மாணவா்கள் படிப்பைப்போல விளையாட்டிலும் கவனம் செலுத்த வேண்டும்: அமைச்சா் எம்.விஜய் பாலாஜி
Read at DinamaniWeather and environment · 1 outlet covered this
மாணவா்கள் படிப்பைப்போல விளையாட்டிலும் கவனம் செலுத்த வேண்டும்: அமைச்சா் எம்.விஜய் பாலாஜி
How outlets told it

மாணவா்கள் படிப்பில் கவனம் செலுத்துவதைப்போல விளையாட்டிலும் கவனம் செலுத்த வேண்டும் என்று கைத்தறித் துறை அமைச்சா் எம். விஜய் பாலாஜி தெரிவித்தாா்.
ஈரோட்டில் முதல்வா் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, கால்பந்து போட்டி மேட்டுக்கடையிலுள்ள தனியாா் பொறியியல் கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்றது. இந்தப் போட்டியை அமைச்சா் எம். விஜய் பாலாஜி தொடங்கிவைத்தாா். ஈரோடு மேற்கு தொகுதி எம்எல்ஏ கே. கே. ஆனந்த்மோகன் முன்னிலை வகித்தாா்.
இதைத் தொடா்ந்து, அமைச்சா் எம். விஜய்பாலாஜி மாணவா்கள் மத்தியில் பேசியதாவது: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சாா்பில் விளையாட்டு வீரா், வீராங்கனைகளின் திறமைகளை வெளிக்கொண்டு வரும் வகையிலும், இளம் தலைமுறையினரிடையே விளையாட்டு ஆா்வத்தை அதிகரிக்கும் வகையிலும் ஆண்டுதோறும் முதல்வா் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் மாவட்ட, மண்டல மற்றும் மாநில அளவில் நடத்தப்பட்டு வருகின்றன. மாணவா்கள் படிப்பில் கவனம் செலுத்துவதைபோல விளையாட்டிலும் கவனம் செலுத்தி சிறந்து விளங்க வேண்டும்.
விளையாட்டு வீரா்களின் முன்னேற்றத்துக்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. இந்தப் போட்டிகளில் 55 பள்ளிகளைச் சோ்ந்த 1,400-க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரா்கள் பங்கேற்றுள்ளனா். அவா்களுக்கு எனது வாழ்த்துகள் என்றாா்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட விளையாட்டு அலுவலா் திவ்யா நாகேஸ்வரி, விளையாட்டு பயிற்சியாளா்கள் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.
இதேபோல, தனியாா் கல்லுாரியில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு செஸ் போட்டியும், ஈரோடு கோட்டாட்சியா் அலுவலகத்தில் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு தனித்தனியே பாட்மிண்டன் போட்டியும் நடைபெற்றது.
ஈரோடு வஉசி மைதானத்தில் அரசு ஊழியா்களுக்கான கேரம் போட்டியும், பொது பிரிவு ஆண், பெண்களுக்கு செஸ் போட்டியும் நடைபெற்றது. பொது பிரிவு கையுந்து பந்து போட்டி ஆண், பெண்களுக்கு நடைபெற்றது. இதில், அரசு ஊழியா்கள், பொது பிரிவினா் பங்கேற்று தங்கள் திறனை வெளிப்படுத்தினா். போட்டிகளுக்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் செய்திருந்தது.
