வறட்சியால் கருகும் மக்காச்சோளம் நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை
விருத்தாசலம்: விருத்தாசலம் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்கு, ஆர்.டி.ஒ., வெங்கடேசன் தலைமை தாங்கினார். நேர்முக உதவியாளர் உதயகுமார் முன்னிலை வகித்தார். இதில் வேளாண்துறை, பொறியியல் துறை, வனத்துறை, ஊரக வளர்ச்சித்துறை, மின் துறை உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் விவசாயிகள் பேசுகையில், மங்களூர், நல்லுார் ஒன்றியங்களில் சாகுபடி செய்யப்பட்டுள்ள மக்காச்சோளம் கடும் வறட்சியால் கருகி வருகிறது. எனவே, மக்காச்சோளம் சாகுபடி செய்த விவசாயிகளுக்கு மானியம் வழங்க வேண்டும். விஜயமாநகரம் கிராமத்தில் வி.ஏ.ஓ., அலுவலகம் கட்டி தர வேண்டும். புதுக்கூரைபேட்டை, விஜயமாநகரம் பகுதியில் உள்ள விவசாய நிலங்களுக்கு அடையாள எண் பெற முடியாததால், பயிர் காப்பீடு செய்ய அதிகாரிகள் உதவ வேண்டும். கடந்த மூன்று மாதமாக நிலவி வரும் வறட்சியால், முந்திரி பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் என்.எல்.சி.,யில் இருந்து பரவனாற்றில் வீணாக வெளியேறும் உபரி நீரை, விருத்தாசலம் பகுதிக்கு பைப்லைன் மூலம் கொண்டு வந்து விவசாய பாசனத்திற்கு உதவ வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை விவசாயிகள் முன் வைத்தனர்.

