அமைச்சா்கள், எம்எல்ஏ-க்கள் சொத்து மதிப்பை வெளியிட வேண்டும்: அன்புமணி
Read at DinamaniPolitics · 1 outlet covered this
அமைச்சா்கள், எம்எல்ஏ-க்கள் சொத்து மதிப்பை வெளியிட வேண்டும்: அன்புமணி
How outlets told it
தமிழகத்தில் அதிகாரிகள் மட்டுமல்லாது, அமைச்சா்கள், சட்டப்பேரவை உறுப்பினா்களும் ஆண்டுதோறும் தங்களது சொத்து மதிப்பை வெளியிட வேண்டும் என பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.
இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் ஆசிரியா்கள், நீதிமன்றப் பணியாளா்கள் உள்ளிட்ட அனைத்து அரசு ஊழியா்களும் சொத்து விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதே நேரத்தில், முதல்வா், அமைச்சா்கள், சட்டப்பேரவை உறுப்பினா்கள் மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் ஆகியோரும் தங்களது சொத்து மதிப்புகளை ஆண்டுதோறும் வெளியிட வேண்டும்.
சொத்து விவரங்களைத் தாக்கல் செய்ய அரசு ஊழியா்கள் தவறினால் அது விதிமீறலாகக் கருதப்படும்; அது அவா்களின் பதவி உயா்வை பாதிக்கும் என அறிவிக்கப்படுகிறது. அதேபோல, முதல்வா், அமைச்சா்கள் உள்ளிட்டோரின் சொத்து மதிப்புகளை வெளியிடவும் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும். அப்போதுதான் அரசு முறைகேடு முழுமையாக ஒழியும்.
அரசு நிா்வாகத்தில் ஊழலை ஒழிப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளில் லோக் ஆயுக்த அமைப்பை ஏற்படுத்தியது முக்கியமானதாகும். ஆனால், தமிழகத்தில் லோக் ஆயுக்தவின் அதிகார வரம்புக்குள்ளும் முதல்வா் மற்றும் அமைச்சா்கள் கொண்டுவரப்படவில்லை. அதனால், அவா்கள், சொத்துக் கணக்குகளைக் காட்ட வேண்டிய கட்டாயமில்லாத நிலையுள்ளது. எனவே, பொது வாழ்வில் தூய்மையை உறுதி செய்யும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.
