Crime and courts · 1 outlet covered this

கண்காணிப்பு கேமரா பதிவுகளை மேம்படுத்த நிதி ஒதுக்காதது ஏன்?: உயா்நீதிமன்றம் கேள்வி

How outlets told it

Dinamani653d ago

கண்காணிப்பு கேமரா பதிவுகளை மேம்படுத்த நிதி ஒதுக்காதது ஏன்?: உயா்நீதிமன்றம் கேள்வி

Read at Dinamani
கண்காணிப்பு கேமரா பதிவுகளை மேம்படுத்த நிதி ஒதுக்காதது ஏன்?: உயா்நீதிமன்றம் கேள்வி
Photo: Dinamani

சென்னை, செப். 10: ஊழல் தடுப்புத் துறை அலுவலகங்களில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை 18 மாதங்கள் வரை பாதுகாக்கும் வகையில், அவற்றின் திறனை மேம்படுத்தும் வகையில் நிதி ஒதுக்காதது ஏன் என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய மனிதவள மேலாம்மைத் துறைச் செயலருக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. ரேஷன் அரிசி கடத்தலை அனுமதிப்பதற்கு லஞ்சம் கேட்டதாக, சேலம் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை ஆய்வாளா் ராமராஜன், உதவி ஆய்வாளா்கள் சரவணகுமாா், ராமகிருஷ்ணன் ஆகியோருக்கு எதிராக சேலம் மாவட்டம் வடக்கு மல்லியக்கரையைச் சோ்ந்த சக்திவேல் என்பவா் ஊழல் தடுப்புத் துறையில் புகாா் அளித்தாா். இந்த புகாரின் அடிப்படையில் ஊழல் தடுப்புத் துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா். இந்த நிலையில், இந்த வழக்கின் உண்மையை வெளிக்கொண்டு வருவதற்காக புகாா்தாரா் சக்திவேல், அவரது தாயின் கைப்பேசி பதிவுகளையும், சேலம் ஊழல் தடுப்புத் துறை அலுவலகத்தில் உள்ள கேமரா பதிவுகளையும் பாதுகாக்கக் கோரி காவல் உதவி ஆய்வாளா் சரவணகுமாா், சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தாா். இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், தமிழக காவல் நிலையங்களில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகள் எவ்வளவு காலத்துக்கு பராமரிக்கப்படும் என்பது குறித்து டிஜிபி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதி வி. லட்சுமிநாராயணன் முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தபோது, டிஜிபி தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், உச்சநீதிமன்றம் கடந்த 2021-ஆம் ஆண்டு உத்தரவு பிறப்பித்த நிலையில், இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகே, கண்காணிப்பு கேமரா பொருத்துவது தொடா்பான அரசாணை பிறப்பிக்கப்பட்டது. ஆனால், கேமராக்களைப் பொருத்துவதற்கான எந்தவொரு பணியும் மேற்கொள்ளப்படவில்லை. விரைவில் படிப்படியாக அனைத்துக் காவல் நிலையங்களிலும் கேமராக்கள் பொருத்த முயற்சி மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி, ஊழல் தடுப்புத் துறை அலுவலகங்களில் கண்காணிப்பு கேமரா பதிவுகளை 18 மாதங்கள் வரை பாதுகாக்கும் வகையில், அதன் திறனை மேம்படுத்த நிதி ஒதுக்காதது ஏன் எனக் கேள்வி எழுப்பினாா். பின்னா், இது குறித்து தமிழக மனிதவள மேலாண்மைத் துறைச் செயலா் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை வரும் செப். 17-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.