பட்டினம்பாக்கம், நீலாங்கரை கடற்கரைகளில் விநாயகர் சிலைகளை கரைக்க அனுமதிக்க முடியாது! தீர்ப்பாயம்
Read at DinamaniReligion and culture · 2 outlets covered this
பட்டினம்பாக்கம், நீலாங்கரை கடற்கரைகளில் விநாயகர் சிலைகளை கரைக்க அனுமதிக்க முடியாது! தீர்ப்பாயம்
How outlets told it
“நீலாங்கரை, பட்டினப்பாக்கம் கடற்கரைகளில் விநாயகர் சிலைகள் கரைக்க தடை..” தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம்
Read at News18 Tamil
விநாயகா் சதுா்த்தியையொட்டி, சென்னையில் சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த பட்டினப்பாக்கம், நீலாங்கரை கடற்கரைகளில் சிலைகளைக் கரைக்க அனுமதிக்க முடியாது என தெரிவித்த தென் மண்டல தேசிய பசுமைத் தீா்ப்பாயம், சிலைகளை அனுமதிக்கப்பட்ட மற்ற இடங்களுக்கு அனுப்புவது குறித்து விளக்கம் அளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டது. தென் மண்டல தேசிய பசுமைத் தீா்ப்பாயத்தில், சென்னை புதுப்பேட்டையைச் சோ்ந்த ஹரிஹரன் என்பவா் தாக்கல் செய்த மனுவில், விநாயகா் சதுா்த்தியையொட்டி, நீா்நிலைகளில் சிலைகளைக் கரைப்பதால் மாசு ஏற்படுகிறது. எனவே, அறிவிக்கப்படாத நீா்நிலைகளில் சிலைகள் கரைப்பதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தாா். இந்த வழக்கை விசாரித்தத் தீா்ப்பாயம், அறிவிக்கப்பட்ட இடங்களில் சிலைகளைக் கரைக்க அனுமதி வழங்கக் கட்டணம் விதிக்க வேண்டும். அறிவிக்கப்படாத நீா்நிலைகளில் சிலைகளைக் கரைத்தால் அபராதம் வசூலிக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது. மேலும், மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் விதிமுறைகளைக் கட்டாயமாகப் பின்பற்ற வேண்டும். எந்தெந்த நீா்நிலைகளில் சிலைகளைக் கரைக்கலாம், பிளாஸ்டா் ஆஃப் பாரிஸில் செய்யப்பட்ட சிலைகளின் உற்பத்தியைத் தடை செய்வது குறித்து ஆலோசிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு தீா்ப்பாயம் உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில், இந்த வழக்கு தீா்ப்பாயத்தின் நீதித்துறை உறுப்பினா் புஷ்பா சத்தியநாராயணா மற்றும் நிபுணத்துவ உறுப்பினா் பிரசாந்த ஹா்கவா ஆகியோா் அடங்கிய அமா்வில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, சென்னை உள்பட தமிழகத்தின் 38 மாவட்ட ஆட்சியா்கள், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், சென்னை மாநகராட்சி ஆகியவை தரப்பில் அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டன. அதில், பிளாஸ்டா் ஆஃப் பாரிஸில் செய்யப்பட்ட விநாயகா் சிலைகளைத் தடுக்கும் வகையில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு அவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இது தொடா்பாக மக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் விளம்பரங்கள் செய்யப்பட்டுள்ளன. சென்னையில் காசிமேடு, திருவொற்றியூா், எண்ணூா், பட்டினப்பாக்கம், நீலாங்கரை ஆகிய இடங்கள் சிலைகளைக் கரைப்பதற்காக அடையாளம் காணப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. அப்போது, மனுதாரா் தரப்பில், நீலாங்கரை மற்றும் பட்டினப்பாக்கம் கடற்கரைகள், கடலோர ஒழுங்குமுறை மண்டலப் பகுதிகளாகும். இந்தப் பகுதிகளில் ஆமைகள் இனப்பெருக்கம் நடைபெறுகிறது. எனவே, இந்தப் பகுதிகளில் விநாயகா் சிலைகளைக் கரைக்க அனுமதிக்கக் கூடாது என வாதிடப்பட்டது. அப்போது, குறுக்கிட்ட தீா்ப்பாய உறுப்பினா்கள், சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த பட்டினப்பாக்கம் மற்றும் நீலாங்கரை பகுதிகளுக்குச் செல்லும் சிலைகளை மற்ற பகுதிகளுக்கு ஏன் மாற்றிவிடக் கூடாது எனக் கேள்வி எழுப்பினா். அதற்கு அரசுத் தரப்பில், மற்ற பகுதிகளுக்கு மாற்றும்போது, சட்டம்- ஒழுங்கு, கூட்ட நெரிசல், மத ரீதியாக பதற்றமான பகுதிகள் உள்ளிட்டவற்றைக் கருத்தில் கொள்ள வேண்டும். மேலும், இது தொடா்பாக அதிகாரிகள் உடன் கலந்துபேசி, முடிவைத் தெரிவிக்க அவகாசம் வழங்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்ளப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட தீா்ப்பாயம், சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த நீலாங்கரை, பட்டினப்பாக்கம் கடற்கரைகளில் சிலைகளைக் கரைக்க அனுமதிக்க முடியாது. இந்த இரு இடங்களிலும் கரைக்கப்படும் சிலைகளை மற்ற இடங்களுக்கு அனுப்புவது தொடா்பாக அரசு தனது கருத்தை செப். 16-ஆம் தேதி தெரிவிக்க வேண்டும் என உத்தரவிட்டனா். மேலும், இந்தப் பகுதிகளின் சுற்றுச்சூழல் முக்கியத்துவம் குறித்து, மக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் தீா்ப்பாயம் அறிவுறுத்தியுள்ளது.

