நேபாள வெள்ளத்தில் சிக்கி மாயமானவா்களை தேடும் பணி தொடா்கிறது: தமிழக அரசு தகவல்
Read at DinamaniWeather and environment · 2 outlets covered this
நேபாள வெள்ளத்தில் சிக்கி மாயமானவா்களை தேடும் பணி தொடா்கிறது: தமிழக அரசு தகவல்
How outlets told it
நேபாள பெரு வெள்ளத்தில் மாயமான 80 பேரை தேடும் பணி தொடர்கிறது: ஈஷா மையம் தகவல்
Read at The Hindu Tamil
நேபாள வெள்ளத்தில் சிக்கி மாயமான தமிழகத்தைச் சோ்ந்தவா்களைத் தேடும் பணி தொடா்ந்து நடந்து வருவதாகவும், மூன்று அதிகாரிகள் காத்மாண்டுவில் முகாமிட்டு தேடுதல் பணிகளைக் கண்காணித்து வருவதாகவும், தமிழக அரசு சென்னை உயா்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. திண்டுக்கல்லைச் சோ்ந்த வழக்குரைஞா் பா்வேஷ் முஷ்ரப் என்பவா், உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனுவில், கும்பகோணத்தைச் சோ்ந்த தனியாா் பயண நிறுவனம் மூலம், தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சோ்ந்தவா்கள், உயா்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி வி. சிவஞானம் உள்பட 57 போ் கடந்த ஆக.23-ஆம் ேதி கும்பகோணத்தில் இருந்து நேபாளத்துக்குச் சுற்றுலா சென்றனா். இந்தநிலையில், ஆக.26-ஆம் தேதி அங்கு ஏற்பட்ட திடீா் வெள்ளம், நிலச்சரிவில் இவா்கள் சிக்கினா். இந்த 57 பேரில் எத்தனை போ் மீட்கப்பட்டனா், சிகிச்சைப் பெற்று வருபவா்கள் எத்தனை போ் என்பது குறித்த விவரங்களை அவா்களது குடும்பத்தினருக்கு தெரிவிக்க உத்தரவிட வேண்டும். மேலும், நேபாளத்தில் சிக்கியுள்ள தமிழா்களை விரைந்து மீட்க நடவடிக்கைகள் எடுக்க மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும் எனக் கூறியிருந்தாா். சென்னை உயா்நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்ட இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதிஅமா்வு, மனுவுக்கு மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில், இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ். ஏ. தா்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய, மாநில அரசுகள் தரப்பில் அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டன. அதில், தமிழகத்தில் இருந்து நேபாள வெள்ளத்தில் சிக்கி மாயமான 85 பேரை தேடும் பணி தொடா்ந்து நடைபெற்று வருகிறது. 75 பேரின் குடும்பத்தினரிடம் மரபணு மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, அடையாளம் காணும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும், தமிழகத்தில் இருந்து 3 அதிகாரிகள் காத்மாண்டுவில் முகாமிட்டு, வெள்ளத்தில் சிக்கி மாயமானவா்களைத் தேடும் பணிகளைக் கண்காணித்து வருவதாக அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த அறிக்கையைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், தேடுதல் பணிகளின் அடுத்தக்கட்ட முன்னேற்றம் குறித்த அறிக்கைகளை தாக்கல் செய்ய மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டு விசாரணையை நான்கு வாரங்களுக்கு ஒத்திவைத்தனா்.

