தமிழக முதல்வரைக் கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம்!
Read at DinamaniPolitics · 1 outlet covered this
தமிழக முதல்வரைக் கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம்!
How outlets told it

பொதுமக்கள் பிரச்னைகளுக்கு உரிய விளக்கம் அளிக்காமல் தரம் தாழ்ந்து பேசி வரும் தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யை கண்டித்து சனிக்கிழமை திருவள்ளூர் ஒருங்கிணைந்த மாவட்ட திமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக சட்டப்பேரவையில் பொதுமக்கள் பிரச்னைகள், நிர்வாக தோல்விகள், சட்டம் ஒழுங்கு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களுக்கு உரிய விளக்கம் அளிக்காமல் முதல்வர் தரம் தாழ்ந்த பேச்சுக்களைப் பேசி வருகிறார். இதைக்கண்டித்து தமிழகம் முழுவதும் ஒவ்வொரு மாவட்டத்திலும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த அந்தக் கட்சியின் தலைவர் மு. க. ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். அதன்பேரில் திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லூரி சாலை முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு திருவள்ளூர் மத்திய மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஆவடி சா. மு. நாசர் தலைமை வகித்தார். திருவள்ளூர் மேற்கு மாவட்டச் செயலாளர் திருத்தணி எஸ். சந்திரன், கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் வல்லூர் எம். எஸ். கே. ரமேஷ் ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் கழக கொள்கைப்பரப்பு செயலாளரும், அரக்கோணம் மக்களவை உறுப்பினர் எஸ். ஜெகத்ரட்சகன, முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்கள் வி. ஜி. ராஜேந்திரன், ஆ. கிருஷ்ணசாமி, டி. ஜே. கோவிந்தராஜன் ஆகியோர் பங்கேற்றனர். அப்போது, மக்களின் அடிப்படை வசதிகள் குறித்த பிரச்னைகள், அரசின் நிர்வாக தோல்விகள், சட்டம் ஒழுங்கு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களுக்கு உரிய விளக்கம் அளிக்க வேண்டிய பொறுப்பில் தமிழக முதல்வர் இருக்கிறார். ஆனால், அதற்குப் பதில் அளிப்பதைத் தவிர்த்து தரம் தாழ்ந்த அரசியல் பேச்சுக்களை முன் வைப்பது எக்காரணம் கொண்டும் ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே ஆட்சியின் தோல்விகளுக்குப் பதில் சொல்ல முடியாமல் தப்பிக்கத் தரக்குறைவான பேச்சுக்களைப் பேசும் தரமற்ற மனிதராக முதல்வர் ஜோசப் விஜய் மாறியுள்ளதைக் கண்டித்து திமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் திருவள்ளூர் மத்திய, மேற்கு மற்றும் கிழக்கு மாவட்டங்களைச் சேர்ந்த மாநில, மாவட்ட கழக நிர்வாகிகள், ஒன்றிய, நகரப் பேரூர் கழக நிர்வாகிகள், பகுதிக்கழக செயலாளர்கள், மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள், அணிகளின் தலைவர்கள் மற்றும் கிளைக்கழக நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். படவிளக்கம்}திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லூரி சாலை முன்பு பொதுமக்கள் பிரச்னைகளுக்கு உரிய பதில் அளிக்காமல் தரம் தாழ்ந்து பேசும் முதல்வரைக் கண்டித்துக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திமுகவினர்.
