கடல்வாழ் உயிரியல் சூழலில் மாற்றம் கண்டறிந்தது இஸ்ரோவின் 'ஓசன்சாட் - 3'
Read at DinamalarScience and tech · 1 outlet covered this
கடல்வாழ் உயிரியல் சூழலில் மாற்றம் கண்டறிந்தது இஸ்ரோவின் 'ஓசன்சாட் - 3'
How outlets told it

/செய்திகள்/இந்தியா/கடல்வாழ் உயிரியல் சூழலில் மாற்றம் கண்டறிந்தது இஸ்ரோவின் 'ஓசன்சாட் - 3'ADDED : செப் 12, 2026 05:29 PM ADDED : செப் 12, 2026 05:29 PM அ நிறம் | அளவு- நமது நிருபர் -உலகின் கடலியல் உயிர்வாழ் சூழலில், வழக்கத்துக்கு மாறான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதை, இந்திய விண்வெளி ஆய்வு மையமான, 'இஸ்ரோ'வின், 'ஓசன்சாட் - 3' செயற்கைக்கோள் கண்டறிந்துள்ளது. தற்போது, 'சூப்பர் எல்நினோ' எனும் கடலியல் வெப்ப மாறுபாட்டு நிகழ்வு ஏற்பட்டுள்ளது. அதாவது, வெப்ப மண்டல பசிபிக் பெருங்கடலில், அவ்வப்போது ஏற்படும் காலநிலை நிகழ்வு, உலகின் அனைத்து கடல் பகுதிகளை பாதிக்கிறது. அந்த வகையில், இந்தாண்டு எல்நினோ மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால், கடலின் மேற்பரப்பு வழக்கத்துக்கு மாறாக வெப்பமடைந்து உள்ளது. கடலின் ஆழத்தில் இருந்து குளிர்ந்த, ஊட்டச்சத்து மிக்க நீர் கடலின் மேல்மட்டத்துக்கு வருவது தடுக்கப்படுகிறது. இதனால், கடலின் மேல்மட்டத்தில், ஊட்டச்சத்துகள் குறைந்து, கடலில் வளரும் தாவர நுண்ணுயிர்களான, 'பைட்டோபிளாங்டன்'களின் வளர்ச்சி தடுக்கப்பட்டு, 'குளோரோபில்' அளவு குறைந்து, ஒட்டுமொத்த கடல்வாழ் உயிரினங்களுக்கான ஆக்சிஜன் உற்பத்தி தடைபட்டுள்ளது. இது குறித்து, இந்தியாவின் கடல்சார் ஆய்வுக்காக அனுப்பப்பட்டுள்ள, 'ஓசன்சாட் - 3' செயற்கைக்கோளில் உள்ள, 'ஓசன் கலர் மானிட்டர் - 3, ஸ்கேட்டர் மீட்டர்' ஆகிய கருவிகள் பெருங்கடல் பரப்பை ஆராய்ந்துள்ளன. அவை, கடந்த ஜூன் மாதம் பற்றி அனுப்பிய தரவுகள், 2024, 2025ம் ஆண்டுகளின் ஜூன் மாத தரவுகளுடன் ஒப்பிடப்பட்டுள்ளன. அதன்படி, தற்போது பெருங்கடலில், குளோரோபில் அளவு பெருமளவில் குறைந்துள்ளது கண்டறியப்பட்டு உள்ளது. மேலும், வழக்கமாக, கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி வீசும் காற்று, எல்நினோவின் காரணமாக, மேற்கிலிருந்து கிழக்காக வீசுவதையும், அதனால், கடல் நீரோட்டம் மாறி உள்ளதையும் இந்த செயற்கைக்கோள் உறுதிபடுத்தி உள்ளது. ஏற்கனவே, உலக வானிலை ஆய்வு மையம், இந்தாண்டின் ஜூன் மாதத்தில் எல்நினோ தீவிரமடையும் என, கணித்திருந்தது. அதற்கு, இந்த கடல்சார் கண்காணிப்பு செயற்கைக்கோள் தரவுகள் வலுசேர்த்துள்ளன. இதனால், உலகளாவிய வானிலை மற்றும் மழையளவுகளில் பெரும் மாற்றங்கள் எற்படுவதையும், அதனால், பெருங்கடல் உயற்சூழலில் வீழ்ச்சி ஏற்பட உள்ளதையும், உலக சுற்றுச்சூழல் அமைப்புகளுக்கு, இந்திய செயற்கைக்கோள் தரவுகள் சுட்டிக்காட்டியுள்ளன.