விழாக்கோலத்தில் தில்லி! பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்கும் உலகத் தலைவர்களின் பட்டியல்!!
Read at DinamaniPolitics · 1 outlet covered this
விழாக்கோலத்தில் தில்லி! பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்கும் உலகத் தலைவர்களின் பட்டியல்!!
How outlets told it

தில்லியில் நடைபெறவுள்ள 18 ஆவது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில், ரஷியா, சீனா, ஈரான் உள்ளிட்ட ஏராளமான நாடுகளின் அதிபர்கள், பிரதமர்கள் மற்றும் பிரதிநிதிகள் பங்கேற்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 18 ஆவது பிரிக்ஸ் உச்சி மாநாடு இந்திய அரசின் தலைமையில் வரும் செப். 12 மற்றும் செப். 13 ஆகிய தேதிகளில் தலைநகர் தில்லியில் நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில் ஏராளமான நாடுகளின் தலைவர்கள் பங்கேற்பதால் அவர்களை வரவேற்க தில்லி முழுவதும் விழாக்கோலம் பூண்டுள்ளது. மேலும், தில்லி உள்ளிட்ட நாட்டின் பல்வேறு நகரங்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. இந்த நிலையில், உலகின் 49.5 சதவிகித மக்கள் தொகையைக் கொண்ட 11 நாடுகள் இடம்பெற்ற பிரிக்ஸ் அமைப்பின் 18 ஆவது மாநாட்டில் பங்கேற்கும் உலகத் தலைவர்களின் பட்டியலை மத்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ளது. 1. சீன அதிபர் ஷி ஜின்பிங் 18 ஆவது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்கும் சீன அதிபர் ஷி ஜின்பிங் தில்லியில் பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து உரையாடவுள்ளார். கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் சீனாவின் அதிபராகப் பதவி வகித்து வரும் ஜின்பிங் இறுதியாக 2019 ஆம் ஆண்டு சென்னைக்கு அருகிலுள்ள மாமல்லபுரத்தில் மோடியுடனான உச்சிமாநாட்டில் பங்கேற்க இந்தியாவுக்கு வருகை தந்தார். 2. ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் உலகின் சக்திவாய்ந்த தலைவர்களில் ஒருவராக அறியப்படும் ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் 18 ஆவது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்கிறார். தில்லியில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் புதின் பிரதமர் மோடியுடன் இருநாடுகள் இடையேயான முக்கிய உறவுகள் குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். முன்னதாக, அதிபர் புதின் கடந்த 2025-ல் நடைபெற்ற 23 ஆவது இந்தியா - ரஷியா மாநாட்டில் பங்கேற்க இந்தியாவுக்கு வந்திருந்தார். 3. தென்னாப்பிரிக்கா அதிபர் சிரில் ராமபோசாதென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ராமபோசா தில்லியில் நடைபெறும் பிரிக்ஸ் மாநாட்டில் கலந்துகொள்ள அரசு முறைப் பயணமாக இந்தியாவுக்கு வருகிறார். இறுதியாக, கடந்த 2019 ஆம் ஆண்டின் சுதந்திர நாள் விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்க அதிபர் சிரில் ராமபோசா இந்தியாவுக்கு வருகை தந்தார். 4. ஈரானிய அதிபர் மசூத் பெஷேஷ்கியன் 2024 ஆம் ஆண்டு முதல் ஈரானின் அதிபராகப் பதவி வகிக்கும் மசூத் பெஷேஷ்கியன் பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க தில்லி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே போர் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், அதிபர் பெஷேஷ்கியனின் இந்திய பயணம் சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளது. 5. இந்தோனேசிய அதிபர் பிரபாவோ சுபியாந்தோஇந்தோனேசிய அதிபர் பிரபாவோ சுபியாந்தோ பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க இந்தியாவுக்கு வருகை தருகிறார். இந்தியா மற்றும் இந்தோனேசியா இடையே நீண்டகால உறவுகளைத் தொடர்ந்து அதிபர் சுபியாந்தோவின் வருகை கவனம் பெறுகிறது. கடந்த 2025 குடியரசு நாள் விழாவில் அதிபர் சுபியாந்தோ சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார். 6. மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் மலேசியா நாட்டின் பிரதமர் அன்வர் இப்ராஹிம் தில்லியில் நடைபெறும் பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்கிறார். இந்தப் பயணத்தில், பாதுகாப்பு, பொருளாதாரம், வெளியுறவு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இருநாடுகளுக்கும் இடையேயான உறவுகள் குறித்த முக்கிய பேச்சுவார்த்தைகள் நடைபெறும் எனத் தெரிவிக்கப்படுகிறது. இவர்களுடன், எகிப்து அதிபர் அப்தெல் ஃபதாஹ் எல்-சிசி, எத்தியோப்பியா பிரதமர் அபிய் அகமது அலி, சௌதி அரேபியாவின் வெளியுறவு அமைச்சர் இளவரசர் ஃபைசல் பின் ஃபர்கான் அல் சௌத், அபுதாபி பட்டத்து இளவரசர் ஷேக் காலெத் பின் முகமது பின் சயத் அல் நஹ்யான், பிரேசில் வெளியுறவு அமைச்சர் மௌரோ வியெய்ரா, உகாண்டா துணை அதிபர் ஜெசிகா அலுபோ, நைஜீரியா துணை அதிபர் சென். காஷிம் ஷெட்டிமா ஆகியோரும் பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்கின்றனர். மேலும், இந்த மாநாட்டில் கியூபா வெளியுறவு அமைச்சர் புரூனோ ரோட்ரிக்ஸ் பரில்லா, பெலாரஸ் வெளியுறவு அமைச்சர் மக்சிம் ரைசென்கோவ், வியத்நாம் பிரதமர் லே மின் ஹங், கஜகஸ்தான் அதிபர் காசிம் ஜோமார்ட் டோகயேவ் உள்ளிட்டோரும் பங்கேற்பதாக, மத்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. முன்னதாக, பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகள் இணைந்து உருவாக்கிய பிரிக்ஸ் அமைப்பில் எகிப்து, எத்தியோப்பியா, ஈரான், ஐக்கிய அரபு அமீரகம், சௌதி அரேபியா மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகளும் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
