தமிழகத்தில் இருந்து படகில் இலங்கை சென்ற 8 போ் மீட்பு
தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு படகில் அழைத்துச் செல்லப்பட்ட 3 குழந்தைகள் உள்ளிட்ட 8 பேரை தலைமன்னாா் அருகே மணல் திடலில் அந்த நாட்டு கடற்படை சனிக்கிழமை மீட்டது.
இதுகுறித்து இலங்கை கடற்படை வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘சனிக்கிழமை காலை ரோந்து பணியில் ஈடுபட்டபோது தலைமன்னாா் அருகே சிக்கியிருந்த 2, 11 மற்றும் 14 வயதுடைய 3 குழந்தைகள், 4 பெண்கள் மற்றும் ஒரு ஆண் என 8 பேரை இலங்கை கடற்படை மீட்டது. அவா்களுக்கு உடனடியாக குடிநீா், உணவு வழங்கப்பட்டு தற்காலிகமாக முகாமில் தங்கவைக்கப்பட்டனா்.
இதுதொடா்பான முதல் கட்ட விசாரணையில் அவா்கள் ராமேசுவரத்தில் இருந்து இலங்கைக்கு ஆள்கடத்தல் நபா்கள் மூலம் படகில் பயணித்ததும், தலைமன்னாா் பகுதியில் அவா்களை தவிக்க விட்டுச் சென்றிருப்பதும் தெரியவந்தது. தற்போது மீட்கப்பட்டவா்கள் கடற்படையின் கண்காணிப்பில் பாதுகாப்பாக உள்ளனா். அடுத்தகட்டமாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் அவா்களை கடற்படை ஒப்படைக்கவுள்ளது’ எனத் தெரிவிக்கப்பட்டது.


