செங்கடல் தீவைக் கைப்பற்றிய ஹௌதிகள்! சௌதியின் நிலை என்ன?
Read at DinamaniWorld · 1 outlet covered this
செங்கடல் தீவைக் கைப்பற்றிய ஹௌதிகள்! சௌதியின் நிலை என்ன?
How outlets told it

ஈரானின் ஆதரவு பெற்ற யேமனின் ஹௌதி கிளர்ச்சிப்படை செங்கடலின் நுழைவில் அமைந்துள்ள முக்கிய தீவைக் கைப்பற்றியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. யேமனின் அரசுப்படைகளுக்கும், ஹௌதி கிளர்ச்சிப்படைக்கும் கடந்த சில நாள்களாக மோதல்கள் வெடித்துள்ளன. இதில், சௌதி அரேபியாவின் ஆதரவு பெற்ற யேமன் அரசுப்படைகளிடம் இருந்து முக்கிய துறைமுக நகரமான மோக்காவை ஹௌதிகள் நேற்று (செப். 10) கைப்பற்றினர். இதனைத் தொடர்ந்து, மோக்கா நகரத்தின் மீது சௌதி படைகள் வான்வழித் தாக்குதல்கள் நடத்தி வந்தன. இருப்பினும், இந்தத் தாக்குதலால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து இதுவரை எந்தவொரு தகவலும் வெளியிடப்படவில்லை. இந்த நிலையில், உலகின் 12 சதவிகித வர்த்தகப் போக்குவரத்து நடைபெறும் செங்கடல் பகுதியின் நுழைவில் அமைந்துள்ள மாயூன் எனும் தீவை ஹௌதிகள் இன்று (செப். 11) கைப்பற்றியதாக, யேமன் ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன்மூலம், செங்கடல் பகுதியின் நுழைவு வாயிலான பாப் அல்-மண்டாப் நீரிணை முழுவதுமாக ஹௌதிகளின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்படுவதாகக் கூறப்படுகிறது. மேலும், யேமனுக்கு எதிரான நடவடிக்கைகளைக் கைவிட்டு சௌதி அரேபியா பேச்சுவார்த்தைக்கு முன்வர வேண்டுமென ஈரான் அரசு வலியுறுத்தியுள்ளது. முன்னதாக, ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் போரில் களமிறங்கியுள்ள ஹௌதிகள், அமெரிக்காவின் ஆதரவு நாடான சௌதி அரேபியாவுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. ஏற்கெனவே, பாப் அல்-மண்டாப் நீரிணை வழியாக சௌதி அரேபியாவின் கப்பல்கள் செல்ல ஹௌதிகள் தடை விதித்தனர். மேலும், அவ்வழியாகச் செல்ல முயன்ற சௌதி கப்பல்கள் மீது அவர்கள் தாக்குதல் நடத்தி வந்தது குறிப்பிடத்தக்கது.
