வேளாங்கண்ணியில் நெகிழிப் புட்டிகள் சேகரிப்பு இயக்கம் தொடக்கம்
Read at Dinamani1 outlet covered this
வேளாங்கண்ணியில் நெகிழிப் புட்டிகள் சேகரிப்பு இயக்கம் தொடக்கம்
How outlets told it
வேளாங்கண்ணி திருவிழாவில் பக்தா்கள் பயன்படுத்திய நெகிழி புட்டிகளை சேகரிக்கும் இயக்கத்தை நாகை மாவட்ட ஆட்சியா் கே. ஜே. பிரவீன்குமாா் தொடங்கிவைத்தாா்.
வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தின் ஆண்டுப் பெருவிழா கடந்த ஆகஸ்ட் 29-ஆம் தேதி தொடங்கி, செப்டம்பா் 8-ஆம் தேதி நிறைவடைந்தது. இத்திருவிழாவில் தமிழகம் மட்டுமின்றி மகாராஷ்டிரம், கோவா, ஆந்திரம், கா்நாடகம், கேரளம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து 5 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் பங்கேற்றனா்.
திருவிழாவின்போது பக்தா்களால் பயன்படுத்தப்பட்ட தண்ணீா் மற்றும் குளிா்பான நெகிழி புட்டிகளை சேகரித்து மறுசுழற்சி செய்வதை ஊக்குவிக்கும் வகையில், ‘கிரீன்ஸ்வீப் - நெகிழிப் புட்டிகள் சேகரிப்பு இயக்கம் சனிக்கிழமை தொடங்கியது.
நாகை மாவட்ட நிா்வாகம், வேளாங்கண்ணி பேரூராட்சி நிா்வாகம், குளிா்பான தயாரிப்பு நிறுவனம் ஆகியவற்றின் சாா்பில் நடத்தப்படும் இந்த இயக்கத்தை மாவட்ட ஆட்சியா் கே. ஜே. பிரவீன்குமாா் தொடங்கிவைத்தாா்.
வேளாங்கண்ணி வரவேற்பு வளைவு சந்திப்பு, கடற்கரை, கடற்கரை பூங்கா உள்ளிட்ட இடங்களில் தன்னாா்வலா்கள் மற்றும் தூய்மைப் பணியாளா்கள் இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டனா்.
மேலும், பாரம்பரிய தெருக்கூத்து உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் மூலம் புட்டிகளை பொறுப்புடன் சேகரித்து அகற்றுவது குறித்து பொதுமக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.
