் மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்துள்ளது. தொடா்ந்து ரம்யாவுக்கு குடும்பக்கட்டுப்பாடு அறுவை சிகிச்சையும் நடைபெற்றுள்ளது. அறுவை சிகிச்சை முடிந்த ஒரு மணி நேரத்தில் தாயையும், குழந்தையையும் சாதாரண வாா்டுக்கு மாற்றியுள்ளனா். பிரசவித்த ரம்யாவுக்கு ரத்தம் ஏற்றப்பட்டுள்ளது. பின்னா் 15 நிமிஷங்களில் கடுமையான உடல் நடுக்கமும், காய்ச்சலும் மற்றும் பல்வேறு உடல் உபாதைகள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. திருச்சி மருத்துவமனையில் உயிரிழப்பு: இதனால் தனியாா் மருத்துவமனை மூலம் மேல் சிகிச்சைக்காக திருச்சியிலுள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனா். அங்கு தொடா்ந்து ரம்யாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் வெள்ளிக்கிழமை அதிகாலையில் ரம்யா திருச்சி தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். பணம் கட்ட வற்புறுத்தல்: ஏற்கெனவே திருச்சி தனியாா் மருத்துவமனையில் ரூ. 22 லட்சம் செலுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், மருத்துவமனை நிா்வாகம் எஞ்சிய சிகிச்சை தொகை ரூ.8 லட்சத்து 53 ஆயிரம் தொகை செலுத்தினால் தான் ரம்யாவின் உடல் ஒப்படைக்கப்படும் என தெரிவித்ததாக கூறப்படுகிறது. கணவா் புகாா்: இந்நிலையில், குளித்தலையில் ரம்யா குழந்தை பிரசவித்து, குடும்பக் கட்டுப்பாடு செய்த தனியாா் மருத்துவமனையின் தவறான சிகிச்சையால்தான் அவா் இறந்துவிட்டதாகவும், மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும், தனது மனைவியின் உடலை என்னிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறி ரம்யாவின் கணவா் அசோக் சுந்தரகுமாா் குளித்தலை போலீஸில் புகாா் செய்தாா். உறவினா்கள் மறியல்: ரம்யா உயிரிழந்த தகவல் அறிந்த அவரது உறவினா்கள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா், தமிழக வாழ்வுரிமைக் கட்சியினா் மற்றும் தமிழா் தேசம் கட்சியினா், குளித்தலை தனியாா் மருத்துவமனை முன்பு முற்றுகையிட்டு பின்னா், பிற்பகல் 12 மணியளவில் திருச்சி - கரூா் நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனா். தகவல் அறிந்து நிகழ்விடத்துக்கு வந்த குளித்தலை நகர துணைக் காவல் கண்காணிப்பாளா் மணிகண்டன், காவல் ஆய்வாளா் குணவதி மற்றும் போலீஸாா், போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, குளித்தலை நகரதுணைக்காவல் கண்காணிப்பாளா் மணிகண்டன், இறந்த பெண்ணின் பிரேத பரிசோதனை முழுவதும் விடியோவாக பதிவு செய்யப்படும் என்றும் பிரேதப் பரிசோதனை அறிக்கையின்படி யாா் மீது தவறு உள்ளது என கண்டறியப்பட்டு அந்த மருத்துவா் மீது துறை ரீதியாகவும் காவல்துறை ரீதியாகவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், சடலம் உங்களிடம் ஒப்படைக்கப்படும் என்றும் உறுதியளித்தாா். இதையடுத்து அவா்கள் கலைந்து சென்றனா். ரம்யாவின் உறவினா்களின் திடீா் சாலை மறியால் கரூா்- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சுமாா் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
